தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மன்னரான திருடன்! (1)

மன்னரான திருடன்! (1)

மன்னரான திருடன்! (1)


PUBLISHED ON : ஜூலை 22, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 22, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்னொரு காலத்தில், முகுந்தன் என்ற ஏழை விவசாயி ஒருவன் இருந்தான். அவனுக்கு வர்மா, சர்மா என்ற இரு மகன்கள் இருந்தனர்.

அண்ணன் வர்மாவை விட தம்பி சர்மா அழகனாகவும், சாமர்த்தியமாகவும் இருந்தான். இது அண்ணனுக்குப் பிடிக்கவில்லை; பொறாமைப்பட்டான். வயது ஆக, ஆக அண்ணனின் பொறாமையும், விரோதமும் வளர்ந்தே வந்தன. அதே மாதிரி தம்பியின் அழகும், திறமையும் வளர்ந்தன.

தம்பியை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்ற தீய எண்ணம் கொண்டான் வர்மா.

ஒருநாள் -

தம்பியுடன் ரொம்ப அன்பாகப் பேசியபடியே காட்டுக்குள் வெகு தூரம் அழைத்துச் சென்றான். தக்க சமயம் பார்த்து திடீரென்று, அவனை அப்படியே ஒரு மரத்துடன் சேர்த்து இறுகக் கட்டிப் போட்டான்.

''நீ இங்கேயே இப்படியே பசியாலும், தாகத்தாலும் சாகவேண்டியதுதான். இந்தக் காட்டுக்குள் யாரும் வரமாட்டார்கள்; உனக்கு உதவவும் மாட்டார்கள்,'' என்று கூறி தன் வழியே திரும்பிப் போய் விட்டான் அண்ணன்.

தன் மீது அண்ணனுக்கு அன்பில்லை என்று தெரியும். ஆனால், இப்படி ஒரு குரூரமான காரியம் செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை சர்மா. பகலெல்லாம் பசியுடன் கட்டுண்ட நிலையிலேயே இருந்தான்.

இருட்டும் சமயத்தில் அந்த வழியாக ஆடுகளை ஓட்டியபடி ஒரு கிழவன் வந்தான். அவன் முதுகில் பெரிய கூன் இருந்தது.

மரத்தில் கட்டுண்டு கிடக்கும் சர்மாவைக் கண்ட கிழவன், ''யாரப்பா உனக்கு இந்தக் கொடிய தண்டனையைக் கொடுத்தது?'' என்று கேட்டான்.

''எனக்கு யாரும் தண்டனை கொடுக்கவில்லை. இது ஒரு சிகிச்சை,'' என்றான் சர்மா.

''சிகிச்சையா? நீ என்ன சொல்கிறாய்?'' என்று ஆச்சரியத்துடன் கேட்டான் கிழவன்.

''உன்னைப் போலவே என் முதுகிலும் கூன் இருந்தது. அதை நிமிர்த்தி நேராக்க, ஒரு வைத்தியர் என்னை இப்படி இந்த மரத்துடன் கட்டிவிட்டுப் போனார். இப்போது கூன் நிமிர்ந்து நேராகிவிட்டது. இது வெறும் கட்டு மட்டுமல்ல, தகுந்த முறையில் தக்க இடத்தில் பல முடிச்சுக்களைப் போட்டுக் கட்ட வேண்டும். அப்போதுதான் கூன் நிமிரும். அந்த ரகசியமும் எனக்குத் தெரியும்,'' என்றான் சர்மா.

யாருக்குத்தான் ஆசை இருக்காது? கூன் முதுகுடைய கிழவன், சர்மாவிடம் கெஞ்சினான்.

''தம்பி, தம்பி! என் கூனையும் நிமிர்த்திவிடப்பா. உனக்குப் புண்ணியமாக இருக்கும்,'' என்றான்.

சர்மாவும் அதற்கு ஒப்புக் கொண்டான். தன்னைக் கட்டவிழ்த்து விடுதலை செய்யும்படி கூறினான். கிழவனும் அப்படியே செய்தான்.

பின், கிழவனை மரத்தோடு வைத்து பலமாகக் கட்டினான் சர்மா.

''இப்படியே மூன்று நாட்கள் அன்ன ஆகாரமின்றி இருக்க வேண்டும். கூன் நிமிர்ந்து போகும்,'' என்று கூறியபடியே, கிழவனது ஆடுகளை ஓட்டியவாறு சென்றான்.

பாவம், கிழவனுக்கு அப்போதுதான் ஏமாற்றப்பட்டது புரிந்தது.

''ஏய்! ஆடுகள்! என் ஆடுகள்!'' என்று கத்தினான்.

ஆனால், என்ன பலன்? திரும்பிக் கூடப் பார்க்கவில்லை சர்மா. ஆடுகளைச் சந்தையில் விற்று பணமாக்கினான்.

இப்படியே அடுத்தடுத்துப் பல திருட்டுக்களைச் செய்தான். மாட்டு மந்தைகளை இழந்தவர்கள் பலர்; குதிரைகளைப் பறி கொடுத்தவர் சிலர். சர்மாவின் புகழ் நாடெங்கும் பரவி விட்டது.

மன்னரின் காதுக்கு சர்மாவின் செயல்கள் எட்டின. இவ்வளவு திறமை வாய்ந்த பக்காத் திருடனை எப்படியாவது பிடித்து வரும்படி தம் வீரர்களுக்கு கட்டளையிட்டார். சிறிது நாட்களில் மன்னர் முன் நிறுத்தப்பட்டான் சர்மா.

''பல திருட்டுக்களைச் செய்த உனக்கு மரண தண்டனைதான் விதிக்க வேண்டும். ஆனாலும் உன் திறமையைப் பாராட்டி ஒரு நிபந்தனை விதிக்கிறேன். இந்நாட்டின் எல்லையில் ஒரு பயங்கரமான ராட்சத மிருகம் இருக்கிறது. அதனிடம் ஒரு பறக்கும் குதிரை உள்ளது. எப்படியாவது அதை திருடி வந்தால் உனக்கு விடுதலை. இல்லாவிட்டால் உன் தலை தரையில் உருளும்,'' என்றார் மன்னர்.

''ஹா... ஹா இவ்வளவுதானே? பறக்கும் குதிரையோடு பறந்து வருகிறேன் போதுமா?'' என்று புறப்பட்டான் சர்மா.

பயங்கர மிருகம் வசிக்கும் கோட்டைக்குப் போவது அவனுக்கு அப்படியொன்றும் சிரமமாக இல்லை. அங்குள்ள குதிரை லாயத்துக்குள் போய், வைக்கோல்களிடையே ஒளிந்து கொண்டான். அழகான, கம்பீரமான குதிரை; ஆனால், மந்திர சக்தி வாய்ந்தது. அதைக் கட்டியிருந்த இடத்துக்கு மேலே அந்த டிராகன் படுத்திருந்தது. மெல்லக் கையை நீட்டிக் குதிரையின் கடிவாளத்தைப் பற்றினான்.

உடனே, குதிரை கனைத்தது. அதன் குரல் கேட்டு விழித்த மிருகம், ''ஏன் கனைத்தாய்? யாராவது மனிதர்களா?'' என்று கேட்டது.

''இல்லை!'' என்று பதில் கூறியது.

''அந்தக் குதிரை பேசும் சக்தி படைத்தது. டிராகன் மறுபடியும் தூங்க ஆரம்பித்தது. இரண்டாவது தடவையும் சர்மா அதன் கடிவாளத்தைத் தொட, குதிரை கனைக்க, டிராகன் விழித்தது. இந்தத் தடவையும் குதிரையினால் தன் கடிவாளத்தைத் தொட்டது யார் என்று கூற முடியவில்லை.

சர்மா அத்தனை திறமையாக ஒளிந்து கொண்டிருந்தான். மூன்றாவது தடவை குதிரை கனைத்தபோது, அடிக்கடி கனைத்துத் தூக்கத்தைக் குலைக்கிறதே இந்தக் குதிரை என்று டிராகனுக்கு மகா கோபம் வந்தது.

ஆகவே, கீழே இறங்கி வந்து, அதை நையப்புடைத்துவிட்டு, போய்ப் படுத்துக் கொண்டது. அடுத்த தடவை சர்மா அதன் கடிவாளத்தைப் பிடித்த போது குதிரை கனைக்கவில்லை. ஆகவே, சர்மா குதிரையை கட்டவிழ்த்து அதன் மீது ஏறிக் கொண்டான். அடுத்த வினாடி குதிரை ஆகாயத்தில் பறந்தது.

பறந்து கொண்டே சர்மா கூவினான்.

''பொல்லாத மிருகமே! உன் பறக்கும் குதிரை எங்கே என்று யாராவது கேட்டால், பக்காத் திருடன் சர்மா என் கண் முன்னே அதைத் திருடிச் சென்றான் என்று சொல்லு!'' என்றான்.

பாவம் டிராகன்! அதனால் ஆகாயத்தில் பறக்கும் சர்மாவை என்ன செய்ய முடியும்?

மன்னர் முன் பறக்கும் குதிரையோடு போய் இறங்கினான்.

''ஓ! பறக்கும் குதிரைதானே? இதைக் கொண்டு வருவது அப்படியொன்றும் கஷ்டமில்லை. அந்த டிராகனிடம், ஒரு அற்புதமான போர்வை இருக்கிறது. அதன் ஓரங்களிலெல்லாம் மணிகள் வைத்து தைத்திருக்கும். அதை எடுத்து வா பார்ப்போம்,'' என்றார்.

''அந்தப் போர்வைதானே வேண்டும்?'' என்றபடி சர்மா மறுபடியும் மிருகத்தின் கோட்டைக்குப் போனான்.

இருட்டும் வரை காத்திருந்தான். பின் கோட்டைச் சுவர் மீது ஏறி, அந்த மிருகம் படுத்திருக்கும் அறைக்கு சென்றான். வெளிச்சத்துக்காக ஒரு திறப்பு இருந்தது கூரையில். அதன் அருகே படுத்தவாறு, ஒரு சங்கிலியைக் கீழே தழைய விட்டான். அதன் நுனியில் ஒரு கொக்கி இணைத்திருந்தது. மிருகமும், அதன் மனைவியும் போர்வையை போர்த்தியபடி படுத்திருந்தனர். சர்மா லாவகமாக கொக்கியைப் போர்வையில் மாட்டி மெல்ல மேலே இழுக்கலானான்.

ஆனால், அதில் இணைத்திருந்த ஏராளமான மணிகள், 'கணகண' வென்று ஒலி எழுப்பவே விழித்த டிராகன், தன் மனைவிதான் போர்வையைத் தன் பக்கம் இழுக்கிறாளாக்கும் என்று நினைத்து, ''ஏய், என்னது, எல்லாப் போர்வையும் நீயே இழுத்துக் கொண்டால் எனக்குக் குளிராதா?'' என்று நினைத்து கோபத்துடன் போர்வையை வெடுக்கென்று தன் பக்கமாக இழுத்தது.

அந்த வேகத்தில் கூரையிலிருந்து கம்பியினால் கொக்கி போட்டு இழுத்துக் கொண்டிருந்த சர்மா, பொத்தென்று டிராகன் மீதே வந்து விழுந்தான்.

அவ்வளவுதான் டிராகன் சும்மா இருக்குமா? அகப்பட்டுக் கொண்டான் சர்மா.

- தொடரும்...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us