
வணங்காமுடி ராஜ்யத்தில் திராட்சை விவசாயம் செய்தார் கேசவன். ஒவ்வொரு ஆண்டும் நிறைய மகசூல் கிடைத்தது. அந்த ஆண்டில் மட்டும், மிக குறைவான மகசூல்.
மிகவும் வருந்திய கேசவன், மற்ற விவசாயிகளிடம் விசாரித்தார். மகசூல் குறைவுக்கான காரணத்தை கேட்டார். எவராலும் சரியான காரணத்தை கூற இயலவில்லை.
ஒரு நாள் -
விவசாயி போல் மாறுவேடம் அணிந்து, மக்கள் நலனை அறிய நகர்வலம் வந்தார் மன்னர். அவரிடமும் சந்தேகத்தை கேட்டார் கேசவன்.
'திராட்சை தோட்டத்தை முறையாக பராமரிக்காததால் உரிய மகசூல் கிடைக்கவில்லை...' என்றார் மன்னர்.
'யார்... முறையாக பராமரிக்கவில்லை...'
'விவசாயம் செய்பவர்தான் பராமரிக்க வேண்டும்...'
'என்னை குறை கூறி கெடுக்க நினைக்கிறாயா... மன்னரிடம் கூறி தக்க தண்டனை பெற்று தருகிறேன்... அரசவைக்கு வா...' என அழைத்தார் கேசவன்.
மறுபதில் கூறாமல் உடன் சென்றார் மன்னர். வழியில் வேடத்தை கலைத்தார்.
திடுக்கிட்ட கேசவன், 'மன்னித்து விடுங்கள் மன்னா...' என, பயத்துடன் கூறினார்.
மீண்டும், 'முறையாக உழைத்தால் மட்டுமே லாபம் பெருகும்...' என அறிவுறுத்தினார் மன்னர்.
அந்த அறிவுரைப்படி கடுமையாக உழைத்தார் கேசவன். நல்ல லாபம் கிடைத்தது. மன்னரை சந்தித்து, நன்றி சொன்னார்.
தளிர்களே... கடுமையாக உழைத்து முன்னேறும் குறிக்கோளை வாழ்வில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
எஸ்.லக்சிதா

