PUBLISHED ON : செப் 26, 2020

வாழ்வில் எவ்வளவு உயர்ந்தாலும் படித்த பள்ளி பெரும் மகிழ்ச்சி தரும். மகாத்மா காந்தி படித்த பள்ளி பற்றிய விபரங்களை பார்ப்போம்...
குஜராத் மாநிலம், போர்பந்தரில் பிறந்தார் காந்தி. பின், குடும்பத்தாருடன் ராஜ்காட் நகருக்கு குடி பெயர்ந்தார்; அங்குள்ள பள்ளியில், 1880 முதல், 1887 வரை படித்து மெட்ரிகுலேஷன் வகுப்பு தேர்ச்சி பெற்றார். இந்த பள்ளி ஆரம்பத்தில், ராஜ்காட் பள்ளி என அழைக்கப்பட்டது. சவுராஷ்டிரா பகுதியில் துவக்கப்பட்ட முதல் ஆங்கில பயிற்று மொழி பள்ளி இது தான்.
இந்த பள்ளி...
* ஐரோப்பிய நாடான பிரிட்டன், டீயூடர் கட்டடக் கலை பாணியில் கட்டப்பட்டது. வெளியே, மூலையில் பிரம்மாண்ட சக்கராவை காணலாம்
* இது, தி ஆல்பிரெட் உயர்நிலைப்பள்ளி என்ற பெயரில், 1853ல் தரம் உயர்த்தப்பட்டது
* சுதந்திரமடைந்த பின், மோகன்தாஸ் காந்தி என்ற பெயரைப் பெற்றது
* இந்த பள்ளியை, 2017ல் அருங்காட்சியமாக மாற்றியது குஜராத் அரசு. இதை, செப்., 30, 2018ல் துவக்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
* பள்ளியின் இரண்டு மாடியிலும் இருந்த வகுப்பறைகள், 39 கேலரிகளாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. முதலில் உள்ள, 18 கேலரிகளில் காந்தியின் பிறப்பு, பள்ளி படிப்பு, சுதந்திர போராட்ட கால வரலாற்றுப் புகைப்படங்கள், காட்சிப்படுத்தப்பட்டுள்ளன
* காந்தியின் எண்ணம், கொள்கைகளை பிரதிபலிக்கும் காலரிகள், இரண்டாவது மாடியில் அமைக்கப்பட்டுள்ளன. சத்தியம், நேர்மை, உணர்வுகளை கட்டுப்படுத்தல் மற்றும் அகிம்சை பற்றி இவற்றில் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது
* காந்தி ஜெயந்தியும், சர்வோதய தினமும் தவறாமல் கொண்டாடப்படுகின்றன
* காந்தியின் அழகிய சிலை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது
* குழந்தைகளின், ஆர்வத்தை துாண்டும் வகையில், காந்தியின் வாழ்க்கை சித்திரம், ஒலி, ஒளி காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது
* காந்தி அமர்ந்து படித்த வகுப்பறைகள், சிறப்பாக பேணப்படுகின்றன.
குஜராத் மாநிலம், ராஜ்காட் நகராட்சி நிர்வாகமும், சுற்றுலா வளர்ச்சிக் கழகமும் இணைந்து அருங்காட்சியகத்தைப் பராமரிக்கின்றன.
- ராஜிராதா
