PUBLISHED ON : ஜூலை 09, 2010

அனைவருக்கும் எனது அன்பு! * புலி நாயாகுமா ?
செல்ல நாயை வேறு பிராணியாக்கி பார்க்கும் வழக்கம், இப்போது சீனர்களிடம் அதிகரித்து வருகிறது. அனிமல் பார்லருக்கு நாயை கொண்டு சென்று ஷாம்பூ குளியல் போட வைக்கின்றனர். பிறகு புலி, கரடி போல ரோமத்துக்கு டை அடித்து அழகு பார்க்கின்றனர். "சவ் சவ்' என்ற ரக நாய்க்கு ரோமம் அதிகம். உருவமும் குண்டு. எனவே கரடி வேஷம் பொருந்துமாம். டாபர்மென் நாய்கள் புலியாகவும், அல்சேஷன் ரக நாய்கள் அணில்களாகவும் மாறுகிறது. இதற்கு 1800 ரூபாய் செலவாகிறதாம்.
எப்படி எல்லாம் செல்ல பிராணிகளை மனிதர்கள் நேசிக்கின்றனர். ஆனால், நாய்கள் காட்டும் அன்பிற்கும், விசுவாசத்திற்கும் நன்றிக்கும் மனிதர்களால் எதை கொடுத்து ஈடு செய்ய முடியும்?
* தூங்கிக்கொண்டே இருக்கணுமா ?
பொழுபோக்குகள் பல பல. அதில் ஒன்று தூங்குவது. நிறைய பேர் கேப் கிடைச்சா தூங்கி விடுவர். பள்ளி நேரத்தில் தூக்கம் தூக்கம், தூங்கி கொண்டே இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று பல பேர் ஆசைப்படுவர். தூக்கம் வரவில்லையே என புலம்புகிறவர்கள் ஒருபுறம் இருக்க, ஒரு நாளைக்கு 8 மணி நேரத்துக்கு மேல் தூங்குபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். நீண்ட நேரம் தூங்குவதால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் வருவதுடன் நம் வாழ்நாளில் 17 சதவீதம் குறையும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பொதுவாக சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 6 முதல் 8 மணி நேரம் நன்றாக தூங்கினாலே போதும். குழந்தைகளுக்கு இது பொருந்தாது. பிறந்த குழந்தைகள் வளர வளர தூங்கும் நேரம் குறைந்து கொண்டே போகும். பிறந்த குழந்தைகளுக்கு அதிக நேர தூக்கம் தேவை. அவைகள் தூங்கி கொண்டே இருக்கும். ஆனால், குழந்தைகளை போல தூங்கும் பழக்கம், பள்ளி செல்லும் மாணவர்களிடமும், சில பொரியவர்களிடமும் உள்ளது. மனிதர்களின் தூக்கம் குறித்து ஆய்வு செய்த வல்லுநர்கள், 8 மணி நேரத்துக்கு மேல் தூங்குவதால் மனிதனின் சராசரி வாழ்நாள் 17 சதவீதம் குறையும் என்று தெரிவித்துள்ளனர்.
நீண்ட நேரம் தூங்குவதால் சீரான உடல் இயக்கங்கள் தடைபடும். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ஹார்மோன் கோளாறுகள் மற்றும் இதய நோய் உள்ளிட்ட தீராத கோளாறுகள் வர அதிக வாய்ப்பு உள்ளது. சில சமயங்களில், நரம்பு மண்டல பாதிப்பு (தைராய்டு பிரச்னை) ஏற்படலாம் என மும்பை மருத்துவர் பிரகாஷ் ஒல்லா கூறுகிறார். கட்டுப்பாடற்ற தூக்கம் உடல் பருமனாவதற்கு வழிவகுக்கும். மேலும் உடல் சோர்வு ஏற்படுவதுடன் கோபம் உள்ளிட்ட பல பிரச்னைகள் வரும். அதிக நேரம் தூங்குபவர்களில் 15 சதவிதம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர் என மனநல மருத்துவர் சுனிதா துபே தெரிவித்துள்ளார்.
குறைவான நேரம் தூங்கினாலும் ஆழ்ந்த தூக்கம் மிக அவசியம். தினமும் உடற்பயிற்சி, யோகா அல்லது நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலம் இது சாத்தியமாகும். அதிக தூக்கத்தால் உணவு முறைகள் மாறி அதனால், பல்வேறு விளைவுகள் ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். நன்றாக தூக்கம் வர தூங்க செல்வதற்கு 3 மணி நேரம் முன்பு, இரவு உணவு சாப்பிடுங்கள். டின்னருக்கு முன் பழம் அல்லது பால் குடிக்கலாம். தினமும் உடற்பயிற்சி அவசியம். இதனால் நன்றாக தூக்கம் வருவதுடன் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். வெளியிலிருந்து வீட்டிற்கு வந்து, சில நிமிடங்களுக்கு பின் குளிப்பதன் மூலம் நன்றாக தூக்கம் வரும். படுக்கைக்கு செல்லும் முன் மேலோட்டமாக புத்தகம் படித்தால், மெல்லிசை பாடல்கேட்பதன் மூலம் ஆழ்ந்து தூங்க முடியும். காலையில் 6 மணிக்கு நடைபயிற்சி மேற்கொண்டால் நாள் முழுவதும் புத்துணர்ச்சி கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
* மாட்டுத் தோல் ஷூவில் லேஸ் !
உலகின் மிகவும் பழசான ஷூ, அர்மீனியாவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு வயசு 5500 ஆண்டுகள். அதாவது எகிப்தின் முதல் பிரமிடான ஜிசாவை விட 1000 ஆண்டு முன்பே தயாரிக்கப்பட்டது. மாட்டுத் தோலில் செய்யப்பட்ட ஷூவில் லேஸ் உண்டு. சைஸ் வித்தியாசமின்றி எந்த பாதத்திற்கும் பொருந்தும் வகையில் மூதாதையர் உருவாக்கியது. உலகின் மிக பழைய ஷூவை கண்டுபிடித்துவிட்டோம். அது ஆணுடையதா, பெண்ணுடையதா என்பதுதான் தெரியவில்லை என்கிறார் அயர்லாந்தின் கார்க் பல்கலை கழக விஞ்ஞானி ரான்பின்யாசி.
* நான் நல்லா படிக்க என்ன செய்யணும் ?
சில கட்டளைகள் தருகிறேன். ஒன்று ஒன்றாகப் கடைப்பிடிக்க, நீங்கள் மிக நல்ல படிப்பாளியாகி விடுவீர்கள். பெற்றோர், உறவினர், பள்ளி நண்பர்கள், ஊர் என எல்லாரும் பாராட்டுவர். ஒரே ஒரு நாள் கூட பள்ளிக்கு லீவு போட கூடாது. பள்ளியில் கொடுக்கும் எழுத்து வேலைகள் அனைத்தும் தவறாமல் முடிக்க வேண்டும். இப்போது நமக்கு மிக மிக முக்கியம் கல்வி என்பதை அடிக்கடி நினைவில் கொள்ள வேண்டும். படிப்பை தவிர வேறு எந்த எண்ணம் தோன்றினாலும், "உனக்கு அனுமதி இல்லை' என விரட்டி விடுங்கள். அல்லது, "நல்ல மார்க் எடுக்க வேண்டும்' என்று அழுத்தி திரும்ப திரும்ப சொல்லுங்கள். மிக அமைதியாய் ஆண்டவன் பெயரை சொல்லுங்கள். நமக்கு மிக முக்கியம் தன்மானம். யாரும் நம்மை திட்ட, அவமானம் படுத்த கூடாது. அதற்கு நாம் நன்றாக படிக்க வேண்டும். படிப்பு என்பது உணவு போல. விளையாட்டு, கம்ப்யூட்டர், "டிவி', தூக்கம் எல்லாம் ஊறுகாய் காய்கறி, ரசம், குழம்பு, மோர் போல அதற்கேற்ப நேரம் ஒதுக்க வேண்டும். இதை எல்லாம் கடைபிடித்தால், "எப்படி இருந்த நான் எப்படி ஆயிட்டேன்!' என நீங்கள் காலரை தூக்கலாம். ஹீரோவாக ஆகலாம். மற்றவர்களுக்கு உதாரணம் ஆகலாம். நண்பர்களே நீங்கள் ஜெயிக்க வேண்டும். அப்படி ஜெயித்த உங்கள் கதையை எனக்கு எழுதுங்கள். படிப்பதை மிக ரசித்து விரும்பி செய்யுங்கள்.
அன்புடன் அங்குராசு.
