PUBLISHED ON : நவ 06, 2021

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, ராமசாமி தமிழ் கல்லுாரியில், 2002ம் ஆண்டு, இளங்கலை தமிழ் இலக்கிய வகுப்பில் சேர்ந்தேன். பேராசிரியர்களை, 'அம்மா... ஐயா...' என அழைப்பதை வழக்கமாக கொண்டிருந்தோம்.
அன்று இலக்கண வகுப்பு நடத்த வந்து கொண்டிருந்தார் பேராசிரியை மெய்யம்மை.
குறும்புக்கார மாணவன் ஒருவன், 'டேய்... அம்மா வருது... அமைதியா இருங்க...' என கிசுகிசுத்தான். அது மாணவியர் இருந்த பகுதி வரை நன்றாக கேட்டது. பயந்தபடி, 'அம்மா வந்ததும் கோபத்தில் கத்த போகிறார்' என நடுங்கிக்கொண்டிருந்தோம்.
வகுப்பறையில் நுழைந்தவர், 'யாரோ ஒரு தம்பி, 'அம்மா வருது' என்ற சொல்லை பயன்படுத்தியது போல் கேட்டது; இலக்கண முறைப்படி அப்படி சொல்வது தவறு. அந்த தொடரில், 'அம்மா' என்றால் உயர்திணை சொல்; வருது என்றால் அக்றிணை சொல்...
'உயர்திணையில் துவங்கும் வாக்கியத்தை, அதே திணை சார்ந்த சொல் கொண்டுதான் முடிக்க வேண்டும்; அக்றிணையை சேர்ப்பது தவறு... எனவே, 'அம்மா வருகிறாள்' என்பது தான் சரியான சொற்றொடர். இதில், 'வருகிறாள்' என்ற சொல் மரியாதை தராதது போல் தோன்றினாலும், இலக்கணப்படி அதுதான் சரி...' என புன்முறுவலுடன் விளக்கினார்.
மெய்சிலிர்த்துப் போனோம்; குறும்புக்கார மாணவன் தலை கவிழ்ந்தான்.
என் வயது, 39; பல ஆண்டுகள் கடந்த போதும், மூதுரை நீதி நுாலில் வரும், 'கல்மேல் எழுத்து' போல், அந்த நிகழ்வு நினைவில் பதிந்துள்ளது. யாராவது உயர்திணை, அக்றிணை வித்தியாசம் தெரியாமல் பேசுவதைக் கேட்கும் போது, அந்த அவ்வையாரே மனதில் தோன்றுகிறார்.
- வா.காயத்ரிதேவி, ராமநாதபுரம்.
