PUBLISHED ON : அக் 14, 2016

திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்தபோது, அப்பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு, செல்வந்தர் ஒருவர் இலவசமாக விடுதி நடத்தி, அதில், 50 மாணவர்களை சேர்த்துப் படிக்க வைத்தார்.
இலவசமாக உடை, உணவு, தங்குமிடம் அளித்தாலும், மிகவும் கட்டுப்பாடான ஆச்சாரமான இந்து சமய விடுதி அது. படிக்கும் மாணவர்கள் எல்லாரும் தினமும் காலை எழுந்து தேவாரம், திருவாசகம் படித்து விட்டு, பாடம் படிக்க வேண்டும். பள்ளிக்கு தினமும், ஒரு கி.மீ., தூரம் வரிசையாகத் தான் செல்ல வேண்டும். நெற்றியில் விபூதி பூசியிருப்பது கட்டாயம். நாங்கள் அப்படி பள்ளி செல்லும்போது, வீட்டிலிருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் சிலர், எங்களைப் பார்த்து, 'பண்டாரங்கள் எல்லாம் போகுதுடா! ஓசி சோறு எல்லாம் போகுதுடா!' என்று கிண்டல் செய்வர். நாங்கள் தலைகுனிந்தே செல்வோம். மிகவும் வருத்தமாக இருக்கும். அந்த கூட்டத்தில் என் வகுப்பு படிக்கும் கணேசன் என்பவனும் அடக்கம்!
ஒருநாள், கணேசனிடம், 'இன்று நடக்கும் பரீட்சையில் உனக்கும், எனக்கும் ஒரு போட்டி. இன்றைய தேர்வில், நான் முதல் மார்க் எடுத்தால், வரிசையில் வரும் போது கேலி செய்வதை விட வேண்டும்' என்றேன். அவனும், 'சரி' என்றான்.
அன்றைய தேர்வில் பள்ளியிலேயே முதல் மாணவனாக வந்தேன். அவனும் என்னிடம் மன்னிப்பு கேட்டதோடு, அன்றிலிருந்து எங்களை கேலி செய்வதை, அவனும், மற்ற மாணவர்களும் விட்டு விட்டனர்.
நானும், என் ஏழ்மை நிலையை நன்கு உணர்ந்து படித்ததாலும், கட்டுப்பாட்டுடன் ஒழுக்கமான விடுதியில் தங்கிப் படித்ததாலும், இன்று வங்கி மேலாளராக நல்ல நிலையில் இருக்கிறேன். ஒழுக்கமும், கட்டுப்பாடும் வாழ்க்கையில் நிச்சயம் நல்ல உயர்வைத் தரும். இதற்கு நானே உதாரணம்!
-பி.காந்திமதிநாதன், சென்னை.
