PUBLISHED ON : செப் 04, 2021

கோவை மாவட்டம், வரதராஜபுரம், தியாகி என்.ஜி.ராமசாமி உயர்நிலைப் பள்ளியில், 1963ல், 7ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்...
பள்ளி அருகே கோவை விமான நிலையத்திற்கு, பிரபல நடிகர்
எம்.ஜி.ஆர்., வர இருப்பதாக தகவல் கிடைத்தது.
அன்று பிற்பகல் வகுப்புக்கு மட்டம் போட்டு, உடன் படித்த பாலசுப்பிரமணியனுடன் புறப்பட்டேன். பள்ளி வேலியை தாண்டினோம்; ௨ கி.மீ., துாரம் காட்டு வழியே நடந்தோம். நடிகரை அருகில் சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
பள்ளி சீருடை, புத்தகப்பையுடன் எங்களைக் கண்ட நடிகர் எம்.ஜி.ஆர்., 'பள்ளிக்கு செல்லாமல் என்னை பார்க்க வந்தது தவறு; இனிமேல் இப்படி செய்யக்கூடாது; படிப்பின் மீது மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்...' என, அறிவுரை கூறினார்.
மறுநாள், வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றதும், வகுப்பு ஆசிரியர் கந்தசாமி நையப் புடைத்து அறிவுரைத்தார். கண்டிப்பதால் மட்டுமே, சில விஷயங்களை முறை படுத்த முடியும் என உணர்ந்தேன்.
எனக்கு வயது, 69; அரசு துறையில், 33 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றேன்; அலுவலகத்தில் விடுப்பு விண்ணப்பம் எழுதிய போதெல்லாம், அந்த ஆசிரியரின் கண்டிப்பு, மனக்கண்முன் தோன்றியது.
- ஏ.மணி, கோவை.
தொடர்புக்கு: 97891 27111
