தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வினோத தீவு! (7)

வினோத தீவு! (7)

வினோத தீவு! (7)


PUBLISHED ON : செப் 13, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 13, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: சிறுமியர் ரீனாவும், மாலினியும் நெருங்கிய தோழியர். பள்ளி ஆண்டு விடுமுறையை கொண்டாட குடும்பத்தினருடன் லட்சத்தீவுக்கு சுற்றுலா சென்றனர். ஒரு தீவுப்பக்கம் பயணித்த போது, அங்கு வாழும் குட்டி மனுஷங்களை அடிமையாக்கி வேலை வாங்குவதை அறிந்து, அவர்களை மீட்க வழி தேடினர். சுற்றுலாவை முடித்து திரும்பியதும் பள்ளி ஆசிரியை ஜான்வியை சந்தித்தனர் சிறுமியர். இனி -



ல ட்சத்தீவில் வசித்த குட்டி மனுஷன் லியோ கூறிய விஷயங்களை ஆசிரியை ஜான்வியிடம் விவரித்தாள் ரீனா.

பின், ஆசிரியை என்ன சொல்லப் போகிறார் என, எதிர்பார்ப்புடன் முகத்தை பார்த்தாள்.

''நீ சொல்லும் தகவல் மிகவும் வினோதமாக இருக்கிறது. நாம் பள்ளியிலிருந்து அந்தமான் செல்ல திட்டமிட்டு இருப்பது அங்கு வாழும் பழங்குடியின மக்களுக்கு வாழ்விடத்தில், சுற்றுப்புற சுகாதாரத்தை கற்பிப்பதும், அவற்றை மேம்படுத்தும் வகையில் பயிற்சியில் அவர்களுக்கு உதவுவதற்கும் தான்...''

சற்று நிறுத்திய ஆசிரியை தொடர்ந்து என்ன சொல்லப் போகிறார் என, ஆர்வமும் பதற்றமுமாக முகத்தையே பார்த்து கொண்டிருந்தனர் சிறுமியர்.

''பள்ளி சார்பில் நடத்த உள்ள பழங்குடியினருக்கான சேவை முகாமை, அந்தமானுக்கு பதிலாக லட்சத்தீவுகளுக்கு மாற்றுவதில் ஒன்றும் சிரமம் இருக்காது என்று நினைக்கிறேன். லட்சத்தீவு சுற்றுலாவை இந்திய அரசும் ஊக்குவிக்கிறது. அங்கு சென்றால் நீங்கள் சொல்லும் வினோத மனிஷங்க பற்றி அறிந்து உதவலாம். பள்ளி நிர்வாகத்திடம் இது குறித்து பேசுகிறேன்...''

ஆசிரியை ஜான்வியின் விளக்கம் கேட்டதும் மகிழ்ச்சியில் பூரித்தனர் ரீனாவும், மாலினியும்.

''நீங்கள் குறிப்பிடும் அந்த குட்டி மனுஷங்களை நம்மால் மீட்க முடியுமா என்பது தெரியவில்லை. ஆனால் முயற்சிப்பதில் தவறில்லை...''

இது கேட்டு ரீனாவும், மாலினியும் முகம் மலர்ந்தனர்.

''இதை பற்றி யோசனை செய்ய நமக்கு இன்னும் ஒரு மாதம் கால அவகாசம் இருக்கிறது...'' என உற்சாகமாக கூறினார் ஆசிரியை ஜான்வி.

''எத்தனை நாட்கள் அங்கே இருப்போம் மிஸ்...''

''பத்து நாட்கள்... அதில் இரண்டு நாட்கள் பயணத்தில் கழிந்து விடும். மீதம் இருப்பது எட்டு நாட்கள் தான்...''

''அந்த எட்டு நாட்களில் என்ன முடியுமோ அதை செய்வோம் மிஸ்...''

''அங்கிருக்கும் நிலவரம் பற்றி யூகித்து எப்படி சமாளிப்பது என்பதை கிளம்பும் முன்னரே திட்டமிட வேண்டும்...''

ஆசிரியையின் ஆர்வத்தை, உற்சாகமாக தலையசைத்து வரவேற்றனர் ரீனாவும், மாலினியும்.

''நம் மூவரை தவிர வேறு எவருக்கும் இந்த விஷயம் தெரிய வேண்டாம்...''

சிறுமியரை எச்சரித்து விடை கொடுத்தார், ஜான்வி.

மாலினியுடன் வீட்டிற்கு புறப்பட்ட போது, ''லியோ விஷயத்தை இப்போதே யோசிக்க வேண்டும் மாலினி...'' என்று ஆரம்பித்தாள் ரீனா.

''என்ன செய்யலாம்...''

''முதலில் ரத்தினக் கற்கள் வெட்டி எடுக்கப்படும் சுரங்கங்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். சுரங்கத்தின் அமைப்பு எப்படி இருக்கும்... அதில் தொழிலாளர்கள் எப்படி வேலை செய்வர் போன்றவற்றை தெரிந்துகொள்ள வேண்டும். அந்த தகவல்கள் தெரிந்தால் தான், அடிமையாக இருக்கும் தொழிலாளர்களை எப்படி மீட்பது என அடுத்த கட்டத்திற்கு போக முடியும்...''

''இது பற்றி யாரிடம் கேட்பது...''

''யாரிடமும் கேட்க முடியாது. இணைய தளத்தில் தகவல் இருக்கிறதா என்று தேட வேண்டும்...''

''இரண்டு பேரும் தேடுவோம்...''

மாலினி லேப்டாப்பை எடுத்து வந்து ரீனாவிடம் கொடுத்தாள்.

''நீ இதில் தேடு... நான் என் சிஸ்டத்தில் பார்க்கிறேன்...''

இணையத்தில் ரத்தினச் சுரங்கம், வைரச் சுரங்கம் பற்றி தகவல்களை தேட ஆரம்பித்தனர்.

''இங்கே பார்... இந்தியாவில் ஒரே ஒரு வைரச் சுரங்கம் தான் உள்ளது...'' என்றாள் ரீனா.

''ஒன்றே ஒன்று தானா... ஆச்சரியமாக இருக்கிறதே...''

''ஆம் மாலினி... மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள பன்னா நகர் அருகில் மஜ்கவானி பகுதியில் அது இருக்கிறது...''

''அப்போ லட்சத்தீவில் ரத்தினச் சுரங்கம் இல்லையா...''

''இணையத்தில் அது பற்றிய தகவல் எதுவும் இல்லை...''

''இன்னும் தேடுவோம்...''

முயற்சி குன்றாமல் தேடினர்.

''உலகில் வைரக்கற்கள் அதிக அளவில் ஆப்பிரிக்காவில் தான் கிடைக்கிறதாம்...''

''ஆமாம்... அதுபோன்ற தகவலைத்தான் நானும் பார்க்கிறேன் ரீனா...''

''ஆனால், உலகில் வைரச் சுரங்கங்கள் எல்லாம் திறந்தவெளியில் தான் உள்ளன... அது மட்டுமல்ல... வைரங்கள், 100 கிலோ மீட்டர் ஆழத்தில் தான் உருவாகின்றனவாம். சுரங்கங்களும் மிகப்பெரிய பள்ளம் போல திறந்தவெளியாக புகைப்படங்களில் காணப்படுகின்றன...''

''லியோ சொன்ன தகவல் இதற்கு முற்றிலும் முரணாக இருக்கிறதே மாலினி...''

''ஆமாம் மிக சிறிய ஆழ்குழாய் கிணறு போல சுரங்கத்தில் இருந்து ரத்தின கற்களை எடுப்பதாக அல்லவா கூறினான் லியோ...''

''ஆமாம்... மனிதர்கள் நுழைய முடியாத அளவு அவை சிறிதாக திறப்பு உள்ளவை என்று தான் தகவல் சொன்னான்...''

''எங்கோ இடிக்கிறதே ரீனா...''

''இணைய தகவல்களும், லியோ சொன்ன சுரங்கமும் ஒரே மாதிரியானவையாக எனக்கு தோன்றவில்லை...''

''ஆமாம்... ரீனா. நானும் அப்படித்தான் நினைக்கிறேன். இந்த தகவல்கள் பயன்படாது. லியோ சொன்னதை வைத்து தான் ஏதாவது திட்டமிட வேண்டும்...''

''லியோ சொற்படி பார்த்தால் வைரச்சுரங்கம் இறங்கி ஏறுவதற்கு ஏற்ப குறுகிய ஆழத்தில் தான் இருக்க வேண்டும்...''

''ஆழ்துளை கிணற்றின் உள்ளே வேலை செய்து கொண்டிருப்போரை எப்படி மீட்பது என்ற கோணத்தில் தான் யோசித்து திட்டமிட வேண்டும்...''

''நீ சொல்வது சரி தான் மாலினி...''

சிறுமி ரீனா ஒத்துக்கொண்டாள்.



- தொடரும்...

நரேஷ் அருண்குமார்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us