தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பனி விழும் திகில் வனம்! (19)

பனி விழும் திகில் வனம்! (19)

பனி விழும் திகில் வனம்! (19)


PUBLISHED ON : மே 31, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 31, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: துணிவு மிக்க சிறுமி மிஷ்கா. இமயமலையில் ஏறிய போது அவளது தந்தை துருவ் இறந்துவிட்டதாக தகவல் வந்தது. அதை ஏற்க மறுத்து, தந்தையை உயிருடன் மீட்க சென்றாள். எதிர்ப்புகளை மீறி உதவி கோரிய மிஷ்கா மீது, வெறுப்புடன் ஐஸ்கட்டி தண்ணீரை ஊற்றினர். அங்கு வந்து அவர்களை கண்டித்த பெண், மிஷ்காவின் லட்சியம் நிறைவேற துணை வருவதாக கூறினார். இனி -

எவரெஸ்ட் மலையேறிகள் கூட்டமைப்பு அதிகாரிகளும், சர்வதேச மலையேறிகள் கூட்டமைப்பு அங்கத்தினர்களும், இந்திய மற்றும் நேபாள் மலையேறிகள் நற்தளத்தை சேர்ந்த உறுப்பினர்களும், இந்திய விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகளும் இமயமலை அடிவாரத்தில் கூடியிருந்தனர்.

மிஷ்காவை உப்பு மூட்டை துாக்கி உரையாடியபடியே நடந்தாள், உதவ வந்த பெண் லக்பா.

''மிஷ்கா... எவரெஸ்ட் ஒவ்வொரு ஆண்டும், 6ல் இருந்து, 9 மி.மீ., வரை வளர்கிறது தெரியுமா...''

''ஓ...''

''நேபாள பக்கமிருந்து, இமயமலை ஏறும் பாதையில், நான்கு முகாம்கள் உள்ளன. திபெத் பக்கம் மலையேறுவது எளிதானது...''

உரையாடிபடி இருவரும் மெதுவாக வருவதை கண்டு கூட்டமைப்பு அதிகாரி ஒருவர் கோபத்தில் இரைந்தார்.

''உங்களிருவருக்காக, இரண்டு மணி நேரமாக காத்திருக்கிறோம். நீங்களோ, உல்லாச பயணம் போவது போல சாவகாசமாக வருகிறீர்...''

''உங்களை காத்திருக்கச் சொன்னோமா...''

பட்டென கேட்டாள் லக்பா.

''என்றைக்கு மலையேறுவதாக இருக்கிறீர்...''

சற்று தணிந்தார் அதிகாரி.

''நாளை இரவு...''

''எத்தனை பேர்...''

''நான் மிஷ்கா மற்றும் நாலு ெஷர்பாக்கள்...''

''நீங்கள் மலையேறுவதை முழுமையாக தடுக்கிறோம். போக கூடாது...''

''மிஷ்காவின் தந்தை துருவ் காணாமல் போய் ஆறு நாட்கள் ஆகின்றன. நீங்கள் எல்லாம் அவரை தேடி தோற்று திரும்பி விட்டீர். தொலைத்தவரை உரியவரே தேடி கண்டுபிடிக்க கிளம்பி விட்டார். நான் துணை நிற்கிறேன்...''

''லக்பா... உன் கணவரின் பேச்சை கேளாமல் அலட்சியப்படுத்தி, அவரை குடிகாரன் ஆக்கினாய். புற்று நோய்க்கு உன் கணவரை காவு கொடுத்தாய். இப்போது எங்கள் பேச்சை கேளாது, இந்த சிறுமியை காவு கொடுக்கப் போகிறாயா...''

''என் கணவரை பற்றி பேச உங்களுக்கு அருகதையில்லை. அந்த பெருஞ்சித்திரவதையை உங்க மகளோ, சகோதரியோ அனுபவித்திருந்தால் இப்படி பேச மாட்டீர்...''

''வானிலை அறிக்கையை மதிக்காது போன துருவ் பனிப்புயலில் சிக்கி செத்தான். இப்போது நீங்கள்...''

''துருவ் நிச்சயம் உயிருடன் கிடைப்பார்...''

''லக்பா... பனிப்பிளைவுகள், குறுகிய விளிம்புகள், தலை சுற்றும் உயரம், குளிர் சீதோஷ்ண நிலை, பனிப்பொழிவு, பனிப்பாறை சரிவுகள், நொடிக்கு நொடி மாறும் தட்பவெப்பம், ஆழமான பனி, செங்குத்தான பாதை இத்தனையும், 10 வயது சிறுமிக்கு மெஹா சவால். ஆக்சிஜன் மூன்றில் ஒரு பங்கே கிடைக்கும். பனிப்புயல் மணிக்கு, 150 கி.மீ., வேகத்தில் வீசும். மைனஸ் 40 டிகிரி சென்டிகிரேட் குளிர் நிலவும்...''

''அனைத்தும் அறிவோம்...''

''உன் தான்தோன்றிதனத்தை உலக ஊடகங்கள் ஊன்றி கவனித்துக் கொண்டிருக்கின்றன...''

''பார்க்கட்டும்... நன்றி...''

''இவ்வளவு தலைக்கனம் பிடித்த பெண்ணை நாங்கள் பார்த்ததில்லை...''

''இது தலைக்கனமல்ல... தன்னம்பிக்கை...''

அனைத்து அதிகாரிகளும், அவரவர் கோணத்தில் லக்பாவுடன் பேசி பார்த்தனர்.

கடைசியாக, ஒரு அதிகாரி மிஷ்காவிடம் குனிந்தார்.

''எங்கள் எல்லா பேச்சுகளுக்கும் லக்பா தான் பதிலளித்தார். வராதே மிஷ்கா ஆபத்து என்கிறது இமயமலை. அது உன் காதில் விழவில்லையா...''

''மகளே என்னை வந்து காப்பாற்று என்ற என் தந்தையின் ஓலம் தான் என் காதுகளை கிழிக்கிறது. காற்றில் ஆக்சிஜன் பற்றாக்குறையால், மூளையின் செல்கள் இறந்து போகும் தான். உங்கள் கரிசனத்துக்கு நன்றி...''

ஜீப்பில் லக்பாவும், மிஷ்காவும் ஏறினர்.

அது மருத்துவமனையில் நின்றது.

பிணவறை -

துருவ்வுடன் மலையேறிய இருவரது உடல்கள் பிணமாய் கைப்பற்றபட்டன அல்லவா.... அவை அந்த பிணவறையில் தான் இருந்தன.

லக்பாவும், மிஷ்காவும் பிணவறைக்குள் பிரவேசித்தனர்.

இரு உடல்களையும் வெளியே இழுத்தார் மருத்துவர்.

ஒன்றின் முகமும், முன் உடலும் கடித்து குதறப்பட்டிருந்தது. இன்னொரு உடலில் தலை இல்லை.

லக்பாவும், மிஷ்காவும் அந்த உடல்களுக்கு மரியாதை செலுத்தினர்.

நிதானமாக வாய் திறந்தார் மருத்துவர்.

''நான் சொல்லப்போவது கேட்டு இருவரும் திடுக்கிடப் போகிறீர்...''

'பரவாயில்லை சொல்லுங்கள்...'

''இறந்த இருவரையும் ஒரு வினோத மிருகம் தாக்கி இருக்கிறது. அதன் வாயமைப்பை யூகித்து வரைந்திருக்கிறோம்...''

கணினி திரையை காட்டினார் மருத்துவர். இடது புறம் எட்டு ட்ராகுலர் பற்கள், வலது புறம் எட்டு ட்ராகுலர் பற்கள் இருந்தன.

''நீங்கள் யூகிப்பது போன்ற மிருகத்தை இதுவரை மலையேறிகள் பார்த்ததில்லையே...''

பதில் சொன்னாள் லக்பா.

''மனித கண்களுக்கு சிக்காது ஒரு மாயாவி வாழ்ந்து கொண்டிருக்கிறது...''

''நான் நம்பவில்லை...''

''பின்ன...''

''துருவ் உலக சாதனை செய்யப் போவதை தடுக்க ஒரு சதிக்காரக் கூட்டம் ஆடிய கபட நாடகம் இது...''

''கற்பனையான சதி கோட்பாடா...''

புரியாமல் கேட்டார் மருத்துவர்.

''துருவ்வை மீட்கும் போது அத்தனை உண்மைகளும், வெட்ட வெளிச்சமாகும். சற்றே காத்திருங்கள் டாக்டர்...''

மறுநாள் இரவு -

உள்ளூர் மக்கள் லக்பா, மிஷ்காவை கவுரவித்து துண்டுகள் போர்த்தினர்.

வாத்திய இசையுடன், 12 கால்கள் எவரெஸ்ட் ஏற ஆரம்பித்தன.

திக்... திக்... திக்...



- தொடரும்...

- மீயாழ் சிற்பிகா


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us