தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பனி விழும் திகில் வனம்! (23)

பனி விழும் திகில் வனம்! (23)

பனி விழும் திகில் வனம்! (23)


PUBLISHED ON : ஜூன் 28, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 28, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: துணிவு மிக்க சிறுமி மிஷ்காவின் தந்தை துருவ், இமயமலையில் விபத்தில் இறந்ததாக தகவல் வந்தது. அதை ஏற்காமல் எதிர்ப்புகளை தாண்டி லக்பா என்ற பெண் துணையுடன் மீட்க சென்ற போது, தவறி பனிக்குகையில் விழுந்தாள் மிஷ்கா. அங்கு பனி மனுஷங்களை சந்தித்த போது, தந்தையை மீட்க முடியாது என கூறியதால் மனம் உடைந்து, கண்டபடி கத்தினாள் மிஷ்கா. இனி -

தன் நெற்றிப்பொட்டை விரல்களால் தட்டினாள் சூச்சூவின் பாட்டி.

'உன் தந்தையை, பார்த்த மாதிரியும் இருக்குது, பாக்காத மாதிரியும் இருக்குது...'

'குழப்பாதே பாட்டி... விபரம் தெரிஞ்சா சரியா சொல்...'

பனி மனுஷ குட்டி சூச்சூ திருத்தினாள்.

'எங்கு செத்து பனிக்குள் சிக்கி கிடக்கிறானோ...'

உச்சு கொட்டினாள் பாட்டி.

''என் அப்பா உயிருடன் இல்லை என யாராவது பேசினால், எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் போட்டு சாத்தி விடுவேன்...'' என்றாள் மிஷ்கா.

'பாட்டி... வயசுக்கு ஏத்த மாதிரி பக்குவமா நடந்துக்க...' என்றாள் சூச்சூ.

சற்று விலகிப் போய் உட்கார்ந்தாள் பாட்டி.

'மிஷ்கா... வா உனக்கு சில இடங்களை சுற்றிக் காட்டுகிறேன்...'

அழைத்தாள் சூச்சூ.

''எனக்கு குளிர் தாங்காது...''

ஒரு மந்திரம் ஓதி, மிஷ்காவின் உடல் முழுக்க தடவி விட்டாள் சூச்சூ.

உடலை சுற்றி உடனே வெம்மை படர்ந்தது.

ஆச்சிரியமுடன், ''என்ன செய்தாய் சூச்சூ...'' என்றாள் மிஷ்கா.

'வெளியில் எவ்வளவு குளிர் இருந்தாலும், உன் உடலை பாதிக்காதவாறு மந்திரம் போட்டுள்ளேன்...'

''சின்ன வயது நவோமி கேம்பெல் போல, நீ ஒரு கறுப்பு அழகி... சுருள் தலைமுடி, அழகிய தொப்பை... பனிப்பெண்களில் நீ அழகான சிறுமி...'' என்றாள் மிஷ்கா.

'வர்ணிப்புக்கு நன்றி. நான் அழகு என்பது இன்று நீ சொல்லித்தான் தெரிகிறது. எங்களுக்கு அழகு முக்கியமில்லை. சமயோசிதமாய் வேட்டையாடும் சாகசம் தான் முக்கியம்...'

''வேட்டையாடு விளையாடு...''

'உனக்கு ஒரு வேடிக்கை காட்டுகிறேன் பார்...'

இருவரும் பனிப்பகுதிக்கு நடந்தனர்.

சூச்சூ மெதுவாக குனிந்து பனி தரையை தொட்டாள். ஒரு மந்திரத்தை உச்சரித்தாள்.

அவ்வளவு தான்... பேரிரைச்சலாய் பனி பூகம்பம் பூத்தது.

கீறல் விட்டு அதளபாதாளங்கள் தோன்றின.

ஒரு பள்ளத்தின் நுனியில், சூச்சூவும், இன்னொரு நுனியில் மிஷ்காவும் நின்றிருந்தனர்.

''பயமாயிருக்கு சூச்சூ...'' என்றாள் மிஷ்கா.

'பனிப்புயலை உருவாக்கி காட்டவா...'

''வேண்டாம் என்றாலும் கேட்கவா போகிறாய்... உருவாக்கிக் காட்டு...''

ஒரு மந்திரத்தை ஓதி, வலது ஆட்காட்டி விரலை உயர்த்தி சுழற்றினாள் சூச்சூ.

பனிப்புயல் 250 கி.மீ., வேகத்தில் சுழன்றடித்தது.

சூச்சூவையும், மிஷ்காவையும் விட்டு விட்டு ரகளை செய்தது.

''போதும் போதும் சூச்சூ... பனிப்புயலை நிறுத்து...''

கத்தினாள் மிஷ்கா.

விரலை சொடுக்க பனிப்புயல் நின்றது.

''அட்டகாசம் சூச்சூ! எங்களை விட, பல விஷயங்களில் முன்னேறியவர்களாய் இருக்கிறீர்கள்...''

'நில மனிதர்களுக்கு முன் தோன்றியவர்கள் நாங்கள்...'

''ஆதாரம் கேட்க மாட்டேன். வாதம் செய்ய மாட்டேன். யாராவது முன்னுக்கு இருந்தால், யாராவது பின்னுக்கு இருந்து தானே ஆக வேண்டும்...''

அப்போது, 'ழீயேய்' என விசித்திர சப்தம் எழுந்தது. வலது கையை உயர்த்தினாள் சூச்சூ.

கூரிய அலகுடன் எட்டு கிலோ எடை உடைய பறவை, சூச்சூவின் கையில் வந்து அமர்ந்தது.

'இதை பார்த்திருக்கிறாயா மிஷ்கா...'

''இல்லை...''

'இது எலும்புண்ணிக் கழுகு. நாங்கள் சாப்பிட்டு போட்டதின் மிச்சத்தை சாப்பிடும். உணவில் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கிறோம்...'

''சிறப்பு...''

அந்த கழுகு சூச்சூவிடம் பேசியது.

'என்ன சூச்சூ... சாப்பிட வேண்டிய ஒரு பொருளுடன் கொஞ்சி குலாவிக் கொண்டிருக்கிறாய்...'

'உன்னை கூட சாப்பிடலாம் தான். இதுவரை சாப்பிட்டேனா...' என்றாள் சூச்சூ.

'நான் சுவையாக இருக்க மாட்டேன்...'

'சாப்பிட்டு தெரிந்து கொள்கிறேன்...'

'சும்மா ஒரு தமாசுக்கு கேட்டேன்... நீ யார் கூட வேணாலும் நட்பாக இரு. எனக்கு என்ன...'

'சரி கிளம்பு... அப்புறம் பார்ப்போம்...'

பெருஞ்சத்தத்துடன் மறைந்தது கழுகு.

வாய்க்குள் விரல்களை விட்டு சீழ்க்கையடித்தாள் சூச்சூ. நுாறு டெசிபல் விசில். ஒரு ராட்சச பனிச்சிறுத்தை வந்து நின்றது.

'வணக்கம் சூச்சூ... என்ன விஷயமாக கூப்பிட்டாய்...' என்றது பனிச்சிறுத்தை.

'இந்த பனிப்பிரதேசத்தை சுற்றி வர வேண்டும்...'

'இருவரும் ஏறிக் கொள்ளுங்கள்...' என்றது பனிச்சிறுத்தை.

பயத்துடன் ஏறினாள் மிஷ்கா. அவள் முன்னுக்கு போய் அமர்ந்தாள் சூச்சூ.

மிகப்பெரிய கதவின் முன் போய் நின்றது பனிச்சிறுத்தை.

சூச்சூ ஏதோ மந்திரம் கூறினாள். உடனே, கதவுகள் பெரும் சத்தத்துடன் திறந்தன.

உள்ளே...



- தொடரும்...

- மீயாழ் சிற்பிகா


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us