PUBLISHED ON : மார் 28, 2026

ஏப்., 2 - சர்வதேச குழந்தைகள் புத்தக தினம்
உலகப் புகழ்பெற்ற குழந்தை இலக்கிய ஆசிரியரான, ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன், ஐரோப்பிய நாடான டென்மார்க்கில், 1805, ஏப்., 2ல் பிறந்தார். ஒவ்வொரு ஆண்டும் அவர் பிறந்த நாளன்று, உலகம் முழுவதும் குழந்தைகள் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.
குழந்தைகள் புத்தக அமைப்பான, ஐ.பி.பி.ஒய்., என்ற சர்வதேச வாரியம், 1967ல் இந்த கொண்டாட்டத்தை துவக்கியது. தற்போது, நுாற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது.
குழந்தைகளிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பது, புத்தகங்களின் மூலம் பன்முகத்தன்மையை போதிப்பது, எளிய மொழியில் உலக அறிவை வழங்குவது ஆகியவையே, இதன் முக்கிய நோக்கம்.
ஒவ்வோர் ஆண்டும் ஒரு நாடு, புரவலர் நாடாகத் தேர்வு செய்யப்படும். அந்நாட்டின் புகழ்பெற்ற குழந்தை எழுத்தாளர், உலகக் குழந்தைகளுக்கு ஓர் அற்புத செய்தியை எழுதுவார். அதோடு, அழகிய போஸ்டரும் வடிவமைக்கப்படும்.
பள்ளிகளில் கதை சொல்லும் போட்டி, புத்தகக் கண்காட்சி, எழுத்தாளர்களை சந்தித்தல், உடையணிந்து கதாபாத்திரங்களாக மாறுதல் என, வண்ணமயமான நிகழ்வுகள் நடக்கும். சில நாடுகளில், குழந்தைகளே சிறு புத்தகங்கள் எழுதி, வெளியிடுவதும் உண்டு.
இந்த ஒரு நாள் மட்டுமின்றி, ஆண்டு முழுவதும் குழந்தைகளின் மனதில் புத்தகங்களின் மீதான காதலை விதைப்பதே, இத்தினத்தின் உண்மையான வெற்றி.
ஒரு புத்தகத்தை திறந்தால், உலகம் முழுவதும் பயணிக்கலாம் என்பதை, குழந்தைகளுக்கு உணர்த்துவோம்; அவர்களின் கற்பனை உலகிற்கு வழி திறக்கும் வகையில், ஓர் அழகிய நுாலை பரிசளித்து மகிழ்வோம்.
- வி.நர்மதா
