PUBLISHED ON : ஏப் 05, 2025

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஆயிரவைசிய உயர்நிலைப் பள்ளியில், 1970ல், 8ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...
ஆங்கில ஆசிரியராக இருந்தார் வெங்கடாசலம். மிகவும் கண்டிப்பானவர். நன்றாக பாடம் எடுப்பார். அன்று ஆங்கில இலக்கணம் நடத்திய போது, தலைமையாசிரியர் எஸ்.என்.சங்கரநாராயணன் திடீரென வகுப்பறையில் நுழைந்தார். கரும்பலகையில் எழுதியிருந்ததை பார்த்து, 'இடைச்சொல்லை ஆங்கிலத்தில் எப்படி குறிப்பிடுவர்...' என்று கேட்டார்.
யாரும் பதில் சொல்லவில்லை. நான் எழுந்து, 'கன்ஜெக்சன்...' என சொல்லியபடி ஆசிரியரைப் பார்த்தேன். மிகுந்த கோபத்தில் அவர் முறைத்தார். உடனே, உன் உச்சரிப்பு தவறு என சுட்டிக்காட்டி, 'கன்ஜன்சன்...' என அழுத்தம் கொடுத்து உச்சரித்தார் தலைமையாசிரியர். என் பதற்றமான முக பாவனை கண்டு, 'தப்பு என்றாலும், தைரியமாக சொன்னாய்...' என பாராட்டினார். தெம்பு ஏற்பட்டது. எதையும் தயங்காமல் சொல்லும் திறனை அது வளர்த்துள்ளது.
என் வயது, 68; குடும்பத் தலைவியாக இருக்கிறேன். மனதில் உள்ளதை தைரியமாய் சொல்வது கண்டு, 'நீ தான் சூரபுலியாற்றே...' என கிண்டல் செய்வர் தோழியர். பள்ளி நிகழ்வு மனதில் பதிந்து இன்றும் வழிகாட்டுவதாய் உணர்கிறேன்.
- ஜெ.ஆர்.குணவதி, பரமக்குடி.
