
தொலைவில், 'மினுக்... மினுக்...' என ஒளி தெரிந்தது. எதிரே ராமுவும், சோமுவும் அது பற்றி விவாதித்தபடி நடந்தனர்.
''இவ்வளவு சின்னதாக தெரிகிறதே... மிதிவண்டி தான்...'' என்றான் ராமு.
''இல்லை... இல்லை... இவ்வளவு மெதுவாக அசைவதிலிருந்து அது மாட்டு வண்டியாகத் தான் இருக்க வேண்டும்...'' என்றான் சோமு.
கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் நெருங்கியது.
என்னவென்று காணும் ஆர்வத்தோடு நின்றனர்.
முதியவர் ஒருவர் கையில் விளக்கு ஏந்தி தள்ளாடியபடி நடந்து வந்தார்.
ஆச்சரியமாக இருந்தது.
விளக்கை கொண்டு எதையோ தேடுவது போல இருந்தது.
அவரை நெருங்கி, ''என்ன தேடுகிறீங்க ஐயா...'' என்றான் சோமு.
முதியவர் திடுக்கிட்டு நிமிர்ந்தார்.
அப்போது தான் விஷயம் விளங்கியது. அவர் பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளி.
''அடப்பாவமே... கண்ணு தெரியாதா... அப்படின்னா இந்த விளக்கு எதற்கு....'' என்று கேலியாக சிரித்தான் ராமு.
''ஐயா... இது எனக்காக எடுத்து செல்லவில்லை... உங்களை போல் எதிரிலே வருவோர் அறிந்து கொள்ளதான் கொண்டு போகிறேன். ஏனென்றால், இருட்டில் நடந்து வருபவன் மற்றவர்கள் பார்வைக்கு தென்பட்டால் தானே விபத்து தவிர்க்கப்படும்...''
இந்த விளக்கம் கேட்டு இருவரும் வாய் திறக்கவில்லை.
குழந்தைகளே... யாரையும் கேலி செய்து, ஏளனமாக எடை போட கூடாது.
- எஸ்.ராமதாஸ்