தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/விருப்பம் சிறப்பு தரும்!

விருப்பம் சிறப்பு தரும்!

விருப்பம் சிறப்பு தரும்!


PUBLISHED ON : ஜூலை 12, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 12, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''அப்பா... உங்களிடம் ஒன்று கேட்கணும்...''

ஆரம்பித்தான், 10 வயது நிரம்பியிருக்கும் மகன் சரவணன்.

''சொல்லுப்பா...''

''நீங்கள் படித்தது பி.எஸ்சி., வேதியியல் தானே...''

''ஆமாம்; ஏன் கேட்கிறாய்...''

''வேதியியல் படித்தும், ஏன் மரக்கடை வெச்சுருக்குறீங்க...''

''ஏன்... வைக்கக் கூடாதா...''

''வைக்கலாம். ஆனால், உங்கள் படிப்புக்கும், செய்யும் தொழிலுக்கும் சம்பந்தமே இல்லையே...''

''சரி... அதை விடு... இப்போது நீ, மிதிவண்டி ஓட்டுகிறாய் தானே... அது எப்படி ஓடுகிறது...''

''டயர் இருக்கிறதால ஓடுது...''

''அந்த டயரில், காற்று இல்லையேல் என்ன ஆகும்...''

''மிதிவண்டியை ஓட்ட முடியாது...''

''சரி... இப்படி காற்று நிரப்பும் மிதிவண்டி டயரை முதன்முதலில் கண்டுபிடித்தது யார்...''

''ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்தை சேர்ந்த விஞ்ஞானி ஜான் டன்லப் தான் கண்டுபிடித்தார்...''

''சரியாக சொன்னாய். காற்று நிரப்பும் வகை மிதிவண்டி டயரை கண்டுபிடித்தது, ஜான் டன்லப் தான். ஆனால், அவர் விஞ்ஞானி கிடையாது; ஒரு கால்நடை மருத்துவர். அவரது பணிக்கும், டயருக்கும் சம்பந்தமேயில்லை.

''ஒருமுறை தன் மகனின் முச்சக்கர மிதிவண்டியை வேகமாக நகர்த்த என்ன வழி என்று சிந்தித்தார். அதன் பயனாக காற்று நிரப்பும் டயரை கண்டுபிடித்தார். அதை பயன்படுத்திய போது மிதிவண்டி வேகமாக ஓடியது. காற்று நிரப்பிய டயர் பிரபலமாகி பெருமை, ஜான் டன்லப்புக்கு வந்து சேர்ந்தது...'' என்றார் அப்பா.

''புதிய தகவல்... எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது...''

''ஆமாம்... கால்நடை மருத்துவரா காற்று அடிக்கும் டயரை கண்டுபிடித்தார் என்று ஆச்சரியமாக இருக்கும். கல்வியை ஒரு துறை சார்ந்ததாக அவர் பார்க்கவில்லை; எதையும் கூர்ந்து கவனித்து, ஆராயும் முறையை தான் கற்றதாக எண்ணினார். அதனால் தான், மிதிவண்டி தான் படித்த துறை சார்ந்ததாக இல்லாவிட்டாலும், கூர்ந்து கவனித்து ஆராய்ந்து காற்று நிரப்பும் டயரை கண்டுபிடித்தார்...''

''புரிகிறது அப்பா...''

''நான், பி.எஸ்சி., வேதியியல் படித்து, மரக்கடை வைத்திருக்கலாம். ஆனால், எப்படி புரிந்து ஆராய்ந்து படித்தேனோ, அதே யுக்தியை தான் வியாபாரத்திலும் செயல்படுத்துகிறேன்; அந்த வகையில், கற்ற கல்வி மிக உபயோகமாகவே உள்ளது. எந்த துறையில் படித்தாலும் கல்வி ஒரு அறியும் செயல்பாடு. அது அறிவை வளர்த்து நன்மையை கொடுக்கும். எந்த துறையானாலும், விருப்பத்துடன் படிக்க வேண்டும்...''

தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தார் அப்பா.

கேள்விக்கு தெளிவான விடை கிடைத்த திருப்தி, சரவணனின் முகத்தில் தெரிந்தது.

பட்டூஸ்... எதையும் கூர்ந்து கவனித்து விருப்பத்துடன் படித்தால் சிறப்படையலாம்!

- இந்திராணி தங்கவேல்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us