PUBLISHED ON : ஏப் 27, 2024

நம் நாட்டில் உள்ள மிகப்பெரிய ஆலமரம், மேற்கு வங்க மாநிலம் கோல்கத்தாவில் உள்ளது. இங்குள்ள ஆச்சார்ய ஜகதீஷ் சந்திரபோஸ் தாவரவியல் மையத்தில் 270 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியில் பணி செய்த கர்னல் அலெக்சாண்டர் கிட் என்பவரால், கி.பி.1786ல் இந்த மையம் உருவாக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடையும் வரை, கம்பெனி தோட்டம் என அழைக்கப்பட்டது.
சுதந்திரத்துக்கு பின், இந்திய தாவரவியல் பூங்கா என பெயர் மாற்றம் பெற்றது. இங்கு, 12 ஆயிரம் வகை தாவரங்கள் உள்ளன. ஐந்து கண்டங்களில் உள்ள அரிய தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன. விதம் விதமான மூங்கில், பனை மரங்கள், ஆர்கிட் மலர் வகைகள், மிகப்பெரிய இலைகளை உடைய விக்டோரியா அமேசானிகா அல்லி போன்ற தவாரங்களை பார்க்க முடியும்.
இங்கு பெரிதாக ஈர்ப்பது பெரிய ஆலமரம் தான்! இது, 18 ஆயிரத்து 918 ச.மீ., பரப்பில் பரந்து விரிந்துள்ளது. உயரம், 25 மீட்டர். ஆசியாவிலே மிகப்பெரிய மரம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதை, 3,800க்கும் மேற்பட்ட விழுதுகள் தாங்கி நிற்கின்றன. சூரிய வெளிச்சம் விழும் கிழக்கு திசையிலே வளர்ந்து செல்கிறது. துாரத்திலிருந்து பார்த்தால் அடர்ந்த காடு போல் தோற்றம் அளிக்கிறது. உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணியர், இதை பார்க்க வருகின்றனர்.
- மு.நாகூர்
