PUBLISHED ON : ஜூன் 13, 2020

கோவை மாவட்டம், லட்சுமி நாயக்கன் பாளையம், எஸ்.ஆர்.என்.வி. உயர்நிலைப் பள்ளியில், 1959ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்தேன். ஒருநாள் பகல், தமிழ் வகுப்பு முடியும் முன், 'டிபன்பாக்ஸ்' திறந்து சாப்பிட ஆரம்பித்தோம்.
இதைக்கண்ட தலைமை ஆசிரியர் வெலிங்டன், கடுமையாக எச்சரித்து, ஆளுக்கு ஒரு பிரம்படி கொடுத்தார். எனக்கு மட்டும் இரண்டு அடிகள் தந்து, 'நன்றாக படித்தால் மட்டும் போதாது... ஒழுக்கம் மிக முக்கியம்...' என அறிவுரைத்தார்.
அந்த தண்டனையால் உள்ளங்கை வீங்கியது; தவறை உணர்ந்து திருந்தி, படிப்பில் கவனம் செலுத்தினேன். இறுதி தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று, கோவை வேளாண் கல்லுாரியில் தற்காலிக பணியில் சேர்ந்தேன்.
என் ஒழுக்கம், நன்நடத்தையால் பணி நிரந்தரம் பெற்றேன். என்னை, 'நேர்மை அலுவலர்' என பாராட்டி, பரிசு வழங்கியது அரசு. என் பணி அனுபவத்தை, கோவை வானொலி ஒலிபரப்பி சிறப்பித்தது. இவை, அந்த பிரம்படியின் விளைவு என கருதுகிறேன்.
தற்போது, என் வயது, 80; என் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய அந்த தலைமை ஆசிரியரை, தினமும் வணங்க தவறுவதில்லை.
- ஆர்.சுப்பிரமணியன், கோவை.
தொடர்புக்கு: 96004 06360
