
திருவள்ளூர், ஜெயா உயர்நிலைப் பள்ளியில், 2008ல், 10ம் வகுப்பு படித்தேன்.
ஒருநாள், வகுப்பறை மிகவும் குப்பையாக இருந்தது; யாரும் கண்டு கொள்ளவில்லை. பாடம் நடத்த வந்த தமிழ் ஆசிரியை, 'வகுப்பறை என்பது கோவில் கருவறை போன்றது; புனிதமாக போற்றப்பட வேண்டியது. அதை சுத்தமாக பராமரிக்க வேண்டும்...' என புரிய வைத்தார்.
பின், உரிய கருவிகளை பயன்படுத்தி சுத்தம் செய்ய முறையான பயிற்சி அளித்தார். ஆர்வமாக செயல்படுத்தினோம். தவறாமல் கடைபிடிக்கும் வகையில், 'கருவறை போன்றது வகுப்பறை' என்ற அறிவூட்டும் வாசகத்தை கரும்பலகை தலைப்பில் எழுதி வைக்கச் சொன்னார். அதன்படி செய்தோம். சுத்தமாக பராமரித்து நல்ல பெயர் பெற்றோம்.
படிப்பை முடித்த பின், ஆசிரியையாக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தேன்; அப்போது, வகுப்பறைகளை சுத்தமாக பராமரிக்க கற்றுக் கொடுத்தேன். தொடர்ந்து பின்பற்றவும், வழிவகைகள் வகுத்தேன்.
எனக்கு, 28 வயதாகிறது; சுத்தம் பேண வேண்டியதன் அவசியத்தை மனதில் பதிய வைத்த அந்த ஆசிரியையை போற்றுகிறேன்.
- பா.காயத்ரி, சென்னை.
தொடர்புக்கு: 77085 87816