PUBLISHED ON : ஜூலை 25, 2014

மாவீரன் நெப்போலியன் பற்றி எத்தனையோ கதைகள் படித்திருக்கிறோம். இருந்தாலும் அவரது மரணம் பற்றிய மர்மம் இன்றுவரை தொடர்கிறது. அது
பிரெஞ்ச் நாட்டின் ஆளுகைக்குட்பட்ட மிகச்சிறிய தீவு போனபர்ட். இங்கு பிறந்த மாவீரன் நெப்போலியன், தனது இருபதாவது வயதில் போர் வீரனாக வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் படிப்படியாக பிரான்ஸ் நாட்டின் நிகரில்லா மன்னனாக விளங்கினார். தனது வாழ்நாளில் பெரும்பாலான நாட்களைப் போர்க் களத்திலேயே செலவிட்ட இம்மாவீரன், ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளை வெற்றி கண்டார்.
இந்நிலையில் 1812ம் ஆண்டு ரஷ்யா மீதான போர் நெப்போலியனின் வாழ்க்கையில் மிகப்பெரிய மோசமான திருப்புமுனையாக அமைந்துவிட்டது. பிரெஞ்ச் படைகள் மோசமான அழிவை முதன்முறையாகச் சந்தித்தது. அதிலிருந்து மீள்வதற்கு நெப்போலியனால் முடியாத இக்கட்டான நிலைமை ஏற்பட்டது. 1813ம் ஆண்டு அக்டோபர் மாதம் 'லீப்சிக்' என்னும் இடத்தில் நெப்போலியனின் படைகளை ஆறாவது கூட்டணி முறியடித்து பின்வாங்கச் செய்தது. 1814ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கூட்டணி பிரான்ஸ் நாடு முழுவதையும் கைப்பற்றி, நெப்போலியனைக் கைது செய்தது. இதற்கு மேலும் நெப்போலியனை உயிரோடு விட்டு வைத்தால் ஆபத்து என்று நினைத்தது ஆறாவது கூட்டணியில் ஒன்றான பிரிட்டன்.
எல்பாத் தீவுக்கு நாடு கடத்தப்பட்டார் நெப்போலியன். அங்கு சிறை வைக்கப்பட்டார். அங்கிருந்து தப்பி அடுத்த ஓராண்டுக்குள் மீண்டும் தனது பலத்தைப் பெருக்கிக் கொண்ட நெப்போலியன் இழந்த நாட்டைக் கைப்பற்றி, பிரான்ஸ் தேசத்தின் மன்னராக மீண்டும் ஆனார்.
அதன்பிறகும் எதிரிகளோடு நடந்த போரில் மீண்டும் வாட்டர்லு என்னுமிடத்தில் தோல்வியைச் சந்தித்த நெப்போலியன், அத்துடன் தன் வாழ்நாளின் இறுதி அத்தியாயத்தில் இருந்தார். பிரிட்டீஷாரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த செயின்ட் ஹெலினா என்னும் தீவிற்குக் கொண்டு செல்லப்பட்டார் நெப்போலியன். ஆறாண்டு கள் கொடுஞ்சிறையில் இருந்த நெப்போலியன் இறுதியில் தனது 52வது வயதில் வயிற்றுப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரண மடைந்தார். ஆனால், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக இன்று வரை சந்தேகங்கள் எழுந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், உண்மையிலேயே அவர் எப்படி இறந்தார் என்பதற்கான சரியான விடை இதுவரை கிடைக்கவே இல்லை.
இவர் இறந்ததும் இவரது தலைமுடி மட்டும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெப்போலியனின் சாவில் சந்தேகம் தோன்றியதன் காரணமாக 1961ம் ஆண்டு அவரது தலைமுடி ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அதில் விஷம் இருந்தது தெரியவந்தது. எனவே, பிரிட்டீஷ் அரசு மாவீரன் நெப்போலியனை விஷம் வைத்துக் கொன்று இருக்கலாம் என்று பரவலாக அனைவராலும் நம்பப்பட்டது.
இதனிடையே அண்மையில் இத்தாலி நாட்டு விஞ்ஞானிகள் சிலர் நெப்போலியனின் தலை முடியை அணு சக்தியைப் பயன்படுத்தி புதிய தொழில் நுட்பத்தைக் கொண்டு ஆராய்ச்சி செய்தனர். ஆய்வின் முடிவில், நெப்போலியனைக் கொல்கிற அளவிற்கு அவரது தலைமுடியில் விஷத்தன்மை இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது சிறுவனாக இருந்தபோது அவரது முடியில் எந்த அளவிற்கு விஷத்தன்மை இருந்ததோ, அதே அளவு விஷத் தன்மைதான் அவர் இறக்கும்போதும் அவரது முடியில் இருந்ததாக இத்தாலிய விஞ்ஞானிகள் தெரிவித்தனர். எனவே, வயிற்றுப் புற்றுநோய் பாதிப்பு காரணமாகவே நெப்போலியன் மரணமடைந்தார் என்பது உண்மைதான் என்று கூறி சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
ஆனாலும் இத்தாலிய விஞ்ஞானிகளின் கருத்தை ஏற்க உலகில் பலரும் மறுத்து வருகின்றனர். எனினும், நெப்போலியன் ஆர்சனிக் என்னும் கொடிய விஷம் காரணமாகவே மரணமடைந்ததாகவும் ஒரு சந்தேகம் தோன்றியது.
இந்நிலையில், அவரது மரணம் பற்றிய சந்தேகங்கள் எழத் தொடங்கியதுமே அவர் அடைக்கப்பட்டிருந்த சிறையின் அறையை வல்லுநர்கள் பலரும் நுண்மையாக ஆய்வு செய்தனர். அப்போது அங்கு இன்னும் சில சந்தேகங்களைத் தூண்டக் கூடிய வகையில் காரணங்கள் அமைந்திருந்தன.
நெப்போலியன் அடைக்கப்பட்டிருந்த அறையில் இருந்த ஓவியம் ஒன்று முதல் சந்தேகத்தைக் கிளப்பியது. அடுத்த சந்தேகம், அந்த அறைச் சுவரை அலங்கரித்த வால் பேப்பர்கள். முதலில் சுவரில் வரையப்பட்டிருந்த ஓவியத்தை நன்றாக ஆய்வு செய்தனர். அப்போது அதில் விஷம் பூசப்பட்டிருந்தது தெரிந்தது. அதாவது பாம்பின் விஷத்தை ஒரு வர்ணத்தில் கலந்து அந்த சுவர் ஓவியத்தில் பயன்படுத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஓவியத்தில் விஷம் தடவப்பட்டிருந்ததற்கும், நெப்போலியன் சாவுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?
அந்த ஓவியத்தின் அருகிலேயே நெப்போலியன் இருக்க நேரிட்டது. இதனால் விஷம் கலந்த காற்றையே அவர் சுவாசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே, அதுவே அவரது உடம்பில் சிறுகச் சிறுகக் கலந்து மரணத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இன்னொன்று அங்கு சுவரை அலங்கரித்த வால் பேப்பர்கள். அதனை சுவரில் ஒட்டுவதற் கான பசையிலும் கொடிய விஷம் கலக்கப் பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு உணவளிக்காமல் காயப் போட்டிருந்த காரணத்தால் கொடிய பசி ஏற்பட்டிருக்க வேண்டும். அப்போது வேறு வழியின்றி சுவரில் இருந்த வால் பேப்பரைக் கிழித்துத் தின்றிருக்கலாம். அதில் கலந்திருந்த விஷம் அவருள் கலந்து மரணத்தை உண்டாக்கி இருக்கக்கூடும் என்றும் ஒரு சந்தேகம் உள்ளது.
இவ்வாறாக, ஒரு மாவீரனின் மரணத்திற்கான காரணம் இன்றுவரை சரியாகத் தெரியவில்லை என்பதே உண்மை!
