PUBLISHED ON : ஜன 22, 2016

இந்தியா குடியரசான தினம் ஜனவரி 26ம் தேதி 1950ம் ஆண்டு.
குடியரசு என்றால் என்ன?
ஆகஸ்ட் 15, 1947ம் ஆண்டு நம் நாடு விடுதலை பெற்றது. நம் நாட்டை அந்நியர்களிடமிருந்து மீட்டு விடுதலை பெற்றோம்.
அந்நியர்களின் ஆட்சி முறைகளி லிருந்து நமது ஆட்சி முறைகளுக்கு எல்லாவற்றையும் மாற்றி நம்மை நாமே ஆள்வதுதான் குடியரசு எனப்படும்.
குடியரசின் தலைவர்!
குடியரசுத் தலைவரே இந்திய நாட்டின் தலைவர் ஆவார். அவரே முதன்மைக் குடிமகனும் ஆவார். ஒற்றுமை, ஒருமைப் பாடு, நாம் இந்தியர் என்ற உணர்வுகளின் முழுமையான அடையாளமாக குடியரசு தலைவர் விளங்குகிறார்.
35 வயது நிரம்பிய இந்திய குடிமக்கள் எவரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட முடியும். குடியரசுத் தலைவர் பதவி நிரப்பபடாமலிருக்கும் நேரத்திலும், தனது பணியை செய்ய இயலாத நேரத்திலும் குடியரசுத் துணைத் தலைவர் குடியரசுத் தலைவர் பணியை ஏற்று செயல்படுவார்.
குடியரசுத் தலைவரே முப்படைகளின் தலைவர். குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறாமல் எந்த சட்டமும் நிறைவேற்றியதாக கருதப்படாது.
5 ஆண்டுகள் இவர் பதவி வகிக்கலாம். சிவில் அல்லது ராணுவ நீதிமன்றங்களின் மரண தண்டனை தீர்ப்பை ரத்து செய்யும் அதிகாரம் இவருக்கு உண்டு. மன்னிப்பளிக்கும் உரிமை இவருக்குரியது.
மாநில ஆளுநர்கள், உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பிற நீதிபதிகள், தேர்தல் ஆணையர்கள், தணிக்கை துறை தலைமை அதிகாரி போன்றவர்களை நியமிக்கும் அதிகாரமும் இவருக்குண்டு.
அந்நியப் படையெடுப்பு, உள்நாட்டு கலவரங்கள், சட்டம் ஒழுங்கு பாதிப்பு போன்ற நெருக்கடியான நிலைகளை சமாளிக்க அவசர சட்டம் இயற்றும் அதிகாரமும் இவருக்குண்டு.
குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் முடிவடையும் முன்னரே, அந்த பதவிக்குரிய தேர்தல் நடத்தி முடிக்கப்படும்.
தேர்தல் பேரவையை சார்ந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை, மாநிலங்களவை, மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.
உறுப்பினர்களின் விகிதாச்சார ஓட்டு அடிப்படையிலும், ஒற்றை மாற்று ஓட்டு அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.
'டெல்லி'க்கு பதில் 'கல்பா'வா!
இந்தியாவின் தலைநகரம் டெல்லி என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம்.
ஆனால், 'கல்பா' என்ற ஒரு கிராமத்தை இந்தியாவின் தலைநகரமாக மாற்ற வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் காலத்தில் திட்டம் தீட்டப்பட்டது. அப்படிப்பட்ட இந்த கிராமத்தை பற்றி நம்மில் பலருக்கு தெரியாது.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் இமயமலையின் மடியில் அமைந்துள்ள கின்னார் மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய கிராமம்தான் கல்பா.
பனிமலைகள் சூழ்ந்த இந்த கிராமத்தில் உள்ளவர்களின் வாழ்வாதாரமே ஆப்பிள் மரங்களை நம்பித்தான்.
இயற்கை அன்னையை தன்னகத்தே கொண்ட இந்த கிராமத்திற்கு சென்றால், தீராத நோயும் விலகும் என்பது நம்பிக்கை.
ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த, 'லார்டு டல்ஹவுசி' தீராத நோயால் அவதிப்பட்டு வந்தார். கல்பா கிராமத்தை பற்றி கேள்விப்பட்டு அங்கு சென்று தங்கினார். சில நாட்களில் அவரது நோய் விலகியது. இதனால், ஆச்சரியமடைந்த அவர் தனது வாழ்நாள் முழுவதும் அங்கேயே இருக்க திட்டமிட்டார்.
இதற்காக பிரிட்டிஷ் அரசுக்கு அவர் கடிதம் ஒன்று எழுதினார்.
அதில், 'இந்தியாவின் தலைநகரமாக கல்பாவை மாற்ற வேண்டும். அதற்கு அனுமதி தாருங்கள்' என்று கூறியிருந்தார்.
அதற்கான சாத்திய கூறு திட்டங்களை யும் வகுத்தார். அவரது இந்த கடிதத்திற்கு சில காலம் சென்றபின் பிரிட்டிஷ் அரசிடம் இருந்து பதில் வந்தது.
அதில், 'உங்களுக்கு கல்பா கிராமத்தை பிடித்திருந்தால், நீங்கள் அங்கேயே தங்கி கொள்ளலாம். இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக நாங்கள் வேறு ஒருவரை நியமித்துக் கொள்கிறோம்' என்று குறிப்பிடப் பட்டிருந்தது.
ஜெய் ஹிந்த்!
