PUBLISHED ON : அக் 14, 2023

பிறந்த கடற்கரைக்கே வளர்ந்த பின், முட்டை இடுவதற்காக வரும் பெண் ஆமை. இது வியப்பூட்டும். ஒரே கடற்கரை பகுதியில், நுாற்றுக்கணக்கான கடல் ஆமைகள், முட்டை இட கூடும். முட்டை இடுவதற்காக ஒரே இடத்தில் ஆமைகள் கூடுவது, 'அரிபாடா' எனப்படுகிறது. அதாவது, 'வருகை' என்று அர்த்தம்.
டைனோசர் காலத்துக்கு முன்பிருந்தே உலகில் ஆமைகள் வாழ்கின்றன. இந்திய கடல் பகுதியில், 'பங்குனி ஆமை' பெருமளவில் காணப்படுகிறது. இது அளவில் சிறியது.
ஒரு ஆமை, 120 முட்டைகள் வரை இடும். மணலை அள்ளி, வெளியே எடுத்து, முட்டையிட்டு, மூடிய பின் கடலுக்கு திரும்பும். குஞ்சுகள், 45 நாட்களில் வெளிவரும்; அவை, கடல் ஒலியை கேட்டு நீந்தி ஆமை கூட்டத்துடன் சேர்ந்து விடும்.
உலகில் மிகவும் மெல்லிய ஓடு உடையது, 'யாங்ட்ஷி' என்ற ஆமை. வேட்டை, நீர் மாசுபாடு போன்ற காரணங்களால் பேரழிவுக்குள்ளாகிவிட்டது. இந்த இனத்தை சேர்ந்த இரண்டு ஆமைகள் ஆசிய நாடான சீனா, ஷூஷோ உயிரியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டன.
இந்த நிலையில், சீனாவிலிருந்த, 90 வயதான பெண் ஆமை, வயது மூப்பு காரணமாக உயிரிழந்தது. யாங்ட்ஷி இனத்தின் கடைசி பெண் ஆமையும் இறந்ததால், இனப்பெருக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆமை இனம், அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளது.
-- விஜயன் செல்வராஜ்
