PUBLISHED ON : ஜூன் 27, 2020

ஐரோப்பிய நாடான இங்கிலாந்து, பிரிஸ்டல் நகரைச் சேர்ந்த ஓவியன் ஜேம்ஸ் பிக்ஸ். சிறந்த புகைப்பட கலைஞனாகவும் இருந்தான். அவன் வரைந்த ஓவியங்களுக்கு மகத்தான வரவேற்பு இருந்தது. புகழின் உச்சியை தொட்டு விட எண்ணி இரவு, பகலாக உழைத்து வந்தான்.
ஒரு நாள், நகர வீதியில் நடந்து கொண்டிருந்தான். கவனம், வீதியில் நடப்போர் மீதும், அந்தி வானில் ஜொலித்த சூரியன் மீதும் பதிந்திருந்தது. இரட்டை எண்ணத்தால் கவனம் பிசகியது.
வாகன நெரிசலுக்குள் நடந்தவன் மீது, வேகமாக வந்த கார் மோதியது. சாலையில் விழுந்தான். மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். விபத்தால் பார்வை பறிபோனது. துடித்தவன், 'இனிமேல், இயற்கையை ரசித்து ஓவியங்கள் எப்படி தீட்டுவது' என, எண்ணியபடி அழுது புலம்பினான்.
எத்தனை நாட்களுக்கு தான் அழுவது; புலம்புவதால் பயனில்லை என்பதை உணர்ந்தான்.
அடுத்து செய்ய வேண்டியதை யோசித்தான்.
பார்வையிழந்த ஜேம்ஸ், வீதியில் நடக்க முடியாமல் துயரங்களை அனுபவித்தான்; தடுமாறி அவதிப்பட்டான். உலகம் முழுவதும் பார்வையற்றோர் இதே போல் தானே துன்பம் அனுபவிப்பர் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதை போக்க வழி கிடைக்குமா என்று, சிந்திக்கத் தொடங்கினான். அதுவே, ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்த துாண்டியது.
சிறு ஊன்றுகோல் உதவியுடன் சாலையில் நடந்தவனுக்கு கடும் தடுமாற்றம் ஏற்பட்டது. அதற்கான காரணங்களை ஆராய்ந்து யோசித்தான்.
கையில் பிடிக்கும் ஊன்றுகோல் எதிரில் வருவோருக்கு, 'பளிச்' என, தெரியும்படி, 1921ல் வெள்ளை வர்ணம் பூசினான். வர்ணம் பூசிய ஊன்றுகோல் கண்டு, வாகன ஓட்டிகள் ஒதுங்கினர். அந்த ஊன்றுகோலைப் பற்றி, நெரிசலான சாலையை கடக்க பலரும் உதவினர். அது பயன்மிக்கதாக மாறியது.
பார்வையற்றவர்களை பிரத்யேகமாக அடையாளம் காட்டியதால், அந்த ஊன்றுகோல் பிரபலமானது. பார்வை இழந்தவர்களுக்கு மூன்றாம் காலாக உதவி வருகிறது.
ஓவியம் வரைந்து சாதிக்க முயன்றவனுக்கு, அது கை கூடவில்லை. மனம் துவளாமல், பார்வையற்றோருக்கு உதவும் வகையில், ஊன்றுகோலை கண்டுபிடித்தான்.
ஐரோப்பிய நாடான பிரான்சை சேர்ந்த கெய்லி டி ஹெர்ப்மொன்ட், வெள்ளை நிற ஊன்றுகோல் பயன்பாட்டை ஐரோப்பிய நாடுகளில் பரப்ப, 1931ல் ஓர் இயக்கம் ஆரம்பித்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த, ரிச்சர்ட் ஹூவர், அந்த ஊன்றுகோலை அலுமினிய குழாயில் உருவாக்கி மேம்படுத்தினார். அது நீளமாகவும், மடக்கவும் வசதியாக உருவானது. பார்வையற்றவர்களுக்கு பேருதவியாக உள்ளது.
சிறிய சிந்தனை மாற்றம், எவ்வளவு பெரிய கருவியை உருவாக்கியிருக்கிறது. இளம்பூக்களே... நீங்களும் இவ்வாறு முயற்சி செய்து, புதிய பயன்பாட்டு கருவிகளை உருவாக்க வேண்டும்.
