PUBLISHED ON : ஜன 18, 2020

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார், விளந்தை, அரசு உயர்நிலைப் பள்ளியில், 1967ல், 9ம் வகுப்பு படித்த போது, ஆண்டு விழா நிகழ்ச்சியில் குடுகுடுப்பைக்காரன் வேடத்தில் நடித்தேன்.
தலைமை ஆசிரியர் சூரியமூர்த்தி, மேடையில் அமர்ந்திருந்தார். அவர் சிதம்பரத்தை சேர்ந்தவர். அவரது மனைவி அப்போது கர்ப்பமாக இருந்தார். அதை நினைவில் கொண்டு, 'பெரிய வாத்தியாருக்கு ஆண் வாரிசு பிறக்கப் போகுது... நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...' என்று, குறி சொல்வது போல் நடித்தேன்.
பலத்த கைத்தட்டலுடன் சிரித்து ரசித்தனர்.
நான் சொன்னது போல், ஆண் குழந்தை பிறந்தது. மகிழ்ந்த தலைமையாசிரியர், இறை வணக்க கூட்டத்தில், கைத்தறி துண்டு, கற்றல் தொடர்பான புத்தகங்களை பரிசாக வழங்கினார்.
அவர் வழங்கிய புத்தக வழிகாட்டுதலுடன், ஆங்கிலம் கற்றேன். திருக்குறளில் அறத்தை பயின்றேன்.
அதே பள்ளியில், சத்துணவு பொறுப்பாளராக பணி செய்து ஓய்வு பெற்றேன்.
எனக்கு இப்போது, 71 வயதாகிறது; அந்த தலைமை ஆசிரியர் பெயரை, அவர் நினைவாக என் தங்கை மகனுக்கு சூட்டியுள்ளேன்.
- சி.ஆதிமூலம், விழுப்புரம்.
தொடர்புக்கு: 95970 52762
