PUBLISHED ON : நவ 30, 2019

விருதுநகர் மாவட்டம், மேலக்கோட்டையூர், சின்னையாபுரம், தேவசகாயம் அன்னத்தாயம்மாள் மேல்நிலைப் பள்ளியில், 2008 வரை, 28 ஆண்டுகள் ஆசிரியையாக பணியாற்றினேன். சனிக்கிழமைகளில் காலை, 9:00 முதல் பகல், 1:00 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடத்துவோம்.
கிராம சிறுவர்கள் சாப்பிடாமல் உற்சாகமின்றி வருவர்; பலர் அடிக்கடி விடுப்பு எடுப்பர். இதை மாற்ற, சிறுவர்மலர் இதழ் உதவியது. சனிக்கிழமை தோறும் கடைசி பாட வேளையை, ஒரு குட்டி இலக்கிய மன்றமாக்கினோம்.
சிறுவர்மலர் இதழில் வரும் தகவல்களை பயன்படுத்தி, நடிப்பு, வாசிப்பு, பொது அறிவு கேள்விபதில், வினாடி - வினா, கதை கூறல் என, நிகழ்வுகளை உருவாக்குவோம்.
மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று மகிழ்வர். பொது அறிவு புதையலை பெறுவர். இது தரும் சுவாரசியத்தால், அன்று யாரும் விடுப்பு எடுப்பதில்லை.
மாணவ, மாணவியரின் ஆளுமையை வளர்ப்பதுடன், திறமைகளை வெளிக்கொணர உதவும் ஆசானாகவும் விளங்குகிறது, சிறுவர்மலர் இதழ்.
குட்டிகள் வரையும் ஓவியங்களை மாதிரியாகக் கொண்டு, வாசலில் தினமும் கோலம் போட்டு, வண்ணங்களால் நிரப்புகிறேன். பலரும் ரசித்து பாராட்டுகின்றனர்.
சிறியோரை மட்டுமல்ல, பெரியோரையும் மகிழ்விக்கும் ஒப்பற்ற மலர் இது!
- கே.கலாவதி, விருதுநகர்.
