PUBLISHED ON : டிச 14, 2019

தமிழக அரசில் பணி செய்து ஓய்வு பெற்றேன்; தினமலர் நாளிதழை, 10 ஆண்டுகளாக படித்து வருகிறேன். இணைப்பு இதழ்களை விரும்பி படிக்கிறேன். பேத்தியுடன், என்னை இணைக்கும் பாலமாக உள்ளது, சிறுவர்மலர் இதழ்.
அவளது ஒன்றரை வயதில் துவங்கியது இந்த உறவு. சிறுவர்மலர் இதழில் வரும் படங்களைக் காட்டி, உறவு முறைகளை சொல்லி கொடுப்பேன்.
பெற்றோருடன், புனாவில் அவள் வசித்த போது, சிறுவர்மலர் இதழ்களை சேகரித்து எடுத்து செல்வேன். கதைகள், மொக்க ஜோக்ஸ், குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் என, அனைத்தையும் படித்தும், பார்த்தும் ரசிப்போம்.
சென்னை திரும்ப ஆயத்தமான போது, புனா வீட்டில் இருந்த, சிறுவர்மலர் இதழ்களை எல்லாம், எடைக்கு போட, அவளது பெற்றோர் முயன்றுள்ளனர்.
இதைக் கண்டதும் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு, 'அம்மாவும், அப்பாவும் அவங்களோட புத்தகங்களை சென்னைக்கு எடுத்து வர்றாங்க. ஆனால், நம்ம சிறுவர்மலர் புத்தகத்தை மட்டும் பழைய பேப்பர் கடையில போடுறாங்க. அவங்களை திட்டுங்க பாட்டி...' என்று அங்கலாய்த்தாள்.
பழைய பேப்பர் வியபாரி நெகிழ்ந்து, சிறுவர்மலர் இதழ்களை திருப்பி கொடுத்துள்ளார். அவற்றை எடுத்து வந்து, குதுாகலமாக என்னிடம் காட்டினாள். சிறுவர்மலர் இதழ், வாழ்வில் உறவுப்பாலமாக உள்ளது.
- தி.பூங்கோதை, சென்னை.
