PUBLISHED ON : ஆக 31, 2024

என் வயது, 71; என்.எல்.சி., நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். நீண்ட காலமாக, தினமலர் நாளிதழ் வாசகராக இருப்பதில் பெருமை கொள்கிறேன். என் போன்ற முதியோர், சிறுவர்மலர் இதழ் வாசிக்கும் போது, குழந்தை போலாகி உற்சாகம் கொள்கிறோம்.
முதல் பக்க குழந்தை படம் துவங்கி, கடைசி பக்கம் வரை சொக்க வைக்கிறது. குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பர். ஆனால் முதியோரையும், தெய்வமாக கருதி மதிப்பளிக்கிறது சிறுவர்மலர்!
தனிமையில் வாடும் வயது முதிர்ந்த காலத்தில், முதியோருக்கு ஒரு வீட்டு நுாலகம் போல செயல்படுகிறது, சிறுவர்மலர். நம்பிக்கை தரும் ஊன்று கோலாகவும், அறிவு தாகத்திற்கு ஜீவ நதியாகவும் உள்ளது. மணற்கேணி போல நினைவுகளை ஊற்றெடுக்க வைக்கிறது.
பக்கத்தை திருப்ப திருப்ப அமுதசுரபி போல், சிந்தனைகளை அள்ளித் தருகிறது. மனப்பசிக்கு உணவாக இருக்கிறது. மாணவ, மாணவியர் உயர்வுக்கு வழிகாட்டுகிறது. குடியிருந்த கோவிலாக சிறுவர்மலர் இதழ் அமைந்துள்ளது. வள்ளலார் ஏற்றிய அணையாத ஜோதி போல் வழிகாட்டுகிறது.
சமுதாயம் சிறக்க தொடர்ந்து மணம் வீசியபடியே இருக்கும் சிறுவர்மலர் இதழை வாழ்த்துகிறேன்.
- கோ.ராமசாமி, கடலுார்.
தொடர்புக்கு: 9842055118
