தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சுண்ணாம்பு எங்கே?

சுண்ணாம்பு எங்கே?

சுண்ணாம்பு எங்கே?


PUBLISHED ON : ஜூன் 12, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 12, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மொகலாய மன்னர் அக்பர் சக்ரவர்த்திக்கு ஓர் எண்ணம் உதித்தது.

'பூமியில் மாளிகை கட்டிக் கொண்டு வாழ்வதை விட ஆகாயத்தில் கட்டிக் கொண்டு வாழ்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?' என்று நினைத்தார். இந்த விசித்திர எண்ணம் அவர் மனத்தில் உதித்தபோது பீர்பல் அவ்விடம் வந்தார்.

பீர்பலைக் கண்டதும் அக்பர், ''பீர்பல், வான மண்டலத்தில் நமக்கொரு மாளிகை கட்ட வேண்டும். அதற்கு எவ்வளவு செலவு ஆனாலும் பாதகமில்லை. உடனே அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்,'' என்று உத்தரவிட்டார்.

இதைக் கேட்டதும் பீர்பல் திடுக்கிட்டார்.

'ஆகாயத்தில் மாளிகை கட்டுவதா?' என்று திகைத்தார். ஆயினும் மன்னரின் எதிரில் தம்முடைய வியப்பையும், திகைப்பையும் வெளிக்காட்டாமல், ''ஆகட்டும் அரசே!'' என்றார்.

அக்பர் ஏதாவது கூறிவிட்டாரானால் அதை எதிர்த்து, ''இது முடியுமா?'' இப்படியும் நடக்குமா?'' என்றெல்லாம் முதலில் சொல்ல மாட்டார் பீர்பல். தம் செய்கையாலும், பேச்சாலும் முடிவில் அக்பர் சக்ரவர்த்தியே தாம் சொல்லியது தவறு என்று உணரும் வகையில் செய்து விடுவார்.

பீர்பல் ஆகாய மாளிகை கட்டுவதற்காகப் பொருள் பெற்றுக் கொண்டு அரசரிடம், ''அரசே, ஆகாய மாளிகை கட்டுவதற்கான சிற்பிகளைத் தேடி வெளியூர் செல்கிறேன். திரும்பி வர இரண்டு மூன்று மாதங்கள் ஆகும்,'' என்றார்.

''ஆகட்டும். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கவலையில்லை. என் கனவு நனவாக வேண்டும். ஆகாயத்தில் நமது மாளிகை கம்பீரமாகக் காட்சியளிக்க வேண்டும்,'' என்றார் அக்பர்.

அரண்மனையிலிருந்து வந்த பீர்பல் நேரே பறவைகளை வேட்டையாடும் வேடனொருவனிடம் சென்று, ''எனக்கு இன்னும் இரண்டு மூன்று தினங்களுக்குள் நிறைய கிளிகள் வேண்டும். உயிருடன் கொடுத்தால் நிறையப் பொருள் தருவேன்,'' என்றார்.

இரண்டு மூன்று நாட்கள் சென்றவுடன், வேடனும் நூற்றுக்கணக்கான கிளிகளைப் பிடித்து வந்து பீர்பலிடம் கொடுத்தான். பீர்பல் அவற்றில் ஐம்பது கிளிகளை மட்டும் எடுத்துக் கொண்டு, மீதியை பறக்க விட்டு விட்டார். வேடனுக்கு தாம் முன்னர் கூறிய படியே நிறையப் பொருள் கொடுத்து அனுப்பி வைத்தார்.

பீர்பல் ஐம்பது கிளிகளுக்கும் பேசக் கற்றுக் கொடுத்தார். ஒவ்வொரு கிளிக்கும், ''சுண்ணாம்பு கொண்டு வா! மணல் கொண்டு வா! செங்கல் எங்கே? கதவை இங்கே பொருத்து!'' என்று நன்றாகப் பேசும்படியாக கற்றுக் கொடுத்தார்.

கிளிகளுக்கு பேச கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது அரண்மனையிலிருந்து எவர் வந்து கேட்டாலும், தாம் ஊரில் இல்லை என்று கூறுமாறு தம் மகளுக்கும் கட்டளையிட்டிருந்தார்.

இரண்டு மாதங்கள் சென்றன-

பீர்பல் தம்முடன் இல்லாத குறையை நினைத்து அக்பர் மிகவும் வருந்தினார். பீர்பலை கூட்டிவருமாறு ஓர் ஆளை அவர் வீட்டிற்கு அனுப்பினார்.

சற்று நேரம் சென்றவுடன் அவன், ''அரசே, பீர்பல் வீட்டில் இல்லை. அவர் ஆகாய மாளிகை கட்டுவதில் தேர்ச்சி பெற்ற சிற்பிகளைக் கூட்டிவருவதற்காக வெளியூர் சென்றிருக்கிறாராம். இன்னும் ஒரு மாதத்தில் வந்து விடுவாரென்று அவருடைய வீட்டில் கூறினார்கள்,'' என்றான்.

இந்த பதிலைக் கேட்டதும் அக்பர் முதலில் ஏமாற்றமடைந்தார். ஆயினும் தாம் கண்ட கனவு வான மண்டலத்தில் மாளிகை ஒன்று கம்பீரமாகக் கட்டப்படப் போவதை எண்ணி, எண்ணி மகிழ்ந்தார்.

மூன்று மாதங்கள் சென்றன. பீர்பல் கிளிகளுக்கு நன்றாக பேச கற்றுக் கொடுத்து விட்டார். கிளிகளும் மிகத் தெளிவாகப் பிழையின்றி அவர் சொல்லிக் கொடுத்ததை பேச கற்றுக் கொண்டன. அவைகளை அரண்மனைக்குப் பக்கத்தில் உள்ள ஒரு வீட்டின் தனியறையில் பூட்டி வைத்துவிட்டு அக்பரிடம் சென்றார் பீர்பல்.

''அரசே, ஆகாய மாளிகை கட்டுவதற்கு சிற்பிகள் வந்துள்ளனர். வேலை தொடங்கப் போகிறது. தாங்கள் வந்து பார்வையிட வேண்டும்,'' என்றார்.

அக்பரும் பீர்பலுடன் சென்றார். பீர்பல் கிளிகளை அடைத்து வைத்திருந்த அறைக் கதவைத் திறந்ததும் கிளிகள், 'விர்ரென்று ஆகாயத்தை நோக்கிப் பறந்து சென்றன. அவை மேலே சென்றதும், ''சுண்ணாம்பு கொண்டு வா! மணல் கொண்டு வா! தண்ணீர் ஊற்று! செங்கல்லை அடுக்கு! ஜன்னலை இங்கே பொருத்து!'' என்று கூவிக் கொண்டே பறந்து சென்றன.

அக்பர் சக்கரவர்த்தி ஆச்சரியத்துடன் பீர்பலைப் பார்த்து, ''இது என்ன? இந்தக் கிளிகள் இப்படிப் பேசுகின்றன!'' என்றார்.

''ஆம், அரசே! அவைகளை ஆகாயத்தில் மாளிகை கட்டுகின்றன!'' என்றார் பீர்பல்.

அப்போதுதான் தாம் கூறியது நிறைவேற முடியாத ஒன்று என்று உணர்ந்த அக்பர் சக்ரவர்த்தி, பீர்பலின் அறிவுத்திறனை வியந்து பாராட்டினார்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us