
கோவை, சர்வஜன பள்ளியில், 1959ல், 6ம் வகுப்பு படித்தபோது, வரலாறு ஆசிரியராக சந்தானம் இருந்தார். வகுப்பு தேர்வில், வரலாற்று நிகழ்வு ஒன்றின் ஆண்டை தவறாக குறிப்பிட்டு விட்டேன்.
அதைக் கண்டதும், 'பளார்' என கன்னத்தில் அறைந்து, 'சரித்திரம் என்பது ஒரு நிகழ்வின் சாட்சி... அதை, விருப்பப்படி மாற்ற முடியாது. நிகழ்வு நடந்த ஆண்டு சரியாக தெரியவில்லை என்றால், தவறாக குறிக்க கூடாது...' என அறிவுரை வழங்கினார்.
அதை மனதில் ஏற்று படித்தேன்; மேற்படிப்பை தொடர்ந்து உயர்ந்தேன்.
கோவையில் புகழ்பெற்ற கல்லுாரி மாணவியர் விடுதியில், 2009ல் பணியாற்றி வந்தேன். அந்த விடுதிக்கு கட்டணம் செலுத்த வந்திருந்தார் அந்த ஆசிரியர். என்னை அறிமுகம் செய்து, அவரிடம் அடிவாங்கிய சம்பவத்தை நினைவு கூர்ந்தேன்.
மிகவும் வியந்து, 'அடடே... 50 ஆண்டுகளுக்குப் பின்னும் நினைவில் வைத்துள்ளாயே...' என நெகிழ்ந்து, மகிழ்ச்சியுடன் நலம் விசாரித்தார்.
தற்போது என் வயது, 72; பள்ளிப்பருவ நினைவுகள் எல்லாம் பசுமையாக உள்ளன. அந்த ஆசிரியர் வலியுறுத்திய துல்லியத்தை, எல்லா செயல்களிலும் கடைபிடித்து வருகிறேன்.
- பீ.முரளி, கோவை.
தொடர்புக்கு: 98401 54561

