உலகை இந்தாண்டு கொரோனா புரட்டி எடுத்தது. மனிதர்களின் அன்றாட வாழ்க்கை மாறிப்போனது. அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல், கிருமி நாசினியால் சுத்தம் செய்தல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை (6 அடி) பின்பற்றினர்.
எங்கும் வணக்கம்
கொரோனா காலத்தில் கை குலுக்குவது, கட்டி அணைத்து மரியாதை செலுத்துவது காணாமல் போனது. அனைவரும் கை கூப்பி வணக்கம் தெரிவிக்கும் முறைக்கு மாறினர்.
வீடே அலுவலகம்
கொரோனா அச்சத்தால் மக்கள் வெளியில் செல்வது குறைந்தது. வீட்டில் இருந்து அலுவலக பணியை செய்தனர். இதனால் மின்சாரசேமிப்பு, போக்குவரத்து நெரிசல் குறைவு போன்ற நன்மைகளும் ஏற்பட்டன.
'ஆன்லைன்' வகுப்பு
கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு 'ஆன்லைன்' மூலம் வகுப்புகள் நடந்தன.
'டோர் டெலிவரி'
மளிகை, மருத்துவ பொருட்கள் வீடு தேடி வந்தன. வீட்டில் இருந்தபடியே 'ஆன்லைன்' மூலம் பொழுதுபோக்குவது அதிகரித்தது.
மாசு குறைந்தது
சீனாவில் இந்த ஆண்டு துவக்கத்தில் சுற்றுச்சூழல் மாசு 25 சதவீதம் வரை குறைந்தது. தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் நிலக்கரி பயன்பாடு 40 சதவீதம் குறைந்தது. இந்தியாவில் மின்சார பயன்பாடு 26 சதவீதம் குறைந்துள்ளது.
தப்பிய கிராமம்
கிருமி தொற்றுகள், நகரங்களில் வேகமாக பரவியது. கிராமப்புறங்களில் கொரோனா தொற்று அதிக அளவில் ஏற்படவில்லை
'இ-பாஸ்'
தமிழகத்தில் பயணம் செய்ய 'இ-பாஸ்' முறை அறிமுகமானது. ஒரு மாநிலத்தில் இருந்து வேறு மாநிலங்கள், ஒரு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு முன் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே செல்ல முடிந்தது. இதனால் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.
'ஆல்-பாஸ்'
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படாததால் 'ஆல்-பாஸ்' என அறிவிக்கப்பட்டது. பொதுத்தேர்வு எழுத இருந்த 10ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது.
பாரம்பரிய விளையாட்டு
ஊரடங்கு காரணமாக அனைவரும் வீட்டில் முடங்கியதால் தாயம், பல்லாங்குழி, சதுரங்கம் ('செஸ்') போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் அதிகமாக விளையாடப்பட்டன.
பாரம்பரிய மருத்துவம்
மஞ்சள், துளசி, நிலவேம்பு, கபசுர குடிநீர்போன்ற பாரம்பரிய மருத்துவம் பலன் தந்தது.
செயற்கை நுண்ணறிவு புரட்சி
கொரோனாவுக்கு எதிரான போரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை, சீனாகையாண்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, 'ரோபோ'க்களை பயன்படுத்தியது, 'பிக் டேட்டா' தொழில்நுட்பம் மூலம், பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புகளை எளிதாக கண்டறிந்தது உட்பட, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சீனாவுக்கு பெரிதாக கைகொடுத்தது.
சுற்றுலா பாதிப்பு
கொரோனா காலத்தில் வருமானம் இல்லாமல் உலக மக்கள் தவித்தனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு கால்நடையாக சென்ற பரிதாபமும் நடந்தது. விமானம், ரயில் சேவை நிறுத்தப்பட்டதால், சுற்றுலா பாதிக்கப்பட்டது.
சீனாவின் 'சீதனம்'
* 2019, டிச. 31: சீனாவின் வூகான் நகரில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டது.
* 2020, ஜன. 30: இந்தியாவில் முதன்முறையாக கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு 'கொரோனா' உறுதி.
* ஜன. 31: உலக சுகாதார நிறுவனம் 'கொரோனா' பரவியதால் சுகாதார அவசர நிலையை பிரகடனம் செய்தது.
* மார்ச் 7: ஓமனில் இருந்து காஞ்சிபுரம் திரும்பிய ஒருவருக்கு தமிழகத்தில் முதன்முறையாக 'கொரோனா'.
* மார்ச் 12: கர்நாடகாவைச் சேர்ந்த 76 வயது முதியவர் கொரோனா தொற்றால் மரணமடைந்த முதல் இந்தியர்.
* மார்ச் 22: கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஒருநாள் 14 மணி நேரம் ஊரடங்கு.
* மார்ச் 24: இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாட்கள் முழு ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார்.
* டிச. 3: அமெரிக்காவின் பைசர் கொரோனா தடுப்பூசி பிரிட்டனில் பயன்பாட்டுக்கு வந்தது.
* டிச. 18: இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியை தாண்டியது.
* டிச. 21: பிரிட்டனில் புதிய கொரோனா வகை கண்டறியப்பட்டது.