தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/குருவை மிஞ்சின சீடன்!

குருவை மிஞ்சின சீடன்!

குருவை மிஞ்சின சீடன்!


PUBLISHED ON : மே 12, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 12, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'குரு பக்தி' பற்றி மிகவும் உயர்வாக சொல்லப் பட்டுள்ளது. குரு என்ன சொல்கிறாரோ, அதன்படி செய்ய வேண்டியது சீடனின் கடமை. குரு வாக்குக்கு மறுவாக்கு கிடையாது. அப்படியானால், குரு எதையெல்லாம் செய்யச் சொல்கிறாரோ, அதையெல்லாம் சீடன் அப்படியே செய்யத்தான் வேண்டுமா? ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், 'அப்படி செய்ய மாட்டேன்...' என்று சீடன் சொல்லலாமா? இதற்கு யக்ஞவல்கியர் என்ற மகானின் கதையைச் கேளுங்கள்...

யக்ஞவல்கியர் என்பவர், தன் மாமாவிடமே யஜுர் வேதம் பயின்று, கங்காதீரத்தில் வேத விசாரம், பிரசங்கம் எல்லாம் செய்து கொண்டிருந்தார். மக்கள் இவருடைய வேத சாஸ்திர ஞானத்தை வெகுவாகப் புகழ்ந்து, பாராட்டினர். தன் சீடன் தன்னை விட பிரபலமாவதைக் கண்ட மாமா (குரு) பொறாமைப்பட்டார்; இருந்தாலும், ஒன்றும் செய்ய முடியவில்லை.

அந்த ஊர் அரசனுக்கு ஏதோ ஒரு நோய் கண்டது. அரண்மனை வைத்தியர்கள் எல்லாம் வைத்தியம் செய்தும் நோய் தீரவில்லை. யக்ஞவல்கியரின் மாமாதான் அரசனுக்குப் புரோகிதர். அதனால், அரசர், இவரை கூப்பிட்டு, 'உங்களுக்குத் தான் மந்திர சாஸ்திரங்கள் தெரியுமே... நீங்கள் இந்த நோய்க்கு ஏதாவது பரிகாரம் செய்யுங்கள்...' என்றார்.

இவரும் தினமும் பரிகாரம் செய்து, ஜலத்தை மந்திரித்து ஒரு சீடனிடம் கொடுத்து அனுப்புவார். இப்படி, 364 சீடர்கள் மூலம் தினமும் தீர்த்தம் அனுப்பி னார்; அரசனும் அதைச் சாப்பிட் டான். ஆனாலும் நோய் தீரவில்லை. அரசனுக்கு இவர் மீது மதிப்பும், மந்திர தீர்த்தத்தின் மீது நம்பிக்கையும் குறைந்தது.

கடைசி நாள் யக்ஞவல்கியரை வைத்து மந்திர ஜெபம் செய்து, அந்த தீர்த்தத்தை அவரிடமே கொடுத்து, அரசனுக்கு அளிக்கும்படி சொன்னார். யக்ஞவல்கியரும் அதை அரசனிடம் கொடுக்கப் போனார். இதைக் கண்ட அரசனுக்கு கோபம் வந்தது. 'என்ன... தீர்த்தமா? இது வரை, 364 பேர் சாந்தி செய்து, கொடுத்த தீர்த்தத்தால் ஒரு பயனுமில்லை. நீங்கள் கொண்டு வந்து கொடுத்த தீர்த்தத்தால் மட்டும் என்ன பயன் ஏற்படும்? இதைக் கொண்டு போய் குதிரை லாயத்தில் கொட்டி விட்டு, வீட்டுக்குப் போம்...' என்றார்; யக்ஞவல்கியருக்கு அவமானமாகி விட்டது. அப்படியே அந்த தீர்த்தத்தை குதிரை லாயத்தில் கொட்டி விட்டு, வீடு வந்து சேர்ந்தார்.

அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. இவர் குதிரை லாயத்தில் தீர்த்தத்தைக் கொட்டியதும், அங்கே இருந்த காய்ந்த மரங்கள் துளிர் விட்டு புஷ்பித்தது. இதைக் கண்ட சேவகர்களும், மந்திரிகளும் அரசனிடம் தெரிவித்தனர்.

இதைக் கேட்டதும், அரசன், தான் யக்ஞவல்கியரையும், தீர்த்தத்தையும் அவமதித்து விட்டதற்காக வருந்தினான். யக்ஞவல்கியரிடம் மந்திரிகளை அனுப்பி, மறுபடியும் சாந்தி தீர்த்தம் கொண்டு வரும்படி செய்தி அனுப்பினான்.

மந்திரிகளும், மாமா (குரு) விடம் விஷயத்தைக் கூறினர். மாமா, யக்ஞவல்கியரை கூப்பிட்டு, அரசனுடைய விருப்பத்தைத் தெரிவித்தார்.

'சாந்தி என்பது ஒரு முறை தான் செய்ய வேண்டும். அதே சாந்தியை மறுபடியும் செய்தால் பயன் தராது. அரசன், முதலில் கொடுத்த தீர்த்தத்தை உதாசீனம் செய்து விட்டான். அவனுக்கு அதிர்ஷ்டமில்லை. நோயால் அவதிப்பட வேண்டும் என்பது அவன் தலை எழுத்து. அதனால், நான் மீண்டும் சாந்தி செய்ய மாட்டேன்...' என்றார் யக்ஞவல்கியர். இதைக் கேட்ட குருவுக்கு கோபம் வந்தது.

'நமக்குப் பணமும், பொருளும் கொடுத்து ஆதரிக்கும் அரசனுக்கு நீ உதவ மாட்டேன் என்கிறாய். அப்படியானால், என்னிடம் கற்ற வேதத்தைத் திருப்பி கொடுத்து விடு...' என்றார்.

யக்ஞவல்கியரும் இவரிடம் கற்ற வேதத்தை கக்கி விட்டார். அது தீப்பிழம்பாக வெளிவந்தது. வியாசருடைய ஆக்ஞையால் அதை சில பட்சிகள் சாப்பிட்டு விட்டன.

இந்த சரித்திரத்திலிருந்து என்ன தெரிகிறது என்றால்... குரு, பொதுநலம், பிறர் நலம் கருதி தர்மத்தின்படி எதை செய்யச் சொல்கிறாரோ, அதை சீடன் செய்ய வேண்டும். அதே குரு, சுயநலத்துக்காகவும், பணம், பொருளுக்கு ஆசைப்பட்டு, தர்மத்துக்கு விரோதமாக ஒரு காரியத்தைச் செய்யச் சொன்னால், அது சாஸ்திர விரோதமாக இருந்தால், சீடன் அதை செய்ய வேண்டியதில்லை.

சாஸ்திர சம்பந்தமில்லாத காரியத்தை சுயநலத்துக்காக குரு செய்யவோ, செய்யச் சொல்லவோ கூடாது; சீடன் அதை மறுக்கலாம்.

***

வைரம் ராஜகோபால்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us