PUBLISHED ON : ஜூலை 30, 2017

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, பெரியகோவிலூர் பழங்குடியினத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ராமசாமி - தாயம்மாள் தம்பதியின் மகன், 19 வயதான தேவராஜ்; பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று, மேற்படிப்புக்கான உதவிகள் கிடைக்காததால், மலைப்பகுதியில் நாவல் பழம் விற்று வருகிறார்.
அவர் கூறியதாவது: எனக்கு, இரு சகோதரிகள்; அவர்களுக்கு திருமணம் செய்தபோதே, வீட்டில் நிறைய கடன். படிப்பை பாதியில் நிறுத்தி, வேலைக்கு போகவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஆனால், படிப்பை தொடர வேண்டும் என்ற எண்ணத்தில், நாமக்கல் தெற்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின், அரசு விடுதியில் தங்கி, பிளஸ் 2 முடித்தேன்.
அறிவியல் பிரிவில், 1,051 மதிப்பெண் எடுத்துள்ளேன். மருத்துவ படிப்புக்கான கட் - ஆப் மதிப்பெண், 185; 'நீட்' தேர்வு எழுதவில்லை. வேளாண், கால்நடை, மீன்வளம் படிப்புக்கான கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்துள்ளேன். நிச்சயமாக மூன்று கல்லூரிகளில் ஏதாவது ஒன்றில் வாய்ப்பு கிடைக்கும். கல்லூரியில் சேர்க்க, என் வீட்டில் வசதியில்லை. அதனால், கல்லூரி கட்டணம், புத்தகம் மற்றும் உடை வாங்க, நானே சம்பாதிக்க முடிவு செய்தேன்.
தினமும், அருகில் உள்ள காடுகளுக்கு சென்று, நாவல்பழம் வாங்கி வந்து, கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு விற்று வருகிறேன். ஒரு கூடை பழம் விற்றால், 150 ரூபாய் கிடைக்கும். இந்த லாபத்தை, என் படிப்புக்காக சேமித்து வருகிறேன் என்றார்.
இவருக்கு உதவி செய்ய விரும்புவோர், 81109 25432 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்.
தரணிபாபு.எம்
