PUBLISHED ON : பிப் 17, 2013

* ஆர்.வெங்கடேஷ், வாடிப்பட்டி: நான் ஒரு ஆசிரியன். கொஞ்சம் கலகலப்பான, நகைச்சுவையுள்ள, அலுவலக காரியங்கள் தெரிந்த, கதை, கவிதை, நாடகம் என, பல துறைகளில் கொஞ்சம் அதிகம் தெரிந்துள்ள காரணத்தால், பல பெண்களுடன் பழக, பேச வாய்ப்பு உள்ளது. ஆனால், என் இல்லாள், என் பழக்கம் மற்றும் அணுகுமுறைகளை தவறான கண்ணோட்டத்துடனே பார்ப்பதால், இல்லத்தில் எப்போதும் மன நிம்மதியின்றி ஓயாத சச்சரவு. இதில், என் குறை அதிகமா அல்லது என் மனைவியின் எண்ணம் தவறானதா?
உம் குறை தான் அதிகம். வெளியில் கலகலப்பை ஏற்படுத்துபவர், அதேபோல வீட்டிலும் கலகலப்பை ஏன் ஏற்படுத்தக் கூடாது! உமக்கு தெரிந்தவற்றை பயன்படுத்தி, உம் இல்லாளை, 'எஜுகேட்' செய்ய முடியாதா?
***
* சா.ஹரிஹரசுதன், சிவகாசி : நம்மை விட கீழே உள்ளவர்கள், மேலே உள்ளவர்கள் யாரை பார்த்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்?
இருவரையுமே! மேல் தட்டு, கீழ் மட்டம் இரண்டிலுமுள்ள நல்ல குணங்களை, மனிதாபிமானத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள், போதும்!
***
*என்.நடராஜன், தூத்துக்குடி : நான் ஒரு ஓட்டுனர். கஷ்டப்பட்டு உழைக்கிறேன். எந்த ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. அப்படி இருந்தும், பத்து ரூபாய் கூட மிஞ்சவில்லை. இதற்கு ஒரு வழி சொல்லுங்களேன்...
தொழிலை மாற்றுங்கள்... சொந்தமாக வண்டி வாங்கி ஓட்ட, வங்கியை நாடுங்கள்!
***
*ஏ.விஜயலெட்சுமி, பழனி: நம் கலாசாரத்தில், வெகுவாக ஆணுக்கும், பெண்ணுக்குமிடையே மேம்போக்கான நிலை இருக்கிறது. ஆனால், இந்த அம்சம் அடிப்படையில், 'நட்பென' அங்கீகரிக்கப்பட்ட பெரும்பாலான ஆண் - பெண் மனங்கள், காதல் என்ற நிலையிலிருந்து மீள்வதில்லை. இந்த தவறு யார் மீது?
காஞ்ச மாடு கம்பங் கொல்லையிலே மேய்ஞ்சது மாதிரி என்று சொல்வர் - கேட்டிருக்கிறீர்களா? அதே நிலையில், நம் சமுதாய அமைப்பு உள்ளது. ஆண்களை கண்டால் ஒளியும் நிலை இப்போது நகரங்களில் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக, நமது சமுதாயம் மாறி வருகிறது. காலப் போக்கில் இந்த சமுதாய மறுமலர்ச்சி, கலாசாரத்தை மாற்றும். அப்போது நட்பை, காதலென நினைக்கும் எண்ணங்கள் மறைந்து விடும்!
***
** கே.ரங்கநாதன், ஸ்ரீரங்கம்: முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்கின்றனரே... இது, எந்த அளவுக்கு உண்மை?
எங்கோ ஒரு கிராமத்தில் பிறந்த எம்.ஜி.ஆர்., கருணாநிதி, நிலவில் முதலில் காலடி எடுத்து வைத்த அமெரிக்கரான ஆம்ஸ்ட்ராங், சிகை அலங்கார கலைஞருக்கு மகனாக பிறந்து, உலகம் புகழும், 'லண்டன் டைம்ஸ்' பத்திரிகைக்கு அதிபரான தாம்சன், தினக் கூலியாக இருந்து, பல கோடிகளுக்கு அதிபரான அம்பானி இவர்களெல்லாம், முயற்சி செய்யாமலா முன்னுக்கு வந்தனர்!
***
*எம்.யாஸ்மின், கருங்கல்பாளையம்: என்னதான் அடங்கிப் போனாலும், என் கணவர், என்னை அடித்து துன்புறுத்துகிறார்... நான் என்ன செய்வது?
சம்பாதிக்கிறோம் என்ற திமிர், பெண்களை விட, நமக்கு உடல் வலிமை உள்ளது என்ற ஆணவம் தானே பெரும்பாலான ஆடவரின் இச்செயலுக்கு காரணமாகிறது... சொந்தக் காலில் நிற்க, தேவையான வருமானம் ஈட்ட தொழில் கற்றுக் கொள்ளுங்கள்... சம்பாதிக்க தொடங்குங்கள். அதன்பின், உங்கள் கணவரின் செயலில் முற்றிலும் வித்தியாசத்தைக் காண முடியும்!
***
** சி.பவானி, சென்னை: அரசு பணியிலுள்ள வரனை எதிர்பார்த்து கிடைக்காமல், தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவரை மணந்து கொண்டேன். எதிர்பார்த்தது கிடைக்காமல் போய் விட்டது. மனதை எப்படி திருப்திப்படுத்திக் கொள்வது?
மனித ஆசைகளுக்கு அளவேது? அரசு பணியிலுள்ள மாப்பிள்ளையே கிடைத்திருந்தால், 'அவர் ஆபீசராக இல்லையே... செக்ஷன் ஹெட்டாக இல்லையே... தாசில்தாராக இல்லையே...' என நினைப்பீர்கள். நடந்ததை மறந்து விடுங்கள்; நிகழ்காலம் தான் வாழ்க்கை... அதை மகிழ்ச்சியாக்கிக் கொள்ள முயலுங்கள்!
***
