PUBLISHED ON : மார் 03, 2013

*எம்.சுகாசினி, நங்கநல்லூர்: பொது இடங்களில், நண்பர்கள் அல்லது உறவினர்களைக் கண்டால், அவர்கள் வந்து பேசட்டும் என இராமல், நானே சிரித்தபடி முன் சென்று, 'ஹலோ' சொல்கிறேன். இப்படி பேசுவதால், என் மதிப்புக் குறையும், மரியாதை கெடும் என்கிறார் என் சகோதரி... எப்படி?
குறையவும் செய்யாது, கெட்டும் போகாது; மாறாக, மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கவே செய்யும்! 'நல்ல பொண்ணுமா... கொஞ்சம் கூட தலைக்கனம் இல்லே பாரு...' என்ற பாராட்டுச் சொல்லும் கிடைக்கும்; கைவிடாதீர்கள் இப்பழக்கத்தை!
***
** ஆர்.வேல்முருகன், மதுரை: ரூபாய் நோட்டு அச்சிடும் இயந்திரம் இருந்தால்தான், தனியார் மருத்துவமனையில் வைத்தியம் பார்க்க முடியும் என்றாகி விட்டதே...
தனியார் மருத்துவ மனைகளை நினைத்தாலே, வந்த ஜுரமும் ஓடி விடும் நிலை வந்துவிட்டது. உலக வங்கி, நம் நாட்டில் நடத்திய ஆய்வில், இந்தியர் களில் ஐந்தில் இருவர், கடன் வாங்கியோ, சொத்துகளை விற்றோ தான், மருத்துவச் செலவுகளை சமாளிக்கின்றனர் எனத் தெரிய வந்துள்ளது.
***
*கே.ஜெயா ஹெப்சிபா, விருகம்பாக்கம்: என் தோழி, எனக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டாள்... என் மனம் பழி வாங்கத் துடிக்கிறதே...
செய்யாதீர்கள்; மன்னித்து விடுங்கள்! பழி வாங்கல் ஆரம்பத்தில் இனிக்கும்; மன சாந்தி கிட்டியது போன்ற தோற்றம் கொடுக்கும். ஆனால், அதுவே கசப்பாக மாறி விடும். விரைவில். எய்தவளையே, 'பூமராங்' போல திரும்பி வந்து தாக்கக் கூடும்.
***
*கி.விஷ்ணுவர்தன், கடலூர்: பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரையை, உங்கள் பத்திரிகையின் சின்னமாகப் போட்டு ஆதரவு தருகிறீர்களா?
தினமலர் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு, 1951. அப்போதிருந்தே, 'தினமலர்' இதழின் சின்னம் தாமரை தான். பாரதிய ஜனதா, ஏப்ரல், 5, 1980ல் உதயமானது. அப்போதிலிருந்து, தாமரையை தம் சின்னமாக்கிக் கொண்டனர் பா.ஜ.க.,வினர்.
***
*வி.ரமணன், சிவகாசி: விபச்சார தொழில் பற்றிய ஆய்வுகள் ஏதும் கைவசம் வைத்திருக்கிறீர்களா?
இருக்கிறதே... ஆனால், இது 1992ல் எடுக்கப்பட்டது. மத்திய சமூக நலத்துறை எடுத்த இந்த கணக்கெடுப்பில், விலை மாதர்களில், 15 சதவீதம் பேர், 15 வயதுக்குட்பட்ட சிறுமியர் என்பது தெரிய வந்துள்ளது. பெங்களூரு, சென்னை, டில்லி, ஐதராபாத், கோல்கட்டா, மும்பை ஆகிய நகரங்களில், மொத்தம் ஒரு லட்சம் விலை மாதர் இருப்பதாகவும் கண்டறிந்துள்ளனர்.
***
*பி.சந்திரகுமார், திருப்பூர்: பல்வேறு வார இதழ்களில், வாசகர்களின் படைப்புகளுக்கும், போட்டியில் பெற்ற வெற்றிக்கான பரிசுப் பணமே வருவதில்லையே... என்ன செய்யலாம்?
நினைவூட்டல் கடிதம் எழுதலாம்; பதில் இல்லையெனில், நுகர்வோர் நீதி மன்றம் செல்லலாம்! நம் இதழைப் பொறுத்தவரை, படைப்புகள், போட்டி முடிவுகள் வெளியான தினத்திலிருந்து, 20 தினங்களுக்குள் சன்மானம், பரிசு ஆகியவை உரியவரைச் சென்றடையும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!
***
** கே.ரத்தின சபாபதி, கள்ளக்குறிச்சி: தம் அமைச் சரவை சகாக்களை, அடிக்கடி கழற்றி விட்டு விடுகிறாரே முதல்வர் ஜெ.,
முதல்வர் எதிர்பார்க்கும் செயல் வேகம், புத்திசாலித்தனம், சிக்கல்களை விடுவிக்கும் சாமர்த்தியம், கை சுத்தம் ஆகியவற்றை உன்னிப்பாக கவனிக்கிறார் என்று நினைக்கிறேன். மேற்சொன்னவை இல்லாதோருக்கு, 'டாட்டா' காட்டி விடுகிறார்.
***
