
ஆர்.ஜெயக்குமார், மணப்பாறை: எது, எதற்கு பொறுமை தேவை?
வெற்றி கனிகளை பறிக்க, நல்ல முடிவுகளை பெற, சாதனைகளை படைக்க பொறுமை தேவை. 'பொறுத்தார் பூமி ஆள்வார்' என்று கேள்விப்பட்டதில்லையா?
கே.எல்.ரஞ்சித்குமார், சென்னை: இன்றைய வேலையை இன்றே முடிக்காமல், நாளைக்கு தள்ளிப் போடுகின்றனரே சிலர்...
அந்த சிலர், ஒரு நாளும், ஒரு வேலையையும் முடிக்க மாட்டார்கள். முடிவெடுக்கத் தெரியாத, முடியாத, தைரியமில்லாத நபர்கள் தான் இப்படி செய்வர். இவர்களை நம்பி, ஒரு செயலிலும் இறங்கி விடக் கூடாது!
டி.என்.முகம்மது அலி, நெய்வேலி: வெளிநாட்டு மோகம் நம் இளைஞர்களிடையே குறைந்து விட்டதா?
வாய்ப்பு தான் குறைந்து விட்டது. ஆனால், இளைஞர்களிடையே கம்ப்யூட்டர் மோகமும், அமெரிக்க ஆசையும் துளி கூட மாறவில்லை. இன்னும் சில ஆண்டுகளில் நிலைமை சீராகும் என்கின்றனர்.
கே.வேல்முருகன், வீரபாண்டி: சுற்றுச்சூழல் மாசு அதிகரித்துக் கொண்டே போகிறதே... இதைக் குறைக்க, தடுக்க நம்மால் என்ன செய்ய முடியும்?
மறு சுற்றுக்கு பயன்படாத பிளாஸ்டிக் வகை உபயோகத்தை அறவே நிறுத்த வேண்டும். கடைகளுக்கு செல்லும் போது, துணிப்பையை கொண்டு செல்ல வேண்டும். வேலைக்கோ, பள்ளிக்கோ செல்லும் ஒவ்வொருவரும் தனித்தனியே பைக், கார் பயன்படுத்தாமல் இருந்தால், ஒரு ஆண்டில் ஒரு நபர் மூலம் ஏற்படும், 4.52 கிலோ ஹைட்ரோ கார்பன், 31.25 கிலோ கார்பன் மோனாக்சைடு, 2.42 கிலோ நைட்ரஜன் ஆக்ஸைடு ஆகிய நச்சுக் கலப்பு உருவாவதைத் தடுக்க முடியும்!
ஓ.எஸ்.ராஜகுமாரி, பண்ருட்டி: ஒரு குடும்பத்தில் அதிகம் உழைப்பது ஆணா, பெண்ணா?
சந்தேகமில்லாமல் பெண் தான்; சம்பாதித்து போடுவதுடன் தம் கடமை முடிந்து விட்டதாக பெரும்பாலான ஆண்கள் கருதுகின்றனர். சமைப்பதில் ஆரம்பித்து, பிள்ளைகளின் கல்வி, எதிர்காலம் வரை நெடுந்தூர சிந்தனையுடன் உழைப்பது பெண்கள் தான்!
பி.நந்தகோபாலன், தாம்பரம்: நான் சிறந்த நாவலாசிரியராக விரும்புகிறேன். அதற்கு, வழிமுறைகள் என்னென்ன?
நிறைய படிப்பதுடன், நிறைய பார்க்கவும், கேட்கவும் வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும், காட்சியையும் நுணுக்கமாக தெரிந்து கொள்வதுடன், நிறைய எழுதிப் பழக வேண்டும். இந்தப் பயிற்சியைத் தான் பலரும் கோட்டை விடுகின்றனர்.
க.மாரிமுத்து, கோவை: செழுமையாக வாழ ஆசைப்படுகிறேன்; அதற்கு, நான் என்ன செய்ய வேண்டும்; என்னிடம் என்ன குணம் இருக்க வேண்டும்?
செழுமைக்கு மூலக் காரணமே செயல் திறன்; எனவே, செயல் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். செழுமைக்கு முதல் எதிரி சோம்பேறித்தனம்; அது இருந்தால், முதலில் விரட்டி அடியுங்கள்!
ஜெ.அபிஷேக், குன்னூர்: இன்றைய இளம்பெண்களின் விருப்பம் என்னவாக உள்ளது?
சிரமப்படாத, சுலபமான வேலை; கை நிறைய சம்பளம்; கேள்வி கேட்காத கணவன்... இவற்றின் மீதே பல இளம்பெண்களும் நாட்டம் கொண்டுள்ளதாக உணருகிறேன். (நகரத்து இளைஞிகளைப் பற்றிய கணிப்பு இது!)

