PUBLISHED ON : ஜூலை 24, 2016

எஸ்.தமீமா, திண்டுக்கல்: சினிமா மற்றும் கதைகளில் வருவது போல், ஆண்களுக்கு தண்ணியடித்தால் தான் தைரியம் வருமா?
உண்மைதான்; சரக்கு நேரடியாக முகுளத்தை தாக்கும் போது, இவனிடம் உள்ள, 'இன்ஹிபிஷன்' மறைந்து விடுகிறது. சொல்ல முடியாதவை; செய்ய இயலாததைச் செய்து விடுகிறான்.
சி.எஸ்.ஜெகதீசன், தேனி: உள் ஒன்று வைத்து, புறம் ஒன்று பேசும் நண்பர்களை ஒதுக்குவது எப்படி?
தவிர்க்கக் கூடியவர்களாக இருந்தால், 'உன் சங்காத்தமே வேண்டாம்...' என ஒதுங்கி விடுங்கள். முடியாதவர்களாக இருந்தாலும் சங்கடம் எதுவும் இல்லை. அவர்கள் குணம் தான் உங்களுக்கு தெரிந்து விட்டதே!
என்.ஆஞ்சநேயன், மதுரை: எந்த நிலையிலும் மனிதன் இழக்கக் கூடாதது எதை?
நிதானத்தை! பதறினால், சிதறிப் போகும் காரியம். எந்த சூழ்நிலையிலும் பொறுமையோடு செயல்பட வேண்டும். அவசரம், ஆத்திரம் மற்றும் ஆசையில் நிதானத்தை இழந்தால், நஷ்டங்களையும், அவமானங்களையும், கஷ்டங்களையும், இழப்புகளையும் எதிர்கொள்ள நேரிடும்!
எம்.எஸ்.தில்ஷாத் அகமது, பாலமேடு: இந்த சமுதாயத்தில் நாலு பேர் மதிக்கும்படி நல்லவனாக வாழ ஆசைப்படுகிறேன்; அதற்கு என்ன செய்ய வேண்டும்?
உங்கள் மனசாட்சி சொல்வதைக் கேளுங்கள்... மாமனிதனாகி விடுவீர்கள். மனசாட்சி கெட்டதை ஒரு போதும் சொல்லாது; உங்கள் ஆசை நிறைவேறும்!
பி.ஜெஸிந்தா, அச்சம்பத்து: படித்து, ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் என்னை விட, விவசாய கூலி வேலை செய்யும் என் மாமியாரிடம் எப்போதும் தாராளமாக பணம் புரள்கிறதே... ரகசியம் என்ன?
சிம்பிள் ரகசியம் தான்... மாமியாருக்கு டால்கம் பவுடர், முகத்தில் தடவும் கோல்ட் க்ரீம், ஸ்டிக்கர் பொட்டு, பாடி லோஷன், பெர்ப்யூம்... இதெல்லாம் தேவையில்லை; இயற்கை அழகோடு, சிக்கனமா இருக்காங்க; சில்லரை புரள்கிறது.
ந.ஆறுமுகம், கம்பம்: நன்றி மறந்தவர்களை தண்டிப்பது எப்படி?
தண்டனை கொடுக்க நாம் யார்? நன்றி மறந்தவருக்கு தண்டனை கொடுப்பது எப்படி என்று சிந்தித்துக் கொண்டே இருந்தால், நிம்மதி குறைந்து, பல தொல்லைகளும் வந்து சேரும். அவரவருக்கு கிடைக்க வேண்டியது, அந்தந்த நேரத்தில் கிடைத்தே தீரும்; நிம்மதியாக மற்ற வேலைகளைப் பாருங்கள்!
என்.பழனிச்சாமி, சென்னை: பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா இன்னும் தூங்கிக் கொண்டு உள்ளதே... காரணம் என்ன?
ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட அரசியல்வாதிகளின் சுய நலம் தான் காரணம். பெண் உரிமை, பெண் சுதந்திரம் என வாய் கிழிய பேசுவதெல்லாம் மேடை பேச்சுக்கும், ஓட்டு வாங்கவும் மட்டுமே! உண்மையில் உரிமை கொடுக்க மனமில்லை இவர்களிடம்!
எஸ்.தாரா, மடிப்பாக்கம்: பண்புள்ள ஒரு சமுதாயத்தை யாரால் உருவாக்க முடியும்?
பள்ளிக் கூட ஆசிரியர்களால்! அவர்களால் மட்டுமே பண்பும், வலிமையும் மிக்க மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும். மாணவப் பருவத்திலேயே பண்பட்டு விட்டால், சமுதாயம் ஒழுக்கமானதாகி விடும். ஆனால், பள்ளிக் கூட வாத்தியார்கள் பலர், பள்ளிக்கு போகாமல், சம்பளப் பணத்தை வட்டிக்கு விட்டுக் கொண்டல்லவா உள்ளனர்!
