PUBLISHED ON : டிச 04, 2016

ஆர்.ஹரிஹரன், வில்லாபுரம்: வயதான ஆண்களை மணக்க சம்மதிக்கும் இளம் பெண்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
இள வட்டங்களை விட, அந்த வயதைக் கடந்தவர்கள், அனுபவப்பட்டவர்களாக இருப்பர். இதனால், பக்குவப்பட்டிருப்பர். பக்குவப்பட்டவர்களால், பெண்களைப் புரிந்து கொண்டு, அவர்களுக்கு ஆதரவாக, அனுசரணையாக நடந்து கொள்ள முடியும். மேலும், வாழத் தேவையான பணத்தை ஈட்டி, செட்டில் ஆகி இருப்பர்!
டி.கிறிஸ்டோபர், பம்மல்: கட்டுப்பாடான ஜனநாயகம் என்கிறீர்களே... அதென்ன கட்டுப்பாடான ஜனநாயகம்...'செமி' சர்வாதிகாரமா?
அப்படிக் கூட எடுத்துக் கொள்ளுங்கள்! ஜனநாயகம் என்ற பெயரில், பஸ், ரயிலைக் கொளுத்துவதும், தேசிய நெடுஞ்சாலைகளில் மரங்களை வெட்டி, சாலை நடுவே போட்டு, பொதுமக்களை இன்னல்களுக்கு உள்ளாக்குவதும்... இதற்கெல்லாம் காரணமான சண்டாளர்களை கண் துடைப்புக்கு கைது செய்து, பின், ஜாமினில் விட்டு, அதன்பின், வழக்கை வாபஸ் வாங்குவதும் தான் ஜனநாயகம் என்றால், அது இப்போது, இங்கு, நம் நாடு முன்னேற ஒத்தே வராது; தேவையுமில்லை.
எம்.திவ்யா, கம்பம்: கணவன் - மனைவிக்கிடையே சண்டை, சச்சரவு ஏற்பட்டால், அவை, விவாகரத்து, தற்கொலை முடிவு வரை சென்று விடுகிறதே... சுமூகமாக தீர்த்துக் கொள்வது எப்படி?
விட்டு கொடுக்கும் குணம் இன்மைதான் இவற்றுக்குக் காரணம். தவறு யார் மீது இருந்தாலும், கவுரவம் பாராமல், ஒருவரிடம் ஒருவர் மன்னிப்பு கேட்டுக் கொள்வதில் தவறு ஏதும் இல்லை. இந்நேரத்தில் கேட்கப்படும் மன்னிப்புக்கு, 'கிக்' அதிகம் உண்டு; பிணைப்பை இறுக வைக்கும் மன்னிப்பு அது!
எல்.இளங்குமரன், சூளைமேடு: அதிகமான படிப்பு, ஒருவனை கர்வப்பட வைக்குமா, அமைதியானவனாக மாற்றுமா?
கல்வியின் குணமே அறிவைத் தருவது... அதை பெற்றவன் அமைதியானவனாக, சாந்த குணம் பெற்றவனாக, பொறுமைசாலியாக ஆகி விடுகிறான். ஆனால், 'பிட்' கிராக்கிகள், எத்தனை பட்டம் வாங்கினாலும், மேற்சொன்ன குணங்கள், பண்புகள் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர்.
சி.குணசேகரன், உடுமலைப்பேட்டை: குறிப்பிட்ட அரசியல்வாதியை பத்திரிகைள் எதிர்த்தால், அவருக்கு பாதிப்பு ஏற்படுமா?
அரசியல்வாதியை நேரடியாக கூட எதிர்க்க வேண்டாம்; அந்த அரசியல்வாதிக்கு எதிரான செய்தியை வெளியிட்டாலே போதும்; பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடிய சக்தி, அதிகமாக விற்பனையாகும் வெகுஜன பத்திரிகைகளுக்கு உண்டு.
க.அக்பர்கான், மந்தைவெளி: மக்கள், யாரை அதிகமாக விரும்புகின்றனர்?
'டிக்கெட்' வாங்கி சென்றவர்களை! இந்த உலகில், அவர்கள் தான் இதைக் கொடு, அதைக் கொடு என, தொல்லை தராமல் இருப்பதால்!
எஸ்.கணேசன், நெய்வேலி: படித்து வேலைக்கு போவதால், பெண்கள் நிலை உயர்ந்து விட்டதா?
நிச்சயமாக உயர்ந்து இருக்கிறது. அவர்களுக்கு தன்னம்பிக்கையும், தன் காலில் நிற்கும் பலமும், சமூக அந்தஸ்தும் கிடைத்திருக்கிறது.
எஸ்.முகம்மது, மூலக்குளம்: சாதாரண மனிதன் ஒருவனுக்கு, ஈகை குணமும், தாராள புத்தியும், நல்ல குணமும் எத்தனை வயதில் ஏற்படும்?
இந்த பரபரப்பான உலகில், நீங்கள் கூறிய பண்பு எல்லாம், சாதாரண மனிதன் ஒருவனுக்கு, சாகக் கிடக்கும் தருவாயில் தான் வருகிறது!
