PUBLISHED ON : ஜன 01, 2017

எம்.நவீனா, விழுப்புரம்: மனைவியை அடிமையாக நினைக்கும் கணவனை திருத்துவது எப்படி?
கணவன் கையை எதிர்பார்க்காத, பொருளாதார சுதந்திரம் உடைய பெண், துணிச்சல் பெறுகிறாள்; அவளை அடிமையாக நடத்த கணவன் துணிவதில்லை. அப்படியே நடத்த முயன்றாலும், 'பினான்ஷியலி இன்டிபெண்டன்ட்'டாக இருக்கும் பெண்கள், சுயபச்சாதாபம் கொள்வதில்லை!
எ.அஸ்வத்கந்தன், சென்னை: என் மகன், படித்துவிட்டு, வேலையில்லாமல் இருக்கிறான். ஏதாவது தொழிலில் ஈடுபடுத்த விரும்புகிறேன். எந்த தொழில் துறையில் இறக்கலாம்; யோசனை கூறுங்களேன்...
தரகர், புரோக்கர், கமிஷன் ஏஜன்ட்... இதெல்லாம் பழைய பெயர்கள். இப்பெயர்களை கவுரவக் குறைவாக நினைத்து, 'மீடியேட்டர்' என, தங்கள் பெயரை மாற்றி கொண்டுள்ளனர், இத்தொழிலில் ஈடுபட்டிருப்போர். இவர்களின் தொழில்தான், 'மினிமம் ரிஸ்க்கில்' சுலபமாக, ஏராளமாக, காசு பார்க்கும் தொழிலாக உள்ளது.
ஆர்.ஜெயவேலன், புத்தகரம்: பழனி, சபரிமலை போன்ற ஆன்மிக தலங்களுக்கு, கடன் வாங்கி மாலை போட்டு, திண்டாடி நிற்போர் பற்றி...
கடன் வாங்கி தம்மை தரிசிக்க வரும்படி, எந்தக் கடவுளும் போதிக்கவில்லை. அவரவர் ஊரில் உள்ள கோவில்களுக்கு போனாலே போதும். கடன் வாங்கி மாலை போடுவோர், 'கொழுப்பு' கூடிப் போனவர்கள்; திண்டாடத்தான் செய்வர்!
கே.ஜெகதீசன், திண்டிவனம்: தங்களை யாரும் கவனிப்பதில்லை என்ற மனநிலைக்கு ஆட்பட்டுள்ளனரே வயதானவர்களில் பலர்... இதை மாற்றுவது எப்படி?
இந்த மனநிலைக்கு உள்ளானவர்களை, இனி எவ்வளவு தான் கவனித்தாலும், தம் சுயபச்சாதாபத்தை விட்டு வெளியே வர மாட்டார்கள். ஆனால், மனசாட்சிக்கு விரோதமில்லாமல், இவர்களை கவனிப்பது உரியவர்களின் பொறுப்பு. நாமும் வயதான காலத்தில், இந்த மாதிரியான மனநிலைக்கு உள்ளாகி விடக் கூடாது என்பதில் அனைவரும், இப்போதே மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
வ.சண்முகஜோதி, சிவகாசி: ஆங்கில மொழி அகராதியை தலைகீழாகத் திருப்பி விட்டேன்... 'கக்கூஸ்' என்பது ஆங்கில மொழி சொல் இல்லையா?
இல்லை. அது, ஹிந்தி மற்றும் தமிழ் மொழி சொல் கூட இல்லை; டச்சு மொழி. கழிப்பிடத்தை அம்மொழியில், 'கக்கூயூஸ்' என்று சொல்வராம். அதுதான் திரிந்து, இப்போது உள்ள வடிவத்தை எடுத்துள்ளது என்றார், விவரம் அறிந்த உதவி ஆசிரியர் ஒருவர்!
எஸ்.அந்தோணிராஜ், ஊமச்சிகுளம்: நடிகன்,- அரசியல்வாதி ஒப்பிடுங்களேன்!
இருவருமே நடிகர்கள் தான். பணத்தை வாங்கிக் கொண்டு நடிக்கிறான் நடிகன்; பணம் கிடைக்கும் என்று நடிக்கிறான் அரசியல்வாதி. ஆக, இருவருமே பணம் பண்ணி விடுகின்றனர்.
வி.சந்திரா, திருவான்மியூர்: உடலில் சின்ன ஆபரேஷன் செய்தால் கூட, அதையே சாக்கு வைத்து, 10 ஆண்டுகள் ஆனாலும், நோயாளி போல் நடந்து கொள்கின்றனரே பல பெண்கள். காரணம் என்ன?
உங்களின் ஓரகத்தி, வீட்டு வேலைகளில், உங்களுக்கு ஒத்தாசை செய்யவில்லை என நினைக்கிறேன். உங்களின் ஆதங்கம், கேள்வி கேட்டுள்ள தொனியில் புலப்படுகிறது. சின்ன ஆபரேஷனோ, பெரிதோ, மன வலிமையற்றவர்கள், தம்மை சீக்காளியாகவே நினைத்துக் கொள்வர். புரிந்து கொள்ளுங்கள்; பெண்ணை பெண்ணே குற்றம் காணும், கொடுமை செய்யும் குணத்தை விட்டொழியுங்கள்!
