PUBLISHED ON : செப் 17, 2017

* என்.ரவிச்சந்திரன், வேதாரண்யம்: திருட்டு வி.சி.டி.,யை ஒழிக்க ஒரு வழி கூறுங்களேன்...
திருட்டு வி.சி.டி.,யை ஒழிக்கவே முடியாது. படம் வெளியாகும் போதே, வி.சி.டி.,யையும் ரிலீஸ் செய்தால் தயாரிப்பாளர் கொஞ்சம் அதிகம் காசு பார்க்கலாம். இதை ஒழிக்க அனாவசிய செலவு செய்து, போலீசில் ஒரு துறையும் செயல்பட்டு வருவது கிரிமினல் வேஸ்ட்!
* எஸ்.ராஜலட்சுமி, அவனியாபுரம்: முக்கியமான அரசு துறைகளை எல்லாம் தனியார் மயமாக்கினால் அரசு எதற்கு?
இக்கேள்விக்கு பதில் சொல்லிச் சொல்லி அலுத்து விட்டது. அரசு என்பது, வியாபாரம் மற்றும் தொழில் செய்ய அல்ல; வரி வசூல் செய்து நல்லாட்சி தர மட்டுமே! ராணுவமும், வெளியுறவும் நிச்சயம் தனியார் மயமாகாது; கவலைப்படாதீர்கள்!
பி.வாணி, விருதுநகர்: என் வாழ்வு துன்பம் நிறைந்ததாகவே உள்ளதே...
ஒரு மனிதனை, மனிதனாக்குவது பிறரின் உதவிகளோ, அவனுக்கு கிடைக்கும் மித மிஞ்சிய வசதிகளோ அல்ல... இடையூறுகளும், துன்பங்களுமே ஒரு மனிதனை மனிதனாக்குகிறது. பொறுமை, காலம், இயற்கையே சிறந்த மருத்துவர்களாக இருந்து துன்பத்தைப் போக்குகிறது!
ஜெ.சந்திரசேகர், சென்னை: குடிநீர் இல்லாமல் யானைகள் சாவதாக செய்திகள் வெளியாகின்றனவே!
ஆம்; பருவமழை தொடர்ந்து பொய்த்து வருவதால், காடுகளில் உள்ள நீர் நிலைகள் வற்றி விட்டன. ஒரு யானைக்கு, ஒரு நாளைக்கு குறைந்த பட்சம், 135 லிட்டர், அதிக பட்சம், 225 லிட்டர் குடிநீர் தேவை. ஒரே மூச்சில் ஏழு லிட்டர் குடிநீரை தும்பிக்கையால் உறிஞ்சும் திறன் கொண்டவை யானைகள்!
பா.விஜயன், கடலூர்: 'அந்த' மாதிரி சர்வே ஒன்று எடுத்து விடுங்களேன்...
லண்டனில் இருந்து வெளிவரும், 'டாப் கியர்' என்ற வாகனங்களைப் பற்றிய இதழ் வெளியிட்டுள்ள சர்வே இது... காதலியையோ, மனைவியையோ காரினுள் இருந்தபடியே, ஒரு மனிதன் வாழ்நாளில் சராசரியாக, 2 மணி நேரம், 14 நிமிடம் முத்தம் கொடுக்கிறானாம்! அதே போல், காரினுள்ளேயே அவனோ, அவளோ வாழ்நாளில், ஆறு முறை, 'செக்சில்' ஈடுபடுகின்றனராம்!
* எஸ்.ரவீந்திரன், அருப்புக்கோட்டை: தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடையே நட்புறவை ஏற்படுத்த யாரால் முடியும்?
சோனியா காந்தியால் கூட முடியாது. அக்கட்சியில் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற நிலை தான் இருக்கிறது. மக்களின் மாபெரும் ஆதரவுடன் ஒரு தலைவன் அக்கட்சியில் உருவானால் அன்றி, இப்போதைய குழப்பம் தொடரவே செய்யும்!
