PUBLISHED ON : ஜூலை 15, 2018

பா.உதயகுமார், கோவை: அரசியல் தொண்டர்கள், நடிகரின் ரசிகர்கள், போலி சாமியாரின் சீடர்கள்... யார் மடையர்கள்?
ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை. இந்த மூன்று, 'கேட்டகரி' ஆட்களும் நீங்கள் குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களே!
எஸ்.கிருஷ்ணசாமி, ஊட்டி: எதற்கெடுத்தாலும், 'நேரமில்லை... நேரமில்லை' என்பவர்கள் முன்னேற்றம் அடைவரா?
'உழைப்பதற்கு நேரம் போதவில்லை' என்பவர்கள் முன்னேற்றம் அடைவர்!
* சி.சக்திவேல், காஞ்சிபுரம்: எந்த நாடு, பெண்களுக்கு அதிக மதிப்பு தருகிறது?
பொருளாதாரத்தில் வளர்ந்து விட்ட நாடுகள்! அங்கு, பெண், தன்னை யாரும் மதிக்க வேண்டும், பாதுகாப்பு தர வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாகவே இல்லை! என்னைப் போல நீயும் ஒரு மனிதப்பிறவி என்றே ஆண்களை அவர்கள் கருதுகின்றனர்; நடத்துகின்றனர்! இது, கல்வியினாலும், அதனால் கிடைக்கும் பொருளாதார சுதந்திரத்தினாலும் வளர்ந்து விட்ட மனப்பான்மை!
கே.ஆனந்தன், திருவள்ளூர்: யாரிடம் பேசாமல் இருப்பது நல்லது?
வம்பர்... துடுக்கர்... புறம் பேசுவோர்... கோள்மூட்டிகள்!
ஆர்.குமார், சிவகங்கை: விதண்டாவாதம் பேசுகிறவர்களை திருத்துவது எப்படி?
நேரத்தையும், சக்தியையும் ஏன் வீணடிக்க விரும்புகிறீர்கள்? இப்படிப்பட்ட ஆசாமிகளை திருத்த முடியாது. இவர்களைப் பார்த்தாலே, 'அம்பேல்' ஆகி விடுங்கள்!
* ஆர்.நாராயணன், பண்ருட்டி: சட்டத்தை மக்கள் மதிப்பது போல இல்லையே...
எப்படி மதிப்பர்? சட்டத்தை மதிக்க, அதன்படி நடக்க வேண்டியவர்களே அதைக் காலில் போட்டு மிதிக்கும் போது, சாதாரணர் எப்படி நடந்து கொள்வர்?
பி.பாலாஜி, சென்னை: மிகவும் எளிதானது எது... மிகவும் கடினமானது எது?
ரொம்ப எளிதானது, 'அட்வைஸ்' கொடுப்பது. கடினமானது, கொடுத்த, 'அட்வைஸ்' படி, அதை கொடுத்தவரே நடந்து கொள்வது.
