
மு.தமிழ்செல்வம், சூரங்குடி, துாத்துக்குடி மாவட்டம்: 'விரிவான பதில் தரவேண்டிய கேள்வி தாங்கி வரும் தபாலை, குப்பைக் கூடைக்குள் போட்டு விடுவீர்கள்...' என்று சொல்கிறானே, என் நண்பன்...
பேஷ் பேஷ்... இனிமேலாவது, இருவரும், இப்பகுதியை படிக்க முயலுங்கள்!
* என்.செந்தில், தேனி: நம்மை ஒருவன் எப்போது மதிப்பான்?
உங்கள், 'பர்சில்' பணம் இருக்க வேண்டும்; அவனிடம் இல்லாமல் இருக்க வேண்டும்! அப்போது தான், இந்த காலத்தில் மதிக்கின்றனர்!
ஆர்.கோகிலா, கொரட்டூர், சென்னை: பெண்களான எங்களுக்கு, ஆண்களை போல, மீசை, தாடி ஏன் வளர்வதில்லை?
ஹி... ஹி... அதற்கு பதிலாக, உங்களுக்கு தலையில் வளர்கிறதே
ஜி.குமரன், தேனி: புத்தகங்கள் படிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவன் நான்; வேலை முடித்து வந்து, இரவில் தான் படிப்பேன்; எத்தனை மணி வரை படிக்கலாம்?
துாக்கக் கொட்டாவி வரும் வரை... அது வராவிட்டால், கோழி கூவும் வரை... இல்லாவிட்டால், வேலைக்குச் செல்ல முடியாதே!
எம்.ஆர்.ராமலிங்கம், மிளகனுார், சிவகங்கை மாவட்டம்: உ.பா., அருந்தும்போதும், முடித்த பிறகும், சிலர் அமைதியாக இருக்கின்றனர்; மற்றோர், சிரிப்பும், விளையாட்டுமாக இருக்கின்றனர். சிலர், குழப்பமாக காணப்படுகின்றனரே... ஏன்?
முதலாமவர், தம் பையிலிருந்து பணத்தை கொடுத்தவர். இரண்டாமவர், நண்பர் எவரோ வாங்கிக் கொடுத்ததை ரசிப்பவர்! மூன்றாமவர், நாளை, 'விருந்து'க்கு காசு இல்லையே என, நினைப்பவர்!
பி.ஜெனிபர், எருக்கூர், நாகை மாவட்டம்: அரசியல்வாதிக்கும், நடிகனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
ஒன்றுமே கிடையாது! இருவருமே வேஷம் போடுகின்றனர். இவர்களின் எதிர்பார்ப்பே, 'கலெக் ஷன்' தான்!
* என்.கதிர்வேல், கோவை: யார், யார் இப்போது, சந்தோஷமாக வாழ்கின்றனர்?
வேளா வேளைக்கு நேரம் தவறாமல் சாப்பாடு, வெளியே கிடைக்கும் அனைத்து வசதிகளும், 'உள்ளே'யே கிடைத்து விடுவதால், சிறை கைதிகள் தான் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்!
* எம்.ஸ்ரீனிவாசன், கவரைப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டம்: நடிகர்களில் எத்தனை வகை உண்டு?
எனக்குத் தெரிந்து, மூன்று வகையினர் உள்ளனர்! முதலாவது, சினிமா நடிகர்; இரண்டாவது, அரசியல்வாதி! முதலாமவர், பணத்தை வாங்கிய பின் நடிக்கிறார்; இரண்டாமவர், பணம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இவ்வேலையைச் செய்கிறார்! மூன்றாவதாக, குடும்ப நடிப்புகள் பற்றி, பின்னர் சொல்கிறேன்!