
என்.சி. பிரபாகர், உதகை: 'எம்.எல்.ஏ.,க்களுக்கு, மாத ஓய்வூதியமாக, 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதை, 45 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்...' என்று, எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்னாள், முன்னாள், எம்.எல்.ஏ.,க்களின், 'வறுமை நிலை' நாம் அறிந்ததே... மக்கள் வரி பணத்தை, இப்படி வீணடிப்பது நியாயமா?
மாட்டு வண்டியில் சென்றோருக்கு, இது பழகி விட்டது! விமானத்தில், முன் பக்கம், 'பிசினஸ் கிளாஸ்' மற்றும் பின் பக்கம், 'எகானமி கிளாஸ்' என்று இரு பிரிவுகள் உள்ளன.
எப்போது நான் டில்லி சென்றாலும், முதல் பகுதியில் - என் இருக்கைக்கு முன் புறமோ, அடுத்த இருக்கையிலோ அமர்ந்து தான் வருவார், ஒருவர். விமானத்தை விட்டு இறங்கியதும், அவருக்கு ஒரு மகிழ்ச்சியை கொடுப்பேன். 
அது - 'அடுத்த முதல்வர் நீங்க தான்...' என்று; அவர் முகத்தின் மகிழ்ச்சியை அளவிட முடியாது!
ஜி. கோகுலகிருஷ்ணன், திருவாரூர்: உங்களின், கேள்வி - பதில்களை தொகுத்து, புத்தகமாக வெளியிட்டால் என்ன?
உங்கள் எண்ணம் நிறைவேறப் போகிறது; பொங்கலை ஒட்டி வரவிருக்கும் புத்தக திருவிழாவில் கிடைக்கும். அவ்வேலையில், 'தாமரை பிரதர்ஸ்' எனும் புத்தக வெளியீட்டு நிறுவனம், மும்முரமாக ஈடுபட்டு வருகிறது!
கோ. குப்புசுவாமி, சென்னை: ஒரு ஆணின் மணிபர்ஸ், ஒரு பெண்ணின் மணிபர்ஸ் என்ன வித்தியாசம்?
அவள் தண்ணி அடிக்க மாட்டாள், 'வில்ஸ் பில்டர் கிங்ஸ்' பக்கம், போக மாட்டாள்... கஞ்சா மற்றும் போதை பொருட்கள் பக்கம், திரும்ப மாட்டாள்; பர்ஸ் எப்போதுமே நிறைந்து இருக்கும்!
*கு. கணேசன், சென்னை: தமிழகத்தில் சில கட்சிகள், போராட்டம் நடத்துவதையே கொள்கையாகவும், குறிக்கோளாகவும் கொண்டுள்ளனவே...
தாமும் உயிரோடு இருக்கிறோம் என்பதை காட்டிக் கொள்ள வேண்டாமா?                    
* எஸ்.ஐஸ்வர்யா, அவ்வையார்பாளையம், ஈரோடு: அரசின் எல்லா தொழிலும், தனியார் மயமானால், அரசுக்கு என்ன தான் வேலை?
ஆள்வது தான், அரசு! சுதந்திரம் பெற்ற புதிதில், பெரும் பணக்காரர்கள் இல்லை. ரயிலை ஓட்டியது அரசு. அதன் பணி ஆள்வது மட்டுமே!
ரா. மனகாவலன், சென்னை: ஊழல் பேர்வழிகள், நீதிமன்றங்களுக்குள் செல்லும்போதும், வெளியே வரும்போதும், சிரித்தபடியே, கையை ஆட்டிக்கொண்டு வருகின்றனரே...
இவர்களது கையில், 'பிளட் பிரஷர்' கருவியை மாட்டி அளவெடுக்க வேண்டும்!
அப்போது, 400 / 200 என்ற அளவில் இருக்கும். சாதாரணமாக, 120 / 80 அளவில் தான் ரத்தக் கொதிப்பு இருக்கும்!
இவர்களுக்கு ஓட்டு போட்டவர்களுக்கு, கோவில் கட்டித்தான் கொண்டாட வேண்டும்!

