
ர. பிரசன்னா, சென்னை: ஆற்றில் ஒரு கால் என்று சினிமாவிலும், சேற்றில் ஒரு கால் என்று அரசியலிலும் கமலஹாசன் இருக்கிறாரே...
சேற்றில் வைத்த காலை எடுத்து, மீண்டும் ஆற்றில் வைத்து விடுவது அவருக்கு நலம்!
* எம். செபாஸ்டின், செங்கோட்டை: என் நண்பன், தலைக்கனத்துக்கும், தன்னம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று கேட்கிறானே...
தன்னம்பிக்கை சற்று பயத்தைத் தந்தாலும், ஆபத்தில்லை! ஆளையே தீர்த்து விடும் தலைக்கனம் என்பது!
* கு. கணேசன், பனங்கோட்டூர், செங்கல்பட்டு: பா.ம.க., ஆட்சிக்கு வந்தால், அனைவருக்கும், அனைத்தும் கிடைக்கும் என்கிறாரே மருத்துவர் ராமதாஸ்?
முதலில் மருத்துவம் கிடைக்கும் என்பதைச் சொல்வாரா, 'மருத்துவர்' ராமதாஸ்... அதன் பிறகு தான், அனைவருக்கும், 'ஆடி' கார் கிடைக்குமா என்பதை யோசிக்க வேண்டும்!
என். அன்புச்செல்வி, பெரியகுமட்டி, கடலுார்: வெளி மாநில தொழிலாளர்களால் தான், தொழில் வளர்ச்சித் துறை வளர்ச்சி அடையும் என்பது உண்மையா?
உண்மை தான்! இங்கிருந்தவர்கள் தான் அரபு நாடுகளுக்கு சென்று விட்டனரே! இங்கு, 10வது முடித்து விட்டால் போதும்... காலரை துாக்கி விட்டுக் கொண்டு கட்டட வேலைக்கும், விவசாயப் பணிகளுக்கும் வர மறுக்கின்றனரே!
எம். கருணாகரன், சென்னை: தி.மு.க.,விலிருந்து பிரிந்து வந்த வைகோவால் பிரகாசிக்க முடியவில்லையே?
தி.மு.க.,வில் இருந்து பிரிந்து வந்தாலும், கூடவே வைத்துக் கொண்டு இவரை அமுக்கி விட்டது. அது போக, இவர் தீவிரமான விடுதலைப் புலி ஆதரவாளர் என்பதால் ஓட்டு கிடைக்காமல் போய் விட்டது!
மு. மீரான் முகைதீன், துாத்துக்குடி: நமது நாளிதழில் வெளியாகும் செய்திகளை ஒன்று விடாமல் படித்து வருகிறேன். அப்படி இருந்தும், 'தினமலர்' எந்தக் கட்சி பக்கம் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லையே!
சபாஷ்... சரியான வாசகர்! எப்போதும், 'தினமலர்' நடுநிலை தான் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டீர்!
* எஸ். முருகேசன், திருத்தங்கல்: இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிர்காலம் உண்டா?
இங்கே காங்கிரசாலே தலை துாக்க முடியாத நிலை உள்ளது. கம்யூனிஸ்ட் ஆளும் சீனாவிலேயே, அதன் அதிபர் நடவடிக்கைகளால் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் கேட்க வேண்டுமா?

