
எஸ். கண்ணகி, சிவகாசி: பெண்களுக்குத் தேவையானது பொறுமையா, பொறாமையா?
பொறுமை! இப்போதுள்ள பெண்களுக்கு முதலாவது குறைந்து விட்டது போல தெரிகிறதே!
கு. அருணாசலம், தென்காசி: ஜவுளிக் கடை, நகைக் கடை விளம்பரங்களில் அந்தந்த கடை அதிபர்களே தோன்றுகின்றனரே...
நடிகர்கள் என்றால், 'கால்ஷீட்' வாங்க வேண்டும்... லட்சக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டும்... இதற்கு பதில் தாமே என்றால், தமக்கும் விளம்பரம் கிடைக்கும்... காசும், 'வேஸ்ட்' இல்லையே!
மு. நாகூர், சுந்தரமுடையான்: இன வெறி, நிற வெறி இவ்விரண்டில் மக்களை பாதிப்பது எது?
முதலாவது தான். உயர்ந்த இனம் என சொல்லப் படுவோர்களிலும், கறுப்பு நிறத்தவர் உள்ளனரே... இன வெறியும், இங்குள்ள பதவி ஆசை பிடித்த சில கட்சிகளால் துாண்டப்படுவதே! மற்றபடி மக்கள் மத்தியில், இன வெறி என்பதெல்லாம் இல்லவே இல்லை எனச் சொல்லலாம்!
* பா. காமாட்சி, பெண்ணாடம், கடலுார்: நாம் சிறுக, சிறுக சேர்த்த பணத்தை, தங்கத்தில் முதலீடு செய்யலாமா அல்லது நிலத்தில் முதலீடு செய்யலாமா?
இரண்டாவதில் முதலீடு செய்தால், உடனே மீட்பது கஷ்டம்; முதலாவது - தங்கத்தில் முதலீடு செய்தால், சுலபம்... மீட்டு எடுக்க! இப்போது தான் தங்கத்தை அடகு வைத்து மீட்க, பல அடகு கடைகளின் விளம்பரம் வருகின்றனவே, 'டிவி'யில்!
* ஆர். வரதகிருஷ்ணன், குணமங்கலம், கடலுார்: ஊழல் செய்து, நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவருக்கு, கோடிக்கணக்கில் செலவு செய்து நினைவிடம் அமைப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதா?
தமது இந்நாளைய பதவிக்கு நன்றி செலுத்துகின்றனர். ஜெயிலுக்கு சென்றவர்களுக்கு நினைவிடம் அமைப்பது படு கேவலம்!
டி. ராஜன், மதுரை: குழந்தைகளுக்குக் கூட, 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்துகின்றனரே... அதைப் பற்றி...
என் நண்பரின் பேத்தி, இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். 9:00 மணியானதும், தனது, 'லாப் டாப்'பில் பாடங்களை ஒழுங்காக கவனிக்கிறாள்... டீச்சரிடம் சந்தேகங்களை கேட்கிறாள்! அவளது ஒரே ஏக்கம், கூடப் படிப்போரை நேரில் சந்திக்க முடியவில்லையே... அவர்களுடன், உரையாட, விளையாட முடிவதில்லையே என்பதே!

