
ஆர். சுப்பு, திருத்தங்கல்: தே.தி.மு.க., தலைவர் விஜயகாந்த், முதல்வர் வேட்பாளராக களம் இறங்க வாய்ப்பு உள்ளதா?
இரு திராவிட கட்சிகளுமே, 10 'சீட்' தான், தே.மு.தி.க.,வுக்கு என்று சொல்லி வருகின்றன. இதில் இவர், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு, 'மெஜாரிட்டி'யை பிடிக்க முடியும் என்றா நினைக்கிறீர்கள்?
எஸ்.கே. கோமதி, நாமக்கல்: தர்மம் என்றும், தானம் என்றும் சொல்கின்றனரே... இதன் அர்த்தம் என்ன?
இரண்டும் ஒன்று தான்! புண்ணியம் கிடைக்கும் என்று தர்மம் செய்தனர்; இப்போது, விளம்பரம் கிடைக்கும் என்று, தானம் செய்கின்றனர்!
தி.சே. அறிவழகன், திருப்புலிவனம், காஞ்சிபுரம்: சசிகலாவின் பலம் என்ன... பலவீனம் என்ன?
இரண்டுமே கை நீட்டல் தான்... நாலு ஆண்டு சிறை தண்டனை குறித்து மறந்து விட்டீர்களோ!
* கே. விஜயகுமார், கோவை: ஒரு மனிதனின், உயர்வுக்கும், தாழ்வுக்கும் எது காரணம்?
முதல் காரணம், மனம்; இரண்டாவது காரணம், பணம்! மனம் இருந்து பணம் இல்லாவிட்டால் தாழ்வு தான்! அறிவு இருந்தால் இரண்டையும் பெற முடியும்!
ஆர். ராஜேந்திரன், மதுரை: பதவியில் இருப்பவர்களுக்கு, திருமண அழைப்பிதழ் அனுப்பினால், வாழ்த்துச் செய்தி அனுப்புகின்றனரே... இது, அவர்களே செய்வதா?
இதெல்லாம் அவர்கள், பி.ஏ.,கள் செய்வது. திருமண அழைப்பிதழே அவர்கள் கையில் சேராது. கையெழுத்து மட்டும் அவர்கள் இடுவர். அழைப்பிதழ், 'ஷ்ரெட்டிங்' இயந்திரத்திற்கு சென்று விடும்!
க. வெங்கடேசன், மதுரை: வன்னியர் சமுதாயத்திற்கு மட்டும், 20 சதவீத ஒதுக்கீடு கேட்கிறாரே, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்...
இதிலிருந்தே தெரியவில்லையா... பா.ம.க., மற்ற சமுதாய மக்களுக்கும் உள்ள கட்சி இல்லை என்பது!
* பி.என். நரசிம்மமூர்த்தி, சென்னை:ஊழல் குற்றச்சாட்டில், சிறை சென்றவர்கள் சுயசரிதை எழுத ஆரம்பித்தால்...
அவர்கள், ஆளும் திராவிட கட்சியில் இருந்தால், அந்த சுயசரிதையை, பள்ளிப் பாடமாகவே ஆக்கி விடுவர்!
ஆர். உமா, சென்னை:நான் எதை நம்ப வேண்டும்?
நேற்று நடந்ததை நினைத்துப் பார்க்காதீர்கள்... இன்று ஒன்று இருக்கிறதே அதை நினையுங்கள். இறந்ததையும், வரப்போவதையும் நினைத்துக் கொண்டிருந்தால், இருப்பதும் போய் விடும்!