PUBLISHED ON : ஜூலை 11, 2021

எம்.சுகந்தி, சென்னை: அணில்கள், மின்கம்பிகளில் விளையாடுவது பற்றி உங்கள் கருத்து...
அணில்கள் நிறைய குட்டி போட, தி.மு.க., அரசு உதவி செய்யும் என, அவர்களின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருப்பரோ!
*அப்துல், திருச்சி: தமிழகத்தில் உதிரி கட்சிகளின் எதிர்காலம் இனி எப்படி இருக்கும்?
எல்லாம், 'லெட்டர் பேடு' கட்சிகளாகவே தொடரும்!
த. சிவாஜி மூக்கையா, சென்னை: அதிகாரிகள் துணையில்லாமல், அரசியல்வாதிகளால் ஊழல் செய்ய முடியுமா?
முடியாது! காரணம், அரசியல்வாதிகளுக்கு சட்டம் தெரியாது. சட்டத்தை எப்படி கவிழ்ப்பது என்று அதிகாரிகளுக்கே தெரியும்; அவர்கள், பண ஊழலை பிரித்துக் கொள்கின்றனர்!
வாசுதேவன், பெங்களூரு: தமிழக புதிய டி.ஜி.பி., சைலேந்திர பாபு...
அவர் மீசையையும், உடற்கட்டையும் பார்க்கும் போது, குற்றம் செய்யும் தற்போதைய போலீசார் மீது சாட்டையை சுழற்றுவார் என்று தோன்றுகிறது.
* எம்.மிக்கேல்ராஜ், சாத்துார்: வி.என்.ஜானகி, அரசியலை விட்டு விலகியதைப் போல், சசிகலா செய்யாமல், அ.தி.மு.க.,வில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறாரே...
தி.மு.க.,வின் திட்டம் தான் இது! அ.தி.மு.க.,வை உடைக்க வேண்டும், அதன் பின், தங்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும் என்ற நோக்கம் தான்!
எஸ். பிரேமாவதி, சென்னை: ஆங்கிலப் பேச்சு சரளமாக வரவில்லை என்ற நினைப்பு, முன்னேற்றத்திற்கு தடையா?
இல்லை! சென்னை மற்றும் தமிழகத்திலுள்ள பல நகரங்களில் இருக்கும், நகை மற்றும் ஜவுளிக் கடைகளின் பிரபலங்களுக்கு ஆங்கிலத்தில் பேச வராது. அவர்கள், ஆங்கிலம் தெரியாமல் ஏகப்பட்ட கோடி சம்பாதிக்கவில்லையா...
பி.மோஜ், சென்னை: வெவ்வேறு பெயர்களில், 200 கேள்விகள் கேட்டும், அந்துமணியாரின் பதில் கிடைக்கவில்லை. இன்னும் முயற்சியை கைவிடவில்லை. முயற்சி திருவினையாக்குமா?
இன்று திருவினையாகி விட்டதே... தினமும், 200 கேள்விகள் வருகின்றன. வாரம், எட்டு கேள்விகளுக்குத் தான் பதில் எழுத, பொறுப்பாசிரியர் உத்தரவிட்டுள்ளார். நீங்களும், உங்களைப் போன்ற மற்ற வாசகர்களும் புரிந்து கொள்ளுங்களேன்!
