PUBLISHED ON : மே 22, 2022

* கே.எல். கந்தரூபி, சென்னை: 'பிரதமர் பதவியே என் இலக்கு...' என்கிறாரே, உ.பி., முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான மாயாவதி...
உ.பி.,யிலேயே மீண்டும் முதல்வராக முடியவில்லை... இவருக்கு பிரதமர் பதவி தான் இலக்கா... நல்ல, 'ஜோக்' தான்!
கே.எம். நஜிமுதீன், சென்னை: 'ராஜிவ் கொலையாளிகளுக்கு அனுதாபம் காட்டக் கூடாது...' என்று, பா.ஜ.,வின் சுப்பிரமணியசாமி கூறியுள்ளாரே...
அவர் கூறியுள்ளதில், 100 சதவீதம் நியாயம் உள்ளது. அவர்களை சிறையில் அடைக்காமல், துாக்கு தண்டனை விதித்திருக்க வேண்டும்!
* ஜி. அர்ஜுனன், அவிநாசி: இரண்டு லட்சம் மாத சம்பளம்... கார் வேண்டும் என, சட்டசபை உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து இருக்கின்றனரே...
கோடிக்கணக்கில் செலவு செய்து பதவியைப் பெற்றவர்கள்... கோடிக்கணக்கில் வசூலில் ஈடுபட்டிருப்பவர்கள்... பாவம், ஒரு காரும், 2 லட்சம் சம்பளமும் கொடுக்கட்டுமே, கடனில் தவிக்கும் தமிழக அரசு!
கே. ஆஷா, ஈரோடு: 'இடக்கு, மடக்கு' என்கின்றனரே... அப்படி என்றால் என்ன?
கேலியாக நகைத்து, இகழ்ந்து பேசுதலை இடக்கு என்பர்; கடுமையாக எதிர்த்துப் பேசுதலை மடக்கு என்பர்.
எம். நீலகண்டன், சேலம்: மடையன், முட்டாள், அப்பாவி - இவர்களுக்குள் என்ன வித்தியாசம்?
இம்மூவரும் மூளையை உபயோகிக்க மாட்டார்கள்... இவர்களுக்குள் எந்த வித்தியாசமும் கிடையாது!
செ. கல்பனா, கோவை: பசியை பொறுத்துக் கொண்டு நோன்பை கடைப்பிடிக்கிறோம்... அதை விட சிறந்தது எது?
பசியுடன் இருக்கும் ஒவ்வொருவருக்கும் உணவளிப்பதே சிறந்தது!
ஆர். பிரசன்னா, ஸ்ரீரங்கம், திருச்சி: பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் நடத்தும் பத்திரிகைகளிலும், 'டிவி'களிலும், ராசி பலன் மற்றும் பரிகாரங்களை அனுமதிப்பதேன்?
வருமானம் பெறத் தான்... இவற்றை படிப்பவர்கள், பார்ப்பவர்கள் அதிகமாக இருக்கின்றனர்... அதனால், விளம்பர வருமானம் அதிகரிக்கும்... அதனால் தான்!
ஆர். குமார், மதுரை: கொடுங்கோல் புரியும் அரசு என்னவாகும்?
நாட்டு நிலையை ஆராயாமல், சுயநலத்தையும், தங்களுக்கான நிதி ஆதாரத்தையும் மட்டுமே கருத்தில் கொள்வோர், மக்களிடம் மதிப்பை இழந்து விடுவர்... இலங்கையில் இப்போது, அதுதானே நடந்து கொண்டிருக்கிறது!
