PUBLISHED ON : மே 29, 2022

ரா. வேதநாயகம், வடமாதிமங்கலம், திருவண்ணாமலை: 'சிகரெட் குடிப்பது உடல் நலத்துக்கு ஆபத்தானது...' என, அதன் பாக்கெட்டில் அச்சிட ஆணையிட்ட அரசு, சிகரெட் நிறுவனங்களையே மூடி விடலாமே...
நல்ல யோசனை தான்... அதே போல, 'மஞ்சள் பை... மஞ்சள் பை' என, கூவிக் கொண்டிருக்காமல், 'பிளாஸ்டிக்' பைகளை உருவாக்கும் நிறுவனங்களையும் மூடி விடலாமே... யோசிக்குமா அரசு!
ம. அன்புசெல்வன், தேனி: அந்துமணி ஆகாமல் இருந்திருந்தால், என்ன செய்து கொண்டிருப்பீர்கள்?
உப்பு கிணற்றில் இருந்து, 'பம்ப் - செட்' மூலமாக நீர் எடுத்து, பாத்திகளில் பாய்ச்சி, அது, உப்பான பின் வாரிக் கொண்டிருந்திருப்பேன்... அதுவும் துாத்துக்குடியில்...
* ஆர். அமிர்தபாரதி, கன்னியாகுமரி: சசிகலா, அ.தி.மு.க.,வை கைப்பற்றினால் என்ன நடக்கும்?
ஊழல் வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவருக்கு ஓட்டுப் போடுவீர்களா அமிர்தபாரதி? மாட்டீர்கள் தானே... அதையே தான் மற்ற மக்களும் செய்வர்!
கே. பாலு, தென்காசி: வாழ்க்கையில் வெற்றி அடைய என்ன செய்ய வேண்டும்?
ரொம்ப, 'சிம்பிள்...' தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் இருந்தால், வாழ்க்கையில் எளிதாக வெற்றி பெறலாம்!
* எஸ். பாஸ்கர், ஆவலப்பம்பட்டி,கோவை: மாநில அரசுகளால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியுமா?
கண்டிப்பாக முடியும்... பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 103.05 ரூபாயாக இருந்தபோது, மத்திய அரசின் வரி, 19.50 ரூபாய் தான். ஆனால், மாநில அரசின் வரி, 41.55 ரூபாய். மாநில அரசு நினைத்தால் விலையைக் குறைக்க முடியுமே!
ஜி.வி. மனோகரன், துாத்துக்குடி: 'பார்சல் ரயில்' தனியாருக்கு குத்தகையாமே...
மிகவும் பாராட்டக்கூடிய முடிவு... இதேபோல், பயணியர் ரயிலையும் செய்து விடலாம்... அரசு, வியாபாரம் செய்யாமல், மக்கள் நலனில் மட்டுமே அக்கறை கொள்ள வேண்டும்!
மெய்.முருகப்பா, காரைக்குடி: அறிக்கைகள் விடுவதில் சிறந்தவர், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் என்பது, ஏற்றுக்கொள்ளக் கூடியதா?
ஏற்றுக் கொள்ளலாம்... ஆனால், ராமதாசிடம் மாத சம்பளம் வாங்கிக் கொண்டு, அவருக்கு தினசரி அறிக்கை எழுதிக் கொடுப்பவரை! (அவர் யார் என்று இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை!)
த. ராஜதுரை, திருப்பூர்: 'திராவிட மாடல் ஆட்சி' என்று, ஸ்டாலின் சொல்கிறாரே... அப்படின்னா என்னங்க?
ஐந்து ஆண்டு கால ஆட்சிக்குள், 'பெட்டி'யை மட மடவென்று நிரப்புவது தான்...
