PUBLISHED ON : டிச 03, 2023

ச. கனி, வீரகேரளம்புதுார்: 'பிரதமர் மோடி, அபசகுனம் பிடித்தவர்...' என, ராகுல் கூறியிருக்கிறாரே...
சின்னக் குழந்தை போல பேசுகிறார், ராகுல். அவருக்கு, இன்னும் சரியான அரசியல் பேச்சு வரவில்லை. அவருக்கு, மேடை பேச்சு எழுதிக் கொடுப்பவரை மாற்றினால், சரியாக எழுதித் தருவாரோ என்னமோ!
* எஸ். ராஜம், திருச்சி: 'தமிழக காங்கிரசில் என்ன தான் நடக்கிறது என்றே தெரியவில்லை...' என்று, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளாரே...
வரும் லோக்சபா தேர்தலில், இவருக்கு, 'சீட்' கிடையாது என, கண்டிப்பாக சொல்லி விட்டனரோ என்னவோ... அதனால் தான் இப்படி எல்லாம் பேசுகிறார் போலும்!
தி. முருகேசன், குன்னத்துார்: சிக்கனமாக செலவு செய்தால், சிலர் கிண்டலடிக்கின்றனரே... அவர்களை எப்படி சமாளிப்பது?
கிண்டலடிப்பவர்களை, கண்டுகொள்ளாதீர்கள்; ஒதுக்கி விடுங்கள்... வாழ்க்கையில் சிக்கனம் தான் முக்கியம்!
கோ. குப்புசுவாமி, சங்கராபுரம்: மு.க.அழகிரி தனிக்கட்சி ஆரம்பித்தால், என்னாகும்?
தமிழகத்தில் இன்னொரு, 'லெட்டர் பேட்' கட்சி சேர்ந்து விடும். அதில் உங்களுக்கு விருப்பமா?
* எஸ். மங்களம், திருக்கண்டேஸ்வரம்: மின் இதழ்கள் வந்ததால், அச்சு இதழ்களுக்கு சரிவு ஏதாவது ஏற்பட்டுள்ளதா?
சில, வார, மாத இதழ்களுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது. அவர்களில் சிலர், இதழ்களையே நிறுத்தி விட்டனர். ஆனால், நம் இதழ் விற்பனை, தினசரி கூடிக்கொண்டே தான் இருக்கிறது!
க. கதிரேசன், சென்னை: அரசு பள்ளி மாணவர்களே, 'நீட்' தேர்வு எழுத விருப்பம் தெரிவிக்கும்போது, 'நீட்' தேர்வு விலக்கு கேட்டு, தமிழக அரசு, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவது யாருக்காக?
இந்த ஆட்சியினர் சிலர் நடத்தும், மருத்துவ கல்லுாரிகளுக்காக... மருத்துவக் கல்லுாரிகள் நடத்தி, ஆண்டுக்கு பல கோடி ரூபாய் சம்பாதிக்கும் அவர்களின் தொழில் பாதித்து விடக் கூடாது என்பதற்காக!
எஸ். பாரதி, சாத்துார்: வாழ்க்கையின் விதி என்று சொல்கின்றனரே... அப்படி ஒன்று உள்ளதா?
இன்று நம் செயல்கள் எவையோ, அவை தான் நாளைய விளைவுகள்... அது தான் விதி. இன்று, நாம் நல்லது செய்தால், நாளைக்கு நல்லதே நடக்கும். இது தான் விதி என்பது!
