
*ஆர்.புஷ்பவல்லி, ஷெனாய் நகர்: எப்போதும் சிரித்த முகத்துடனே, சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்பு கிறேன்...
வேண்டாம்... உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங் கள். சிரிக்க வேண்டிய இடங்களில் சிரியுங்கள்; மகிழ்ச்சியான நேரங்களில், சிரித்த முகத்துடன் இருங் கள்! எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர்கள், 'யாரிடமோ ஏமாந்து கொண்டிருக்கின்றர்...' என்றோ, எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பவன், 'யாரையோ ஏமாற்றி கொண்டிருக்கிறான்...' என்றோ இப்போதெல்லாம் எண்ணுகின்றனர்!
***
** க.வெற்றிவேந்தன், கோவில்பட்டி: எளிமையைக் கண்டு ஏளனம் செய்யலாமா? அப்படி ஏளனம் செய்பவர்களை என்ன செய்யலாம்?
மிகப் பெரிய பாவமாக, கொடுஞ்செயலாக நான் கருதுவது, எளிமையை ஏளனம் செய்வதை! மனம் நொந்து, வேதனைப் பட்டு, துடித்துப் போகும்... ஏளனம் செய்பவர்களை அப்படியே விட்டு விடுங்கள்... காலம் அவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்கும்!
***
*ஆ.நாகராஜன், உத்தமபாளையம்: பணம் இருந்தால், கொலைகாரனை கூட நிரபராதியாக்கி விடலாம் என்கின்றனரே... உங்கள் அபிப்ராயம் என்ன?
கொஞ்ச நாட்களுக்கு முன் வெளியான நீதிமன்ற தீர்ப்பு ஒன்று, உங்கள் கூற்றை மெய்ப்பிப்பது போல் உள்ளது. போலீசை, 'கரெக்ட்' பண்ணி, சாட்சியங்களே இல்லாமல் செய்து இருக்கின்றனர். கற்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் நாம்!
***
*ஆர்.முருகேசன், சேத்தியாதோப்பு: அரசு பணியில் இருப்பவர்கள், 'கடமை' என நினைத்து செயல்பட வேண்டுமா... 'சேவை' என நினைத்து செயலாற்ற வேண்டுமா?
இரண்டையுமே நினைக்க வேண்டாம்... வாங்கற சம்பளத்துக்கு, உண்மையா உழைச்சா போதும்ங்க.
***
** பி.ராஜேஷ் பாபு, பீளமேடு: உண்மையே பேசி கஷ்டப்படுவதை விட, சமயத்திற்கு தகுந்தாற் போல, பொய் பேசி, மிக வசதியாக வாழலாமே...
வசதியாக வேண்டு மானால் வாழலாம்; ஆனால், மன நிம்மதியோடு வாழவே முடியாதே! மன நிம்மதி இல்லாமல், பொருள் இருந்து என்ன பயன்? இரவில் உறக்கம் கூட வராதே... நிம்மதியான தூக்கம் இல்லாத வாழ்வு, ஒருவனுக்கு தேவையா?
***
*பி.சம்பத், கோட்டூர்: பணக்காரர்கள் சந்தோஷமாக இருக்கின்றனரா?
ஏழையும், பணக்காரனும், இன்னும் விழி பிதுங்கி கொண்டிருக்கின்றனர். ஏழை - வட்டிக்காரனிடம் சிக்கி முழிக்கிறான். பணக்காரன் - வங்கி அதிகாரிகளிடமும், வருமான வரி அதிகாரிகளிடமும் மாட்டிக் கொண்டு, முழித்துக் கொண்டிருக்கிறான்; ஆனால், இருவருமே, 'விழித்து' கொள்ளவில்லை.
***
** வி.பிரகாஷ், நாகல் நகர்: சொந்தக் காலில் நிற்க பழகிக் கொண்டிருக்கும் நம் பெண்களிடம், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகரித்து வருகிறதா? குறைந்து வருகிறதா?
குறைந்து வருகிறது என்றே பலரும் நினைக்கின்றனர்; சொல்கின்றனர் - இது தவறு! நம் சமூகக் கட்டமைப்பில் குழந்தைகள் பெற்றோரிடமோ, வாலிப வயதினர், பெரியவர்களிடமோ, மாணவர்கள், ஆசிரியர்களிடமோ கேள்வி கேட்கக் கூடாது என்ற அவல நிலை இருந்து வருகிறது. கேள்வி கேட்டால், எதிர்த்து பேசுகிறாள் - திமிர் வந்து விட்டது என்று பொருள் கொள்கின்றனர். சம்பாதிக்கும் பெண், நியாயமானவற்றுக்கு விட்டுக் கொடுக்கிறாள்; நியாயமற்றது குறித்து கேள்வி கேட்கும் போது, 'விட்டுக் கொடுக்க மறுக்கிறாள்... சம்பாதிக் கும் திமிர்' போன்ற பட்டங்கள் கட்டப் படுகின்றன.
***

