sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஏப் 14, 2013

Google News

PUBLISHED ON : ஏப் 14, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பீச் மீட்டிங்; வழக்கம் போல கூட்டம்.

'என்னாச்சி, உங்க ஒயிட் அம்பாசிடர்?' என பெரியசாமி அண்ணாச்சியிடம் கேட்டார் லென்ஸ் மாமா.

'நல்ல ராசியான வண்டிவே அது... அதுல போனா, போன காரியம் நடக்கும்... என்ன... வண்டி கொஞ்சம் பளசா போச்சு... 18 ஆயிரம் ரூபாய்க்கு வித்துப்புட்டேன்...' என்றார் அண்ணாச்சி.

'இதான்... மூட நம்பிக்கையோ, மூடாத நம்பிக்கையோ... தமிழர்களின் வாழ்வில் ஒன்று கலந்து விட்டது, அநேக நம்பிக்கைகள்...' என ஆரம்பித்த லென்ஸ் மாமா, நீண்ட லெக்சர் ஒன்றை ஆரம்பித்தார்:

எண்ணெய் தேச்சு குளிச்சிட்டு கல்யாண வீட்டுக்குப் போகக் கூடாது...

சூரிய அஸ்தமனத்திற்கு பின், தலைமுடி வெட்டக் கூடாது, நகம் வெட்டக் கூடாது, சலவைக்கு அழுக்குத் துணிகளை போடக் கூடாது, ஊசி, உப்பு, மோர், தீப்பெட்டி ஆகியவற்றை இரவல் கொடுக்கக் கூடாது.

விடிந்ததும், முகம் பார்க்கும் கண்ணாடி, நிறை குடம், கொடி, விளக்கு, மஞ்சள், தாமரை, தங்கம், சூரியன், கடல், கோபுரம், மழை, மலை, கன்றுடன் கூடிய பசு, மனைவியின் முகம், பைத்தியக்காரன், கருங்குரங்கு, யானை, மிருதங்கம் ஆகியவற்றை காண்பது நன்மை தரும்.

வீட்டுத் தரையை பெருக்கிச் சுத்தம் செய்யும் போது, குப்பைக் கூளத்தை சேகரித்து, வீட்டுக்கு வெளியே கொட்டி விட வேண்டுமென்று, தாய், தன் மகளுக்கு அறிவுறுத்துகிறாள். குப்பையை மூலையிலே குவித்து வைத்தால், அவள் ஒரு நல்ல நாளில் (திருவிழா, திருமணம் முதலிய நாட்களில்) வீட்டுக்கு விலக்காக இருக்க நேர்ந்து, மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பேற்றை இழப்பாள் என்பதும் ஒரு நம்பிக்கை. வீட்டு மூலைகளில் தூசி சேர்வது கடனுக்கும், கவலைக்கும் அறிகுறி.

உடைந்த கண்ணாடியில் முகம் பார்க்கக் கூடாது. அமாவாசைக்கு நான்காம் நாளில் சந்திரனைப் பார்த்தால், நினைவாற்றல் பாதிக்கப்படும்.

நகத்தை கடிப்பது, தண்ணீரை வீணாக்குவது, கால் ஆட்டுவது, வீட்டுக்குள் ஆமைகள் புகுவது ஆகியவை, வரப்போகும் வறுமைக்கு அறிகுறி. கால்களை ஒன்றுக்கொன்று குறுக்காக வைத்துக் கொள்வதும், கைகளை முழங்கால் அருகே கட்டிக் கொள்வதும் பிணத்தின் அடையாளங்கள்.

கோடித் துணிகளை மூலையில் மஞ்சள் தடவிய பிறகே உடுத்த வேண்டும்.

இடது கையால் எதையும் கொடுப்பதும், வாங்கிக் கொள்வதும், மற்றொரு சாராரை அவமதிப்பதாகும். வடக்கே தலையும், தெற்கே காலும் வைத்துப் படுக்கக் கூடாது. இதுவே மரணத்திற்குரிய கடவுளின் திக்குகள்.

வடகிழக்கு, தென்மேற்கு மூலையில் தான் கிணறு வெட்ட வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் பயணம் மேற்கொள்ளக் கூடாது, வீட்டுச் செல்வத்தை பிறருக்குக் கொடுப்பது கூடாது. தானம் மட்டும் இந்த கிழமையில் கொடுக்கலாம்.

இப்படி எவ்வளவோ நம்பிக்கைகளை கடைபிடித்து, வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிக் கொண்டனர் நம் மக்கள், என்று முடித்தார் மாமா.

'அந்தக் காலத்துலயே இருக்கீங்க மாமா... அவனவன், 'சாட்டிலைட்' மூலமா உலகில், எங்கோ, எவன் வீட்டு பெட்ரூமையோ கூட படம் எடுத்து விடறான்... நீங்க என்னன்னா, நம்மூர் தொல்பொருள் துறைக்காரங்க மகாபலிபுரத்துல கடல் கோவில் பக்கத்துல, 'இங்கே போட்டோ எடுக்கக் கூடாது...'ன்னு பத்தாம் பசலித்தனமா போர்டு வச்சு இருக்கிற மாதிரியில்ல இருக்கு உங்கள் பேச்சு...' என்றேன்.

'சும்மா நிறுத்து கண்ணு... அந்த, 'சாட்டிலைட்'டை அனுப்புறத்துக்கு முன், சூடம் காட்டி, தேங்காய் உடைச்சுத் தான் அனுப்பறான்...' என்றார்.

அத்தோடு விட்டாரா மாமா...

'இதப்பாரு... மூன்றாம் எண் குருவுக்கு உரியது. 3ந் தேதியில் பிறந்தவர்கள் குரு ஆதிக்கம் கொண்டவர்கள். கருணாநிதி 3ந் தேதி பிறந்தவர். குருவிற்கு நிறம் மஞ்சள். கருணாநிதி மஞ்சள் துண்டு அணிகிறார். கோவிலுக்கு போனால், நவக்கிரகங்களை சுற்றி வரும் போது பாரு... குருவுக்கு மட்டும் மஞ்சள் துண்டை இடுப்பில் சுற்றி இருப்பர். சீர்திருத்தம், கீர்திருத்தம் பேசியவங்க எல்லாமே, முன்பு மூட நம்பிக்கைன்னு பேசி வந்ததை கைவிட்டுட்டாங்க...' என்றார் லென்ஸ் மாமா.

அதன் பிறகு நான் எதுவும் பேசவில்லை.

***

கடந்த வாரத்தில் ஒரு நாள், 'ஈ - மெயில்' என்னென்ன வந்திருக்கிறது என, கம்ப்யூட்டரில் பார்த்துக் கொண்டிருந்தேன்.

தாய்லாந்து நாட்டில் இருந்து ஒரு வாசகியின் கடிதம் வந்திருந்தது. அவர் தென் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பெண்தான். மிக செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்தவர். கம்ப்யூட்டர் துறையில் மெத்த படித்தவர். சென்னையில் சில காலம் பணியாற்றிக் கொண்டிருந்த போதே பல ஆயிரம் அதிகமாக சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தவர்; குடும்பத்தின் ஒரே வாரிசு.

இதே துறையில் தாய்லாந்து நாட்டில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு வரன் வந்ததும், சிறப்பாகத் திருமணம் செய்து வைத்தனர் பெற்றோர். இப்போது இருவருமே தாய்லாந்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இருவருமே அடிக்கடி, 'ஈ - மெயில்' மூலம் கடிதம் அனுப்புவர்.

தாய்லாந்தில் இருந்து, அமெரிக்காவில் வேலை வாங்கிக் கொண்டு, அங்கே செல்வது தான் இருவரின் திட்டமாக இருந்தது. இவர்களைப் போன்ற திறமையும், அனுபவமும் உள்ளவர்களுக்கு, அமெரிக்காவில், தலைக்கு எட்டு லட்ச ரூபாயும், அதற்கு மேலும் மாதச் சம்பளம் கிடைக்கிறது. இதில் ஒரு சோகம், இதற்கு வரியாக பெருந்தொகையை பிடித்துக்கொள்வர் என்பது தான்.

அந்த வரியையும் கட்டாமல் இருக்க, ஒரு உபாயம் கண்டுபிடித்து விட்டனராம் நம்மாட்கள். மிகப் பெரிய வீடு ஒன்றை கடன் போட்டு வாங்கி விடுவது... வரியாக கட்ட வேண்டிய தொகையை, கடனுக்கு கட்டி விடுவது, சொத்துக்கு, சொத்தும் சேர்ந்தது... வரியும் கட்ட வேண்டியது இல்லை!

இந்திய மூளை அபாரமானது; இந்தியாவிலேயே வரி கட்டாமல், 'டேக்கா' கொடுக்கத் தெரிந்தவனுக்கு, அமெரிக்கா எம்மாத்திரம்!

இந்தியர்கள் இப்படி மாளிகைகளாக வீடுகளை வாங்கிக் குவிப்பதால், அங்கேயே பிறந்து, அங்கேயே வாழும், மிடில் லெவல் அமெரிக்கர்களுக்கு, வந்தேறிகளான இந்தியர்கள் மீது, பொறாமை உணர்ச்சி தோன்ற ஆரம்பித்திருப்பதாகவும் கூறுகின்றனர்.

கம்மிங் பேக் டு த பாயின்ட்... இப்போது, கணவருக்கு மும்பையில் ஒரு வேலை கிடைத்துள்ளது. தாய்லாந்தைவிட அதிக சம்பளம்; கார்-வீடு, கம்பெனியே கொடுத்து விடுகிறது. மனைவிக்கும் மும்பையில் வேலை கிடைக்கும்!

கணவன் மனது சபலப்படுகிறது; இந்தியா சென்று விடலாமென்று... மனைவிக்கு விருப்பமில்லை; அவருக்கு அமெரிக்கா சென்று சில வருடங்கள் வேலை செய்ய விருப்பம்!

அதற்கு அவர் கூறும் காரணங்கள்:

* இதே உழைப்புக்கு, அமெரிக்காவில் இரண்டு பங்கு அதிக ஊதியம் கிட்டும்.

*தொடர்பே இல்லாத கலாச்சாரத்தையும், மக்களையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு அமையும்!

*அமெரிக்காவில் வசிக்கும்போது, அங்கேயே குழந்தை பெற்றுக் கொண்டால், அக்குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்கும். அதனால், பின்னாளில் பலன் அதிகம்.

— இப்படி அவர்களுக்குள் விவாதம் நடந்து கொண்டிருக்க, அப்பெண்மணி இது தொடர்பாக எனக்கு, 'ஈ-மெயில்' அனுப்பி இருந்தார். இதோ, கடிதத்தின் சுருக்கம்:

பாசம் மிக்க அண்ணனுக்கு —

நானும், என் கணவரும் இங்கு நலம்! நீங்கள் நலமா? லென்ஸ் மாமா நலமாகவே - 'உற்சாகமாக'வே இருப்பார் என நம்புகிறோம்!

அண்ணா... ஒரு பெண்ணுக்கு, 'தான்' என்ற, 'சுயம்' - பெற்றோரோடு இருக்கும் போதோ - தனியாக வாழும் போதோ தான் இருக்கிறது.

பள்ளி இறுதித் தேர்வில் மாநிலத்தில் முதல் மாணவியாகத் திகழ்ந்தேன். கல்லூரியில் முதல் மாணவியானேன். பட்ட மேற்படிப்பில், 'கோல்டு மெடல்' பெற்றேன்.

சென்னையில் இருந்தபோது, பெரிய பெரிய, 'சாப்ட்வேர்' நிறுவனங்கள் ஒவ்வொன்றும் போட்டி போட்டு சம்பளம் கொடுத்து என்னை வேலையில் அமர்த்திக் கொண்டன.

சின்ன வயதில் இருந்தே நான் ஒரு, 'அன்லக்கி கேர்ள்!' டாக்டருக்கு படிக்க நினைத்தேன்... 'நேரோ' வாக சீட் கிடைக்காமல் போனது... ('கிடைக்காமல் போனது' பற்றி இன்னும் சில எழுதி இருந்தார்!) இப்போது பாருங்கள்... என் அமெரிக்க கனவும் நிறைவேறாமல் போய்விடும் போலுள்ளது.

'லைசன்சுடு செக்ஸ்'க்காக ஒரு பெண், தன், 'சுயத்தை' இழப்பதுதான் நம் நாட்டு பெண்களின் தலையெழுத்து போலும்...

இப்படிக்கு,

அன்பு தங்கை.


— என எழுதியிருந்தார்.

'கணவனே கண்கண்ட தெய்வம்... கல்லானாலும் கணவன்... புல்லானாலும் புருஷன்...' என்று இருந்த நம் பெண்களுக்கு, இன்று, தான், தன் சுயம் என்ற புதிய எண்ணம் மெதுவாக உருவாகி வருகிறதா? இதுபோன்ற புதிய எண்ணம் பெண்களிடம் உருவாகி வருவதற்குக் காரணம் எதுவாக இருக்கும்? இந்த எண்ணம், பெண்களுக்கு எதிர்காலத்தில் நன்மை பயக்குமா - தீமை செய்யுமா?

மண்டையப் போட்டு குழப்பிக் கொண்டுள்ளேன்.

***






      Dinamalar
      Follow us