
அந்த ஊரில் உள்ள நம் அலுவலக விருந்தினர் இல்லத்தில் கடந்த வாரம் தங்கி இருந்தேன்; வேறு பணி இருந்ததால் லென்ஸ் மாமா உடன் வரவில்லை.
அலுவலகப் பணியில் மூழ்கி இருந்த நேரம், விருந்தினர் இல்லப் பணியாளர், போனில் அழைத்து, 'ஒரு மேடம் பேசினாங்க... அவங்களோட போன் நம்பர் கொடுத்தாங்க... பேசச் சொன்னாங்க...' என்று கூறி, ஒரு தொலைபேசி எண்ணைக் கொடுத்தார்.
தொலைபேசியில் அழைத்தவர் ஒரு அரசு அதிகாரி; உயர் பதவியில் உள்ளவர்; 32- - 35 வயது இருக்கலாம்.
அவரது கணவரும், மெத்தப் படித்தவர் தான்... இந்தப் பெண்மணிக்கு இணையான கல்வித் தகுதி உள்ளவர். ஆனால், அரசு வேலை இல்லையே என்ற மனக்குறை உள்ளவர்.
இந்தப் பெண்மணி சென்னையில் படித்தவர்; அவருக்கு திருமணமாவதற்கு முன்பே எனக்கு அறிமுகமானவர்; அந்துமணியின் அதி தீவிர வாசகி...
அந்த குறிப்பிட்ட எண்ணுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். போனை எடுத்தவர், அந்தப் பெண்மணியே தான். வழக்கமான நல விசாரிப்புகள் முடித்த பின், 'என்ன மணி... நான் இருக்கேனா, டிக்கெட் வாங்கிட்டேனா என்று கூட கண்டுக்க மாட்டீங்களா... இரண்டு வருஷமாச்சு நாம பேசி...' என்றார்.
'அய்யய்யோ... அப்படி எல்லாம் இல்ல மேடம்... நீங்க பிஸியான ஆபீஸர்... வீடு, குடும்பம், குழந்தை, குட்டி என்ற பொறுப்புகள் அதிகரித்து விட்டன; அது தான் தொந்தரவு செய்ய வேண்டாமே என இருந்து விட்டேன்...' என்றேன்.
'அட, என்னப்பா தொந்தரவு... ஒரே பிரச்னை தான்; உன்னைப் பார்த்து பேசணுமே...' என்றார்.
'அதுக்கென்ன மேடம்... ஆபீசுக்கு வந்துடுங்களேன் பேசலாம்...' என்றேன்.
'உங்க ஆபீஸ் வேண்டாம்பா...'
'அப்ப என்ன, உங்க ஊர்ல மெரினா பீச்சா இருக்கு... இல்ல, ஸ்டார் ஓட்டல்கள் தான் இருக்கா...'
'இரண்டுமே கிடையாது; ஆனா, ஒரு குட்டி பார்க் இருக்கு... அங்கே ஒரு சின்ன ரெஸ்டாரன்டும் இருக்கு. அங்கே வந்துடுறியா?' எனக் கேட்டு, வரவேண்டிய வழி குறித்துச் சொன்னார்.
மாலை ஏழரை மணியளவில் குறிப்பிட்ட பார்க்கை அடைந்தேன்; எனக்கு முன்பே காத்திருந்தார். முன்பை விட ஒரு சுற்று பருமனாகி இருந்தார், அப்பெண்மணி. களையான அந்த முகத்தில் மாற்றம் ஏதும் இல்லை.
பூங்காவில் காதை பிளக்கும் ஒலியுடன் சினிமாப் பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டிருந்தனர். ரங்கராட்டினம், 'சடசட' என்ற ஒலியுடன் வட்டமடித்தபடி இருந்தது.
சிறிது நேர மவுனத்திற்குப் பின், 'என்ன சாப்பிடுறீங்க?' என்று கேட்டேன்.
'இட்லி ப்ரை' சாப்பிடுவதாகக் கூறினார். அதற்கு ஆர்டர் தந்து, அப்பெண்மணியின் முகத்தைப் பார்த்தேன்.
மிகுந்த வருத்தமான முகத்துடன், 'எனக்கு மட்டும் ஏன் இப்படி...' எனக் கேட்டு நிறுத்தினார்.
'என்ன... திரும்பவும், ஹஸ்பண்ட் பிரச்னை பண்ணுறாரா?' எனக் கேட்டேன்.
'இருந்து பிரச்னை பண்ணல... ஓடிப் போய் பிரச்னை பண்ணுறார். இப்பொழுது எங்கே இருக்கார்ன்னே தெரியல... உடன் இருக்கும்போது முழு நேரக் குடிதான்; போதை தெளிந்து எழுந்ததும் மீண்டும், 'ஒயின் ஷாப்' சென்று குடித்து வருவார்.
'என் பிரசவத்தின் போது எங்கேயோ ஓடி போயிட்டார். என் மாமியார் சைடிலும் உதவி கிடையாது. என் அப்பா, அம்மாவும் ஏற்கனவே காலமாகிட்டது உனக்குத் தான் தெரியுமே... இந்த நிலையில எப்படி தவிச்சுப் போயிருப்பேன்னு நினைச்சுப் பார்...
'நான் எவ்வளவோ பொறுமையாவும், அவருக்கு அடங்கியும் சாதாரண குடும்பப் பெண்ணை விட கீழே இறங்கி, என், 'ஈகோ'வை எல்லாம் மூட்டை கட்டி, அவருக்கு பணிவிடை செய்தும் பயனில்ல; பொண்டாட்டி கவர்ன்மென்ட் வேலை பாக்குறா... தனக்கு அரசு வேலை கிடைக்கலயே என்ற தாழ்வு மனப்பான்மை அவர் மனதில் ஆழமா பதிஞ்சு போயிருச்சு. அதோடு மட்டுமல்லாமல், அம்மா கோண்டுவாக இருக்கிறார். எந்த ஒரு முடிவையும் எடுக்கத் தெரியல. எந்த ஒரு வேலை கொடுத்தாலும், முடிக்கத் தெரியாது; அதே வேலையை நான் போய் முடித்து வந்தால், எரிச்சலடைந்து, என் மீது கோபப்படுறார்.
'தாம்பத்ய உறவுக்கு கூட ஒரு ஆண், 'இனிஷியேட்' செய்வது போல் இவர் செய்வது கிடையாது. என், 'ஈகோ'வை விட்டு அதற்கு அழைக்க எனக்கும் மனமில்லை. இப்போ, குழந்தைகள் தான் எனக்கு ஒரே ஆறுதல். அவர்களுக்கு என் பிரச்னை புரிந்து ஆறுதலாக இருக்கின்றனர். இப்படிப்பட்டவரை என்ன செய்யலாம்?
'ரோட்டில் இளம் தம்பதியினர் குழந்தை, குட்டிகளுடன் ஜோடியாக செல்வதைப் பார்க்கும் போது, 'எனக்கு மட்டும் ஏன் இப்படி...' என்ற ஆதங்கம் தோன்றுகிறது. என்ன செய்யட்டும்...' என்று சொல்லி, என் முகத்தைப் பார்த்தார்.
'உங்கள் கணவரை விவாகரத்து செய்யலாம்ன்னு நினைக்கிறீங்களா?'
'ஓரொரு சமயம் அதுபோன்ற எண்ணம் தலை துாக்கத்தான் செய்யுது...' என்றார்.
'அதன் பின்?' என்றேன்.
'ஆதரவுக்காக ஏங்கும் பார்வையிழந்தவரையோ, உதவி தேவைபடும் ஒரு ஜீவனையோ மணந்து கொள்ளலாம் என்ற எண்ணமும் தோன்றுகிறது...' என்றார்.
'மேடம்... ஆணாதிக்கம், - 'மேல்ஷாவனிஸம்' நிறைந்த உலகம் இது. உங்கள் எண்ணப்படியே நீங்கள் மணந்து கொண்டாலும், கூட வரப் போகிறவர் இன்னும் என்னென்ன குடைச்சல் கொடுப்பார் என்பது யாருக்கும் தெரியாது.
'ஆணின் மறுமணத்தை சுலபமாக ஏற்றுக் கொள்ளும் இந்த சமூகம், பெண்ணுக்கு அது போல் நடந்தால் ஏற்றுக் கொள்வதில்லை.
'பல சினிமாக்களில் பார்த்திருப்பீர்கள்... இரண்டாவதாக வீட்டிற்கு வரும் மனைவியிடம் சுவரில் போட்டோவாகிப் போன முதல் மனைவியின் படத்தைக் காட்டி, 'இந்த மகாலட்சுமி வாழ்ந்த வீடு இது, அக்கா படத்தை வணங்கி ஆசி பெற்றுக் கொள்...' என, கணவர் கூறுவதைப் பார்த்திருப்பீர்கள்...
'இதே ஒரு பெண், படமாகிப் போன தன் முதல் கணவரின் போட்டோவைக் காட்டி, தன் இரண்டாவது கணவரிடம், 'ஆசி வாங்கிக் கொள்ளுங்கள்...' எனக் கூறுவது போல் ஏதாவது சினிமாவில் காட்டியிருக்கிறார்களா?
'கனவுத் தொழிற்சாலையிலேயே ஏற்றுக் கொள்ளப்படாத இந்த விஷயம், நிஜ வாழ்க்கையில் எப்படி சாத்தியப்படும். ஆணாதிக்கம் நிறைந்த நாடு நம்முடையது. எனவே, எரியும் நெருப்பில் இருந்து எண்ணெய் சட்டியில் விழும் எண்ணத்தை கை விடுங்கள்...
'ஒரு சிலருக்கு கண் இல்லாத, வாய் பேச முடியாத, காது கேட்காத, ஒரு கிட்னியுடன், இதயத்தில் ஓட்டையுடன், கால், கை அற்று, சில சமயம் ஆணும் இல்லாமல், பெண்ணுமில்லாமல் குழந்தைகள் பிறக்கின்றன.
'உங்களுக்கோ, எந்த உடல் குறையும் இல்லாத மணிமணியான இரண்டு குழந்தைகள் உள்ளன. இக்குழந்தைகளின் எதிர்காலத்திற்காக, சில தியாகங்களை செய்தே ஆக வேண்டும்.
'இந்தக் குழந்தைகளுக்கு அப்பா ஒருவர் இருக்கிறார் என்ற ஒரு ஆறுதலே போதும்; என்றாவது ஒருநாள், அவர் திருந்தி வந்து, உங்களுடன் சேர்ந்து கொள்ளக் கூடும்.
'நமக்கு என்ன குறை... எல்லாமே இருக்கிறது நம்மிடம்... இருந்தாலும், அது இல்லை; இது இல்லை என, நமக்கு நாமே துன்பத்தை ஏற்படுத்திக் கொள்கிறோம்.
'பாதி டம்ளர் தானே நீர் இருக்குது...' என, அரை குறை நீர் உள்ள கோப்பையைப் பார்த்து கூறுவதை விட, 'காலியாக இல்லாமல் இருக்கிறதே...' என, எண்ணும் பக்குவம் வேண்டும்.
'கை நிறைய சம்பாத்தியம், மன நிறைவான வேலை, குடியிருக்க வீடு இருக்கிறது; குறையில்லாத, நன்கு படிக்கும் குழந்தைகளும், நல்ல நட்பும் இருக்கிறது.
'இதையெல்லாம் நினைத்துப் பாருங்கள்... 'எனக்கு மட்டும் ஏன் இப்படி...' என்ற ஸ்தோஸ்திரத்தை இப்போதே விட்டு ஒழியுங்கள்; நிம்மதி பிறக்கும்...' என, நீண்ட லெக்சர் கொடுத்து, பில்லைக் கொடுத்து புறப்பட்டேன்.
இதை எழுதும் நாள், என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர், என், 'அட்வைஸ்' நல்ல பலன் கொடுத்து வருவதாகக் கூறினார்!

